பதிவு செய்த நாள்
25
ஜூன்
2019
04:06
நம் நாடு ஒரு விசித்திரமான நாடு! நம்பிக்கைகளுக்கும். அது சார்ந்த சில நூதன செயல்களுக்கும் பேர் போன நாடு! லே பகுதியில் ஒரு காளிகோயில் உள்ளது. இதன் பக்கமே கர்ப்பவதிகள் போக மாட்டார்கள். ஏன்? மீறிப் போனால் கர்ப்பம் அழிந்து விடுமாம்! அதேசமயம் நமது தஞ்சை மாவட்டத்தில் கர்ப்பரட்சாம்பிகையை தரிசிப்பதே குழந்தை பாக்கியம் கேட்டுத்தான்! கிடைத்த இடத்தில் எல்லாம் மணிகளாகக் கட்டும் கோயில்: உத்திரகாண்டின் கோரக்கால் பகுதியில் ஒரு கொலு தேவதா கோயில் உள்ளது. இந்தக் கொலு தேவதா... சிவன்! இந்தப் பகுதி மக்கள் ராட்சசனால் படாதபாடு பட்டபோது, குதிரையில் சிவபெருமான் வந்து, அவனை அழித்து, மக்களைக் காப்பாற்றினாராம்! அதனால் அவரே உத்தரகாண்டின் இந்தப் பகுதிக்குக் குலதெய்வம்!
குமான் கார்வால் - நைனிடால் பகுதிகளில் கொலு தேவா நம்பிக்கை தெய்வம்! அது மட்டுமல்ல! நீதியை வழங்குபவர்!! நமது கோர்ட்டுகள் வழங்குவதுபோல் இல்லாமல், இவரிடம் சண்டை சச்சரவுகள் பற்றி எழுதி வைக்கப்படும் மனுக்களுக்கு உடனே தீர்ப்பைத் தருபவர். இப்படிப் பல்லாயிரக்கணக்கான பிரச்சனைகள், இவரிடம் மனுவாக அளிக்கப்பட்டு முடிவுக்கு வந்துள்ளன! பலன்.. நன்றியாக பலர், இங்கு மணியை வாங்கிக் கட்டிச் செல்கின்றனர். இதன் பொருள், இவரிடம் மணியடித்து முறையிட்டால், சிவனே நீதிபதியாக, நல்ல தீர்ப்பு வழங்குவார் என்பதாகும். தினமும் 100 மனுக்கள் ஒருபக்கம் கட்டப்படுகின்றன. மறுபக்கம் மணி வாங்கிக் கட்டுவதும் பெருகிக் கொண்டே போகிறது. இந்த மணிகள் தூண்களில், மரங்களில், குறுக்கு இரும்புப் பாலங்களில், சுவற்றில் எனப் பல இடங்களில் கட்டப்பட்டுள்ளன!
காடாத்துணி காணிக்கையாக: திரிபுரா மாநிலத்திற்கு அப்பெயர் வந்ததற்குக் காரணமே திரிபுரசுந்தரிதான்! ஆக சுந்தரி, திரிபுரா மக்களின் குலதெய்வம்! இங்கு ஒரு நூதனப் பழக்கம் அமுலில் உள்ளது! இங்கு அம்மனுக்கு, காரியம் முடிந்ததும் நன்றியாக, பிணத்திற்குப் போர்த்தப்படும் காடாத் துணியை வழங்குகின்றனர். இந்த கோயில் கத் - குனி கட்டிடக் கலையைப் பின்பற்றிக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இங்கு ஜுனில் நடக்கும் மேளா ரொம்ப விசேஷம். பிணம் சுற்றும் காடாத் துணியை பைசாகி மாதமுதல் தேதியன்று தருவது கூடுதல் விசேஷம்! இந்தக் கோயிலில், கூடுதலாக பிரம்மா, விஷ்ணு, சிவன் - பார்வதி, லட்சுமி ஆகியோரும் உள்ளனர்! மரமே கடவுள்: இமாசலப் பிரதேசத்தில் கடோத்கஜனுக்கு மனாலியில் கோயில் உள்ளது.
பாண்டவர்களில் பீமனுக்கும் ஹிடும்பிக்கும் பிறந்தவன் கடோத் கஜன். ஹிடும்பி மந்திர வேலைகளில் வல்லவள். கடோத்கஜனும் மாய -மந்திர வேலைகளில் வல்லவன். மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் பக்கம் இவன் சண்டையிட்டதால், கவுரவப் படையினருக்கு ஏகப்பட்ட நஷ்டம். இவனுடைய மாய -மந்திர பவனிகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல், ஒரு கட்டத்தில் கர்ணன், அர்ஜுனனைக் கொல்ல வைத்திருந்த விசேஷ அம்பை, இவன் மீது ஏவிக் கொன்று விடுகிறான்! இங்கு மரம்தான் கோயில், அதன் கீழே கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஒரு தியோதர் மரம்தான், பக்தர்களின் காணிக்கைகளைத் தாங்குமிடமாக உள்ளது. கத்தி, சூலம், போர்வாள், காட்டு மிருகங்களின் கொம்பு எனப் பல, இந்த மரத்தில் சொருகியோ, தொங்கவிடப்பட்ட நிலையிலோ காணலாம்! இராணுவத்தினர் வணங்கும் குண்டு வெடிக்காத கோயில்: டானாட் மாதா கோயில், லோங்கே வாலா, ராஜஸ்தான்- இந்தக் கோயில், பாகிஸ்தானிய எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. தார் பாலைவனத்தின் இறுதி முனை. 1965 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் சண்டை நடந்தபோது, இந்தக் கோயிலும் - போடப் பட்ட குண்டுகளிலிருந்து தப்பவில்லை. ஆனால் ஓர் ஆச்சர்யம்! கோயிலினுள் விழுந்த ஒரு குண்டு கூட வெடிக்கவில்லை. மேலும் கோயிலுக்கும் ஒரு சிறு சேதம் கூட ஏற்படவில்லை. இதனால் நமது இந்தியப் படைவீரர்களின் நம்பிக்கைத் தாயாக மாறி விட்டாள்! இந்தப் பகுதிக்கு வரும் பார்டர் செக்யூரிட்டி வீரர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து, ""சண்டை நடந்தாலும். சேதமில்லாமல் தப்பி, தொடர்ந்து கடமையைச் செய்யவும். குடும்பத்தைக் காக்கவும் உதவ வேண்டும் என வேண்டி இங்கு கர்ச்சீப் துணியைக் கட்டிவைக்கிறார்கள்.
எந்த சேதாரமும் இல்லாமல் திரும்பும்போது மறக்காமல் இந்தக் கர்ச்சிப்பையும் கழட்டி எடுத்துச் செல்கிறார்கள்! அன்னைக்கும் மூன்றுநாட்கள்: காமாக்யா கோயில்! கவுஹாத்தி, அஸ்ஸாம். மிகப் பழமையான சக்திபீடம். கவுஹாத்தி நகரிலிருந்து ஐந்து கிலோ மீட்டரில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் என்ன சிறப்பு? சக்தியின் யோனி விழுந்த இடம்! ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்கள் அன்னைக்கு மாதவிலக்கு நாட்கள். கர்ப்பகிரகத்தினுள், சில படிகள் இறங்கிச் சென்றால், யோனி போன்ற அமைப்பு கொண்ட சிறு கற்பலகையைக் காணலாம். இதன்மீது தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கிறது! என்ன ஆச்சர்யம் என்றால், மாதத்திற்கு மூன்று நாட்கள் இந்த இடத்தில் சிவப்பு நிறம் பளிச்சிடுகிறது. இதனைப் பார்ப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள்! அதனைத் துடைக்கும் துணியை வாங்கக் கடும் போட்டி உண்டு!
குதிரைக்கும் சன்னதி: மல்ஹாரி மார்த்தாண்ட் கோயில் ஹைஜீரி, புனே மகாராஷ்டிரா. புனே மாவட்டத்தில், உள்ள இந்தக் கோயில் ஹோல்கார் மன்னர்களைச் சார்ந்தது.
இங்கு ஒரு சிவலிங்கமும், ஆமைகளின் சிலைகளும் உள்ளன. சிவலிங்கத்தின் பின்னால் மஹா கசாகாந்த் என அழைக்கப்படும், காண்டோபாவின் சிலை உள்ளது. சிவபெருமானின் ஒரு அவதாரம்தான் ""காண்டோபா என மக்கள் நம்புகின்றனர்.! ஒரு காலத்தில் மணிமல்லாரி என்ற அரக்கன் இந்தப் பள்ளத்தாக்கில் வசித்து வந்ததுடன் இந்தப் பகுதியில் உள்ளவர்களைப் பாடாய்ப் படுத்தி வந்தான்! பல பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, சிவபெருமான் மலாகாசர் என்ற அவதாரத்தை எடுத்து, குதிரை மீது அமர்ந்து வந்து அந்த அரக்கனை துவம்சம் செய்தாராம். இதனால் இவர் மல்ஹாரி என அழைக்கப்பட்டு இங்கேயே நிரந்தரமாய் குடிகொண்டு விட்டார். அவர் வந்ததாகக் கருதப்படும் குதிரைக்குக் கூட இங்கு தனி சன்னதி உள்ளது! குறிப்பாகத் திருமணமான ஜோடி இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். செழுமைக்கென வணங்கப்படும் இவரால், "குழந்தை பாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம், இங்கு எங்கெங்கு திரும்பினாலும் மஞ்சள் வண்ணத்தைக் காணலாம்!