பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
01:06
மேட்டுப்பாளையம்:ஓதிமலையை சுற்றியும் கிரிவலப்பாதையில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற, பெத்திக்குட்டை பொது மக்கள் ஜமாபந்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுமுகையை அடுத்த பெத்திக்குட்டை ஓதிமலையில், முருகன் கோவில் உள்ளது. ஓதிமலையை சுற்றியுள்ள கிராம மக்கள் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும், மலையை சுற்றி கிரிவலம் வருவது வழக்கம்.
காலப்போக்கில் கிரிவலப்பாதையில் முட் செடிகள், மரங்கள் புதர்போல் வளர்ந்துள்ளன. இவற்றை வெட்டி அகற்ற மக்கள் இறங்கிய போது, சிறுமுகை வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, கிரிவலப்பாதையை சுத்தம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் அல்லது, வனத்துறையே பாதையை சுத்தம் செய்து தர வேண்டும் என்று பக்தர்களும், ஊர் மக்களும், மேட்டுப்பாளையத்தில் நடந்த ஜமாபந்தியில், ஆர்.டி.ஓ., டெய்சிகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆர்.டி.ஓ., பரிசீலிப்பதாக கூறினார்.இது குறித்து, , பா.ஜ., மாவட்ட செயலாளர் சக்திவேல் கூறியதாவது: ஓதிமலையை சுற்றியும் கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்கள் கிரிவலம் வந்து, தமிழ்க்கடவுளான முருகனை வழிபடுகின்றனர். இக்கிரிவலப்பாதை வருவாய்த்துறைக்கு சொந்தமான இடமாகும். காலப்போக்கில் இந்த இடத்தில் சமூக காடு வளர்ப்பு திட்டத்தில் மரங்கள் வளர்க்க, சிறுமுகை வனத்துறை முன் வந்தனர். அங்கு மரங்கள் ஏதும் வளராத நிலையில் முட்புதர்கள் வளர்ந்து பாதையை மறைத்துக் கொண்டது. இதனால் கிரிவலம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.மேலும், முட் செடிகளை ஊர் பொது மக்கள் வெட்டி அகற்றிவிட்டு, கிரிவலம் செல்ல மக்கள் முடிவு செய்தனர். அதற்காக முட்செடிகளை வெட்ட முயற்சி செய்த போது, சிறுமுகை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.அதனால் முட்புதர்களை அகற்ற அனுமதி வழங்க வேண்டுமென, கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.