பதிவு செய்த நாள்
27
ஜூன்
2019
03:06
பல்லடம் அருகே, ஐம்பொன் சிலை திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம்: பல்லடத்தை அடுத்த அருள்புரத்தில், நவசக்தி நாராயணீ பீடம் எனப்படும் மடாலயம் உள்ளது. அங்கு, 1.5 அடி உயரமுள்ள நாராயணீ ஐம்பொன் சிலை வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. அச்சிலை, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், வேலூர் பொற்கோவில் இருந்து கொண்டுவரப்பட்டு, அருள்புரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது, அருள்புரத்தை சேர்ந்த செந்தில்குமார், 34 என்பவர், அங்கு பூஜை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பூஜைகளை முடித்துக் கொண்டு, மடாலயத்தை பூட்டி சென்றார். நேற்று காலை, 6 மணிக்கு மடாலயத்தை திறந்து பார்த்தபோது, நாராயணீ ஐம்பொன் சிலையை காணவில்லை. மடாலயத்தின் மேற்கூரை பிரிந்து காணப்பட்டதால், திருடர்கள் ஐம்பொன் சிலையை திருடி சென்றிருக்கலாம் என, செந்தில்குமார் பல்லடம் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். காணாமல் போன ஐம்பொன் சிலை, 2.50 லட்சம் ரூபாய் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.