மதுராபுரி சொக்கநாதர் அருளால் தனக்கென அடையாளம் காட்டப்பட்ட அருளாளரை குருநாதராகப் பெற்றவர் ஞானசம்பந்தர். இறைவன் இவருக்கு அடையாளம் காட்டிய குருநாதர் திருவாரூர் ஞானப்பிரகாச தேசிகர்.கை விளக்கு: ஞான சம்பந்தர் திருவாரூரில் குருநாதருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு வாழும் காலத்தில் ஒருநாள், சீடர் பலருடன் தாமும் குருவுடன் கோயிலுக்குச் சென்று அர்த்தஜாமத் தரிசனம் செய்து கொண்டு திரும்பும் நேரத்தில், கைவிளக்குப் புரிவான் (பணிவிடை புரிவோன்) தூங்கிவிட்டதை அறிந்தார் ஞானசம்பந்தர். தானே கை விளக்குக் காட்டிச் சென்றார். மடத்திற்குள் நுழையும் முன் ஞானப்பிரகாச தேசிகர் ஞான சம்பந்தரை நோக்கி ""நிற்க என்று ஞானசம்பந்தரிடம் ஆணையிட்டு உள்ளே சென்று விட்டார்.
ஞானசம்பந்தரின் நிலை: குருநாதரின் கட்டளைப்படியே கைவிளக்கைப் பிடித்த வண்ணம் அவர் தமக்கு உபதேசித்த சிவஞான நிலையில் திளைத்து பொழுதுவிடியும் அளவும் நின்று கொண்டிருந்தார். அன்றிரவு பெருமழை பெய்தது. ஆனால் ஞானசம் பந்தரை மழை நனைக்கவுமில்லை. ஒரு கல் தூர சுற்றளவில் சுற்றிலும் குடை அமைந்தது போல ஒரு சொட்டுத் தண்ணீர் கூட பூமியில் விழாத நிலையில் பெருமழை பொழிந்தது. பொழுது விடிந்தது. குரு பத்தினியார் ஞானசம்பந்தரின் நிலை கண்டார். வியப்படைந்தார். வந்த வேகத்தில் திரும்பி ஓடினார். தன் கணவரிடம் நிலை அறிவித்தார். குருநாதர் திருவருள் ஆற்றலைச் சிந்தித்தார். கண்களில் நீர் ததும்ப விரைந்து சென்று ஞானசம்பந்தரைத் தன் இரண்டு கைகளால் அணைத்துக் கொண்டார். ""நீர் அனைவருக்கும் அருள் ஒளி வழங்கும் குருவாகிவிட்டீர். நீர் உம்மை வந்தடையும் பக்தர்களுக்கு சிவஞான உபதேசம் செய்வீர். சமயப் பரிபாலனம் நடத்துக என்று கட்டளையிட்டார். தமிழையும், சைவத்தையும் வளர்த்து வரும் தருமையாதீனத்தின் நிறுவனரான குரு ஞானசம்பந்தர் சிவபோகசாரம் முதலான சாத்திர நூல்களையும், பல தோத்திர நூல்களையும் அருளிச் செய்தார்.