மதுரை : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அறநிலையத்துறை கமிஷனர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி புதுக்குடியிருப்பு சந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடம் மற்றும் காந்தி மண்டபம் அருகே பகவதி அம்மன் கோயிலு க்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். சன்னதி தெரு படகுத்துறை கடற்கரை சாலை பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் நிரந்தர கட்டுமானங்கள் எழுப்பி கடைகள் அமைத்துள்ளனர். இப்பகுதியில் நிரந்தர கட்டுமானங்களுக்கு அனுமதியில்லை. ஐயப்பன் கோயில் சீசனுக்கு மட்டுமே கடைகள் நடத்த அனுமதிப்பதாக கூறுகின்றனர். ஆனால் ஆண்டுதோறும் கடைகள் நடத்தப்படுகின்றன.
கடற்கரை மேலாண்மைச் சட்டப்படி அனுமதி பெற வேண்டும். அந்த விதிகள் பின்பற்றப்பட வில்லை. அனுமதியற்ற மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு சந்திரன் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாரா யணன் பி.புகழேந்தி அமர்வு ’அறநிலையத்துறை கமிஷனர் சுசீந்திரம் இணை கமிஷனர் பகவதி அம்மன் கோயில் நிர்வாக அலுவலர் ஆக.6 ல் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என்றனர்.