பதிவு செய்த நாள்
17
ஜூலை
2019
02:07
திருத்தணி: ஜூலை 17--ஊராட்சியில் உள்ள கோவில் குளத்தை, தனியார் தொண்டு நிறுவனம் துார்வாரி, கரைகள் சீரமைக்கும் பணிகளை நேற்று(ஜூலை., 16ல்) துவங்கி உள்ளன.
சென்னை, தி.நகரில், விவேகானந்தா அறக்கட்டளை என்கிற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம், 400 கிராமங்களில், ஓராசிரியர் பள்ளி ஏற்படுத்தி, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- - மாணவியருக்கு, மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை இலவசமாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவாலங்காடு ஒன்றியம், காஞ்சிப்பாடி கிராமத்தில் உள்ள, முத்துமாரியம் மன் கோவில் குளம், தண்ணீரின்றி வறண்டு கிடந்தது.இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால், அந்த கிராமத்தில் உள்ள, 400 குடும்பத்தினர் மற்றும் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும்.தற்போது, குடிநீர் பஞ்சம் ஏற்பட்டதால், விவேகானந்தா அறக் கட்டளை நிறுவனம் கோவில் குளத்தை துார் வாரி சீரமைத்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்து வதற்கு தீர்மானித்து, அதற்கான பணிகள் நேற்று (ஜூலை., 16ல்) துவக்கப்பட்டன.
துவக்க விழாவில், ஓராசிரியர் பள்ளி நிறுவன தலைவர், கிருஷ்ணமூர்த்தி, செயலர், கிருஷ்ண மாச்சாரி மற்றும் காஞ்சிப்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், மணி ஆகியோர் பங்கேற்று, குளத்தை துார்வாரும் பணியை துவக்கி வைத்தனர்.தற்போது குளத்தில், இரண்டு, ஜே.சி.பி.,இயந்திரம், மூன்று டிராக்டர்கள் மூலம் துார் வாரும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.இந்த நிறுவனத்தின் நோக்கம் கோவில் குளம், கிராம குளம் ஆகியவை மட்டும் துார் வாரி சீரமைக்க திட்டமிட்டுள்ளது.முதற்கட்டமாக, காஞ்சிப்பாடியில் துவங்கப்பட்டுள்ளது என, அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.