பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
12:07
மதுரை: மதுரையில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் வைகை பெருவிழாவை முன்னிட்டு புட்டுத்தோப்பில் ஜூலை 24 ல் துறவியர் மாநாடு நடக்கிறது.மாநாட்டு பந்தலை பார்வையிட்டு சுவாமி சிவானந்தா சுந்தரானந்தா கூறியதாவது: வைகையின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வைகை பெருவிழா மக்களுடன் இணைந்து நடத்தப்படும். ஜூலை 24ல் புட்டுத்தோப்பில் துறவியர் மாநாட்டுடன் துவங்குகிறது.
ஆடிப்பெருக்கு நாளான ஆக.,3 ல் ஒரு லட்சம் பக்தர்கள் புனித தீர்த்தமாடுவதற்கு வசதியாக புட்டுத்தோப்பு வைகை ஆற்றின் கரையில் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.கங்கா, கோதாவரி, யமுனா, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளின் பெயர்களில் ஆற்றுக்குள் தற்காலிகமாக ஏழு உறை கிணறுகள் அமைக்கப்படும். அவற்றின் புனித நீரால் ஆகாவாகனம், வைகையில் வழிபாடு நடத்தப்படும். 12 நாள் நடக்கும் விழாவில் பெண்கள் மாநாடு, இளைஞர் மாநாடு, சன்மார்க்க மாநாடு, கோ பூஜை, அன்னதானம் வழங்கப்படும். அனைத்து சமய, சமுதாய அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மாநாடு, நிறைவு விழா நடத்தப்படும், என்றார்.சுவாமிகள் ராமானந்தா, சிவயோகானந்தா, வேதாந்த ஆனந்தா உடனிருந்தனர்.