பதிவு செய்த நாள்
17
ஜூலை
2019
12:07
திருப்பதி: நாட்டின் பணக்கார சுவாமியாக கருதப்படும், திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க செல்லும் பக்தர்கள் அனைவருக்கும், சம வாய்ப்பு விரைவில் கிடைக்க உள்ளது. அதற்கு இடையூறாக இருக்கும், வி.ஐ.பி., பிரேக் தர்ஷன் முறை, விரைவில் நீக்கப்பட உள்ளது.
நாள் தோறும், சராசரியாக, 80 ஆயிரம் முதல், ஒரு லட்சம் பக்தர்கள், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்கின்றனர். இதற்காக, எவ்வித கட்டணமும் இல்லாத, தர்ம தரிசன வரிசை உள்ளது. குறைந்தபட்சம், 6 - 12 மணி நேரம் காத்திருந்து, சுவாமியை தரிசிக்க முடியும். இது தவிர, கட்டண தரிசனம், வி.ஐ.பி.,கள் தரிசனம் போன்ற தரிசன முறைகளும் உள்ளன. வெங்கடாஜலபதியை தரிசிக்க வரும், வி.ஐ.பி.,களின் அந்தஸ்துக்கு ஏற்ப, பொது தரிசன வரிசை தடுத்து நிறுத்தப்படும்; வி.ஐ.பி.,கள் நிதானமாக தரிசனம் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்படும். தினமும், நான்கைந்து முறை, வி.ஐ.பி., தரிசன வசதி அளிக்கப்படுகிறது. அந்த நேரத்தில், தர்ம தரிசனம் மற்றும் பிற வரிசைகளில் வருவோர், சில நேரங்களில், அதிகபட்சம், ஆறு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இதை எதிர்த்து, நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள, ஆந்திர முதல்வர், ஜெகன்மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினர், ஒய்.வி.சுப்பா ரெட்டி, வி.ஐ.பி., தரிசன முறையை ரத்து செய்ய முன்வந்துள்ளார். இரண்டொரு வாரங்களில், இதற்காக, திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகக்குழு கூட்டம் கூட உள்ளது. அதில், வி.ஐ.பி., தரிசனத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.
முன்னுதாரணம்: துணை ஜனாதிபதி, வெங்கய்யா நாயுடு, ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். திருப்பதிக்கு சமீபத்தில் வந்த இவர், சாதாரண பக்தர்கள் செல்லும் வரிசையில், குடும்பத்தினருடன் சென்று, சுவாமியை தரிசனம் செய்தார். இதற்காக, வைகுண்டம் க்யு காம்ப்ளக்ஸ் வழியாக சென்றார். தரிசனத்திற்கான கட்டணத் தொகையையும் அவர் செலுத்தினார். அவரின் தரிசனத்திற்காக, பக்தர்கள் நிறுத்தப்படவில்லை. வழக்கமாக, வி.ஐ.பி.,கள், மஹாதுவாரம் என்ற வழியில், கோவில் நிர்வாகிகளால் அழைத்துச் செல்லப்படுவர்.
வி.ஐ.பி.,கள் வகை: திருப்பதிக்கு வரும், வி.ஐ.பி.,கள், எல் - 1, எல் - 2, எல் - 3 என்ற பிரிவுகளில் வகைபடுத்தப்படுகின்றனர். ஜனாதிபதி, பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள் போன்றோர், எல் - 1 பிரிவில் வருகின்றனர். அரசின் மூத்த அதிகாரிகள், எல் - 2 பிரிவில் வருகின்றனர். வி.ஐ.பி.,கள் மற்றும் திருப்பதி, திருமலை தேவஸ்தான நிர்வாகிகளின் சிபாரிசு கடிதங்களை பெற்றுள்ளவர்கள், எல் - 3 பிரிவில் வருகின்றனர்.