பெண்ணாடம்: நூறு ஆண்டுகள் பழமையான நரசிங்கமங்கலம் நாக நாதீஸ்வரர் கோவிலை புனரமைக்க, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணாடம் அடுத்த நரசிங்கமங்கலத்தில், 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான சிவகாமி அம்மன் உடனுறை நாக நாதீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடப்பது வழக்கம். போதிய பராமரிப்பின்றி, கடந்த 20 ஆண்டுகளாக புனரமைப்பின்றி கோவில் பாழாகி வருகிறது. மேலும், கோவில் சுவர்களில் செடிகள் வளர்ந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. பழுதடைந்த கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தற்போது ஒரு கால பூஜை மட்டுமே நடந்து வருகிறது. இக்கோவிலில் பூஜை செய்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும். தீராத நோய் தீரும் என்பது ஐதீகம். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். எனவே, நரசிங்கமங்கலத்தில் பாழடைந்த நாக நாதீஸ்வரர் கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.