பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
05:06
காஞ்சிபுரம்: காஞ்சி அத்தி வரதர் வைபவத்தில், சகஸ்ர நாம அர்ச்சனைக்காக, ஒரு நபருக்கு, 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதற்கான டிக்கெட் பெற,(www.tnhrce.org) என்ற இணைய தளத்தில் விண்ணபிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “உள்ளூர்கார்களுக்கு, இன்று (ஜூன்., 26ல்) முதல், ’பாஸ்’ வழங்கப்படும், ” என, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
பல்வேறு தகவல்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், வரும் திங்கட்கிழமை முதல் துவங்கவுள்ள அத்தி வரதர் வைபவத்துக்கான முன்னேற்பாடு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தரிசன நேரம், கட்டணம் உள்ளிட்டவை குறித்து, ஏற்கனவே பல்வேறு தகவல்களை மாவட்ட நிர்வாகம் தெளிவாக தெரிவித்து உள்ளது. இந்நிலையில், “காஞ்சிபுரத்தில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் வைத்திருக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, பாஸ் வழங்கப்படும்,” என, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். வட்டார போக்குவரத்து அலுவலகம், இப்பணியை மேற்கொள்ள உள்ளது. கலெக்டர் வளாக மைதானத்தில், இன்று (ஜூன்., 26ல்) முதல் அமைக்கப்படும் உதவி மையத்தில், நான்கு சக்கர வாகனங்களுக்கான, ‘பாஸ்’ வழங்கப்பட உள்ளது. வரும், 30 க்குள் பெற்றுக் கொள்ள அறிவுபவர்கள், உள்ளூர் முகவரிக்கான ஆதார் அட்டையும், வாகன உரிம சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்; வாகனத்தை கொண்டு வர வேண்டாம் என, கலெக்டர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.
இந்த பாஸ் வழங்கப்படும் நோக்கம் குறித்து, துணை கலெக்டர் ஒருவர் கூறியதாவது: நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் விசாரித்து தான், போலீசார் அனுப்புவர். அத்தி வரதர் வைபவத்துக்கு காரில் வரும் பக்தர்களை, தற்காலிக பார்க்கிங்கில் இறக்கி, அங்கிருந்து இலவச பஸ் மூலம், கோயிலுக்கு அனுப்புவோம். தரிசனம் முடிந்த பின், கோயிலில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் மூலம், கார் பார்க்கிங் இடத்திற்கு வந்து காரில் செல்லலாம்.
தொந்தரவு: உள்ளூர் கார்களை நிறுத்தும்போது, இந்த ‘பாஸ்’ காண்பித்தால், அவர்களை நகருக்குள் போலீசார் அனுமதிப்பர். மற்றபடி, வெளியூரிலிருந்து பிற வேலைக்காக வருபவர்கள், நோயாளிகள், முதியவர்களை தொந்தரவு செய்யாமல், நகருக்குள் அனுமதிப்பர். இவ்வாறு, அவர் கூறினார்.
சகஸ்ர நாம அர்ச்சனை: ‘சகஸ்ர நாமம் அர்ச்சனைக்காக ஒருவருக்கு 500 ரூபாய் கட்டணம் என, அறநிலையத்துறை அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு, 500 பேர் அனுமதிக்கப்படுவர். இந்த சகஸ்ர நாமம் அர்ச்சனைக்கான டிக்கெட்டுகள் பெற. (www.tnhrce.org) என்ற இணையதள முகவரியில், ஜூலை, 4 முதல் விண்ணப்பிக்கலாம். முதல் மூன்று நாட்களுக்கு, கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஜூலை, 4 முதல், சகஸ்ர நாமம் அர்ச்சனை டிக்கெட்டுகள் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் பெறும் பக்தர்கள், மேற்கு ராஜகோபுரம் வழியாக சென்று, எளிதில் தரிசனம் செய்து திரும்பலாம்