பதிவு செய்த நாள்
25
ஜூன்
2019
04:06
ராமாயணத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் ராமனும், சீதையும். இதில் ராமனுக்கு ஏராளமான கோயில்கள் உள்ளன! ஆனால் சீதைக்கு இந்தியா முழுவதும் அபூர்வமாய் அங்கு ஒன்று... இங்கு ஒன்று என உள்ளன!
மகாவிஷ்ணுவின் மனைவியான லட்சுமிக்கு ஏராளமான கோயில்கள்.சிவனின் மனைவியான பார்வதியை அப்படியேயும், துர்கை எனவும் பல இடங்களில் சக்தி பீடங்களாக வழிபடுகின்றனர். மகாபாரத நாயகி திரௌபதிக்குக் கூட ஏராளமான கோயில்கள் உள்ளன. ஆனால் சீதைக்கு? இருக்கும் சில கோயில்களை காண்போம்:
1. சீதாமார்கி - பீகார்: பீகாரின் வடகோடியில் மிதிலா ஜில்லாவில் சீதாமார்கி உள்ளது. இங்குதான் சீதா பிறந்தாள் என்பது பீகார் மக்களின் நம்பிக்கை. இங்கு ஜனகரால் கலப்பையில் உழுதபோது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைதான்... சீதா! அந்த இடம் இன்றும் சீதாகுந்த் என்ற பெயரில் இங்கு உள்ளது! ""எங்க ஊர் மாப்பிள்ளை ராமர் என ஸ்ரீராம நவமியை கண்காட்சியுடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் ஊர் இது.
2. புல்பல்லி - சீதாகோயில்: வயநாடு கேரளா அருகே... புல்பல்லி என ஒரு ஊர் உள்ளது. உண்மையில் இது லவ - குசனுக்கான கோயில்.
இங்கு லவ - குசனுடன் சீதை தங்கியிருந்தபோது, அஸ்வமேத யாகத்திற்காக ராமரால் அனுப்பப்பட்ட குதிரையை சகோதரர்கள் பிடித்துக் கட்டிவிட, பிறகு அதனை விடுவிக்க ஒருகட்டத்தில், ராமர் வந்து, லவ-குசர்களுடன் கடும் யுத்தம் செய்தார். அப்போது சீதை, ராமன்முன் வந்து, ""நீங்கள் சண்டையிடுவது உங்கள் மகன்களே எனக் கூறி, ""நான் நிரந்தரமாய் விடைபெற்றுக் கொள்கிறேன் எனக் கூறி, பூமி பிளந்து, உள்ளே சென்றதும் இங்குதான் என்பது பலரது வாதம்! காலிகட் -மைசூர் சாலையில் மீனான் குடி சென்று அங்கிருந்து இருபது கிலோ மீட்டர் பயணித்தால், இந்தக் கோயிலை அடையலாம்.
3. ஹரியானா - சீதாமாய் கோயில்: ஹரியானாவின் கர்னால் ஜில்லாவில் சீதாமாய் கோயில் அமைந்துள்ளது. டெல்லியிலிருந்து 143 கிலோ மீட்டர். இங்குதான், சீதைக்காக பூமிபிளந்து உள்ளே இறங்கினாள் என்கின்றனர் உள்ளூர் வாசிகள். சுவாமி விவேகானந்தரின், ராமகிருஷ்ண மிஷனுக்கும் இந்த ஊருக்கும் சம்பந்தம் உண்டு.
4. உத்தரகாண்ட -சீதாராணி கோயில்: உத்தர காண்டின் நைநிடால் ஜில்லாவில் ராம்நகரிலிருந்து, 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இங்கும் ராமநவமி ரொம்ப விசேஷம். சீதாதேவி, பூமிக்குள் பிளந்துகொண்டு சென்றது இந்த இடம்தான் என்பது உள்ளூர் வாசிகளின் ஒரே குரல்! சீதாவை ராணி என்கின்றனர். ராமர் ராஜா என்றால் சீதா ராணிதானே என்பதும் இவர்களது வாதம்! ஒரேஒரு கஷ்டம் என்னவென்றால் இந்தக் கோயில், ஜிம்கார்பெட் தேசிய பூங்கா பகுதியில் அமைந்துள்ளது. இதனால் சீதா ராணியைத் தரிசிப்பதுடன் சவாரி சென்றால், புலி, யானை, நரி, சிறுத்தை உட்பட பல மிருகங்களையும் காணலாம்.
5. சீதா சமஜீத் கோயில்: உத்தரப் பிரதேசத்தில் சந்த்பூர் ஜபல்பூர் சாலையில் நானோவ் என ஒரு கிராமம் உள்ளது. அதிலிருந்து ஒரு கிலோ மீட்டரில் சீதா சமஜீத் கோயில் அமைந்துள்ளது. இங்கு சீதாவுக்கு சிலை கிடையாது. இந்தக் கோயிலிலிருந்து சற்றுத்தள்ளி துரோணாச்சாரியாருக்கும் ஒரு கோயில் உள்ளது. இரண்டையும் பார்த்துவிடலாம்.