பதிவு செய்த நாள்
25
ஜூன்
2019
04:06
துளசி, தர்ப்பை, வில்வம் உள்ள இடங்கள் மிகவும் பவித்திரம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. நாணல் வகையைச் சேர்ந்த இந்தப் புல், ராமர், திருமேனி பட்டதால் ஏற்றம் பெற்றது. தர்ப்பை உஷ்ண வீரியம் உள்ளது. அதிவேகமானது. நீரை தூய்மைப்படுத்தக் கூடியது. விஷத்தை முறிக்க வல்லது. கிரஹண காலங்களில் பரவும் நச்சுத் தன்மையினை நீக்க உப்புக் கலந்த உணவுப் பொருட்களில் தர்ப்பையைப் போட்டு வைப்பதை இன்றும் காணலாம். தர்ப்பையை வடமொழியில் "அக்னி கர்ப்பம் என்பர்.
கும்பாபிஷேகத்தின் போது யாகசாலையிலுள்ள கும்பத்தின் ஆற்றலை பிம்பத்தில் ஒடுக்கும் கிரியையில் தங்கம், வெள்ளி கம்பிகளுடன் முக்கியமாக தர்ப்பைக் கயிற்றைப் பயன்படுத்துவர். தர்ப்பையில் ஆண் தர்ப்பை, பெண் தர்ப்பை, அலி தர்ப்பை என மூவகை உண்டு. ஆண் தர்ப்பை அடி முதல் முடிவரை சமமாக உடையது. மேலே தடித்துக் காணப்படுவது பெண் தர்ப்பை. அடியில் தடித்துக் காணப்படுவது அலிதர்ப்பை, தர்ப்பையின் அடியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், நுனியில் சிவனும் வாசம், செய்கின்றனர்.
தேவர்களை நினைத்துச் செய்யும் தர்ப்பணத்தில் தர்ப்பையின் நுனியாலும், மனிதர்களை நினைத்துச் செய்யும் தர்ப்பணத்தில் தர்பையின் நடுவாலும், பிதுர்களை நினைத்து செய்யும்போது தர்பையினை மடித்து நுனியாலும் தர்ப்பணம் செய்ய வேண்டும். வைதீகச் சடங்கின்போது, "பவித்திரம் என்ற தர்ப்பையிலான மோதிரத்தை வலதுகை மோதிர விரலில் அணிந்து கொண்டே கர்மத்தைத் தொடங்க வேண்டும். இவ்விரலில் கபநாடி ஓடுவதால் அதில் தர்ப்பையை அணியும்போது சுபசுத்தி ஏற்படுகிறது. பிரதே காரியங்களில் ஒரு தர்ப்பத்தினாலும், சுப காரியங்களில் இரண்டு தர்ப்பங்களினாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பங்களினாலும், தேவ காரியங்களில் நான்கு தர்ப்பங்களினாலும், யாகங்களில் ஐந்து தர்ப்பங்களாலும், சாந்தி கர்மாக்களில் ஆறு தர்ப்பங்களாலும் பவித்திரம் முடியப்பட வேண்டும். பகவதாராதனம், ஜபம், ஹோமம், தானம், தர்ப்பணம் அனைத்திலும் பவித்திரம் அணிவது அவசியம். தர்ப்பைப் புல்லில் காரமும், புளிப்புச் சுவையும் இருப்பதால் செப்பு விக்கிரகங்களை தர்ப்பைச் சாம்பலால் தேய்க்க வேண்டுமென சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. இதனால் விக்கிரகங்களின் மந்திர ஆற்றலும் குறையாது. நீண்ட நாள் பிரகாசத்துடனும் துலங்கும்.
தர்ப்பையை ஆதிவாரமாகிய ஞாயிற்றுக் கிழமையில் எடுத்தால் ஒரு வாரம் வைத்துக் கொள்ளலாம். அமாவாசையில் பறித்தால் ஒரு மாத காலம் பயன்படுத்தலாம். பவுர்ணமியில் எடுத்தால் ஒரு பக்ஷ காலம் உபயோகிக்கலாம். ஆவணியில் எடுத்தால் ஒரு ஆண்டு காலம் பயன்படுத்தலாம். புரட்டாசியில் எடுத்தால் ஆறு மாதம் வைத்துக் கொள்ளலாம். சிரார்த்த காலத்தில் எடுத்தால் அன்று மட்டுமே பயன்படும். தர்ப்பைகளை நுனிப்புறம் ஒழுங்காக அடுக்கி, வலப்புறமாக முறுக்கி, முடிச்சிட்டு அடிப்பாகத்தை மட்டமாக வெட்டி அமைக்கப்படுவது கூர்ச்சமாகும். கூர்ச்சமானது கும்பங்களின் மீது வைத்துள்ள தேங்காய்களின் மேல் முடியாக வைக்கப்படும். கூர்ச்சம் கும்பத்தின் பிரதிநிதியாகக் கருதப்படும். பிரதான கும்பங்கள் அமைக்கும் போது அலங்கார கூர்ச்சத்தை விட தர்ப்பையினாலான இன்னுமொரு கூர்ச்சம் கும்பத்தினுள்ளே வைக்கப்படும். இக்கூர்ச்சங்கள் மந்திர சக்தியை ஆவாஹனம் செய்யப்படும் தெய்வ சக்தியை சேமித்து வைக்கப் பயன்படுகிறது. மாவிலை, தர்ப்பை இரண்டுமே நல்ல அதிர்வுகளைக் கொண்டிருக்கின்றன. யாகத்தைக் காப்பதற்கு வைக்கப்படும் யாகேஸ்வர தேவரின் கும்பத்தில் உள்ள ஞானகட்கம் (அறிவாகிய வாள்) தர்ப்பையால் செய்து அமைக்கப்படும். பிரம்ம கூர்ச்சம் சிறப்பாக ஐம்பது தர்ப்பங்களால் (சரஸ்வதி ஐம்பது அட்சர வடிவமானவள் என்பதைக் குறிக்க) அமைக்கப்படுகிறது.