பதிவு செய்த நாள்
17
ஜூலை
2019
01:07
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக்குண்டம் விழாவை அடுத்து, குண்டம் கண் திறக்கப்பட்டது.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, வரும், 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்குகிறது. 26ம் தேதி லட்சார்ச்சனையும், 28ம் தேதி கொடியேற்றமும், 30ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவை அடுத்து, நேற்று காலை, பகாசூரன் சிலை முன்பு, 36 அடி நீளம், 2 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தை சுற்றியும் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.கோவில் பூசாரிகள் தண்டபாணி, ஜோதிவேலவன் ஆகியோர் குண்டத்தை வலம் வந்து பூஜை செய்தனர். பின்பு குண்டத்தில் கண் திறக்கப்பட்டு கிடா வெட்டப்பட்டது. அதன் பிறகு குண்டத்தை சுற்றியும் பக்தர்கள் கற்பூரமும், ஊதுபத்தியும் ஏற்றி வழிபட்டனர்.இம் மாதம், 31ம் தேதி ஆடி அமாவாசையும், பூ பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும், ஆக., 2ம் தேதி மஞ்சள் நீராட்டும், 3ம் தேதி ஆடிப்பெருக்கும், 5ம் தேதி, 108 குத்துவிளக்கு பூஜையும், 6ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி கமிஷனர் ஹர்சினி, கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.