பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
12:06
சூலுார்: பெருமாள் கோவிலில் மூலவர் மீது, ஆறு மாதம் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடக்கிறது. இதனை, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு, சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோவை மாவட்டம், சூலுார் அருகே கலங்கல் கிராமத்தில், ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், ஏறத்தாழ, 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
இக்கோவிலில், உத்ராயண காலம் (தை முதல் ஆனி மாதம் வரை) முழுவதும், மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழ்கிறது. மிகவும் பழமைவாய்ந்த கோவில் என்பதால், இது குறித்து யாரும் அறியாத நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட பட்டாச்சார்யார் விஜயராகவன், இதனை கண்டறிந்து, நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். அதன் பின்னரே, இது வெளியே தெரிய ஆரம்பித்தது.
கோவில் பரம்பரை அறங்காவலர் சாந்தினிதேவி வெங்கடேஷ் கூறியதாவது: உத்ராயண காலம் முழுவதும், சூரிய பகவான் பெருமாளை வணங்கி செல்லும் அற்புத வைபவம் நடக்கிறது. தை முதல் ஆனி மாதம் முடிய, தினமும் காலை, 6:10 முதல் 6:40 மணி வரை ஸ்ரீ சூரிய பகவான், கல்யாண வெங்கட்ரமண பெருமாளை, திருவடி முதல் திருமுடி வரை வணங்கி வழிபடுவது ஓர் உன்னதமான அதிசயம். இந்த காலகட்டத்தில், பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, மனமுருகி வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பதை பல நேரங்களில் பார்த்துள்ளோம். ஜாகதத்தில், சந்திர தோஷம் உள்ளவர்கள், திங்கட்கிழமை ராகு, கேதுவுடன் இணைந்துள்ள ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாளை தரிசித்தால், சந்திரதோஷ பாதிப்பு விலகும். இவ்வாறு, அவர் கூறினார்.
பெருமாள் மீது சூரிய ஒளி விழுவதை அறிந்த பக்தர்கள் பலரும், தினமும், காலை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து செல்கின்றனர். திருப்பூர் வீரராசேந்திரன் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது: இக்கோவிலின் துாணில் செதுக்கப்பட்டுள்ள, 36 கட்டங்களில், சைவம், வைணவம், சமணம் ஆகிய சமயங்களின், ஆறு வகையான குறியீடுகள் உள்ளன. இக்குறியீடுகள், 3000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டவையாகும். நம் முன்னோர்கள் மிகச்சிறந்த கட்டடகலை மற்றும் வானிலை அறிவு கொண்டவர்கள் என்பதற்கு, இக்கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழுவது சாட்சியாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.