சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளி கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
இக்கோயிலில் 65ம் ஆண்டு பூச்சொரிதல் விழா ஜூலை 5 அன்று கொடியேற்றம், காப்புக்கட்டுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், பிள்ளை தொட்டி, முடி காணிக்கை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் 7 ம் நாளான நேற்று காலை 10:30 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் பிள்ளைவயல் காளி குழந்தையுடன் எழுந்தருளினார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட பனை ஓலை தேரில் வீதி உலா வந்தார். நேற்று காலை முதலே நகரில் உள்ள அனைத்து கோயில்களில் இருந்தும் பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து, பிள்ளைவயல் காளிக்கு பூச்சொரிந்து தரிசனம் செய்தனர். கோயில் செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில் அறநிலையத்துறையினர் மற்றும் விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிவகங்கை எஸ்.பி., ரோஹித்நாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* சிவகங்கை நேருபஜார் வீரமாகாளி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டிநேற்று காலை சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் மாலை பூச்சொரிதல் விழாவும் நடந்தது. நேற்றிரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிம்ம வாகனத்தில் வீரகாளியம்மன் வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு வள்ளி திருமண நாடகமும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.