பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
11:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், அத்தி வரதரை, ஜனாதிபதி ராமநாத் கோவிந்த், குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், வெகு விமரிசையாக நடைபெறுகிறது. தினமும், சராசரியாக, ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அத்தி வரதரை தரிசிக்க, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், குடும்பத்தினருடன் விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி ராம்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர் காஞ்சிபுரம் வந்தனர். அங்கு, அவரை கலெக்டர் பொன்னையா வரவேற்றார். தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். கோயிலில், ஜனாதிபதிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதியுடன் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் உதயகுமார் உடன் வந்தார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோயிலை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள், தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2,000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கருட சேவை: ஆனி கருடசேவை உற்சவம், நேற்று (ஜூலை., 11ல்),, வரதராஜ பெருமாள் கோவிலில், விமரிசை யாக நடைபெற்றது. இரவு, 7:20 மணியளவில், கோவிலில் இருந்து புறப்பட்ட சுவாமி, மாடவீதி களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.