திருப்புவனம் அருகே கீழடி இரட்டைச்சுவர் தொடர்ச்சி கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2019 11:07
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் இரட்டைச்சுவரின் தொடர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல்துறை சார்பில் 47 லட்ச ரூபாய் செலவில் 5ம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 13ம் தேதி முதல் நடந்து வருகிறது.
இதில் முருகேசன் என்பவரது நிலத்தில் பண்டைய கால இரட்டைச்சுவர் கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியை கண்டறிய ஜி.பி.ஆர்., கருவி மூலம் ஆய்வு நடத்தப்பட்டபின் கூடுதலாக ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் இரட்டைச்சுவரின் வடகிழக்கு பகுதி யில் அதன் தொடர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது.சுவர்களில் உள்ள கற்கள் சரிந்த நிலையில் கட்டட சுவர் கிடைக்கப்பெற்றுள்ளது. தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த கட்டடத்தின் சுவர் மொத்தம் 40 மீட்டர் நீளம் இருக்க வாய்ப்புள்ளது. முழு அளவிலான செங்கற்களை பயன்படுத்தி கட்டுமானம் செய்துள்ளனர். ஒவ்வொரு செங்கல்லும் 30 செ.மீ., நீளமும், 11 செ.மீ., அகலமும் கொண்டதாக உள்ளது. தற்போதைய கட்டட அமைப்பு பிடிமானத்திற்காக செங்கற்களை உடைத்து இடையிடையே சிறுசிறு செங்கற்கள் வைப்பது வழக்கம்.ஆனால் சங்க கால கட்டடத்தில் செங்கல் அனைத்தும் முழுமையாக ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து கட்டம் கட்டியுள்ளனர். எப்படி கட்டடம் பிடிமானம் இன்றி நிலையாக இருந்தது என தெரியவில்லை. காவிரி பூம்பட்டினம் பகுதியில் கிடைத்த சுவருக்கும், கீழடி சுவருக்கும் ஒற்றுமை உள்ளது. கீழடியில் இதுவரை கிடைத்த சுவரின் கட்டுமானத்தை பார்க்கும் போது இது நீளவாக்கில் கட்டப்பட்ட பெரிய சுவர் என தெரியவருகிறது. முழுமை யாக கிடைத்தபின் தான் அதனுடைய பயன்பாடு குறித்து தெரிய வரும் என்றனர்.