பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
02:07
காஞ்சிபுரம்:அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு, அஞ்சல் துறை சார்பில், இரு இடங்களில், ’கங்கா ஜல்’ என அழைக்கப்படும், புனித கங்கை நீர் விற்பனை மையம் துவக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம், ஜூலை, 1ம் தேதி துவங்கியது. இந்த வைபவத்திற்கு, வெளியூர், வெளிநாடுகளில் இருந்து, பக்தர்கள் வருகின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்கள், ’கங்கா ஜல்’ என அழைக்கப்படும், புனித கங்கை நீரை வாங்கிச் செல்ல சவுகரியமாக, இரு இடங்களில், விற்பனை மையம் அமைக்க உள்ளனர்.அதன்படி, சின்ன காஞ்சிபுரம் அஞ்சலகம் மற்றும் கோவில் அருகே என, இரு இடங்களில், இம்மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. ”பக்தர் கள், 30 ரூபாய் கொடுத்து, கங்கை புனித நீரை வாங்கிச் செல்லலாம்,” என, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சிவாஜி கணேஷ் தெரிவித்துள்ளார்.
வடமாநிலமான உத்தரகண்ட் உள்ளிட்ட இடங்களில் பாயும் கங்கை நதி நீரை, அஞ்சல் துறை, ’பார்சல்’ செய்து, வீட்டிற்கே அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தவிர, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், அத்திவரதர் தபால் தலை வெளியிடுவதற்கு, அஞ்சல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.உயர் அதிகாரிகள் வரும் தேதி கிடைத்த பின், சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என, கூறப்படுகிறது.