அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 13 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், நேற்று முன்தினம் இரவு மீனாட்சி திருக்கல்யாணம் கோயில் வளாகத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர்.
கல்யாணத்திற்கு வந்திருந்த பெண்களுக்கு தாலிச்சரடு, வளையல், மஞ்சள் குங்குமம், பூ வழங்கப்பட்டது. பெண்கள் தங்கள் தாலியை சாமி முன்பு மாற்றிக் கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்த உடன் அன்னதானம் நடந்தது. நேற்று மாலை 6:30 மணிக்கு தேர்விழா நடந்தது. சாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்து நிலையை அடைந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படியார்களின் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.