பதிவு செய்த நாள்
18
ஜூலை
2019
11:07
பேரையூர், :மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சாப்டூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 27 முதல் ஆக. 1 வரை நடக்கிறது. காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மலை மீது பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர்கள் ராஜசேகர் (மதுரை) சிவஞானம் (விருதுநகர்) எஸ்.பி.க்கள் மணிவண்ணன் ராஜராஜன் அறநிலையத்துறை இணைகமிஷனர் நடராஜன் ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை பேரையூர் டி.எஸ்.பி. மதியழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கோயிலுக்கு மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறையில் இருந்து 8 கி.மீ. துாரம் நடந்து செல்லவேண்டும். விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை, மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு, தேனி மாவட்டம் உப்புத்துறை ஆகிய மலைப்பாதை வழியாக கோயிலுக்கு செல்லாம். பக்தர்களின் வசதிக்காக சதுரகிரி, தாணிப்பாறை, வாழைத்தோப்பு, காத்தாடிமேடு, குளிராட்டி தீர்த்தம், சங்கிலிப்பாறை, இரட்டைலிங்கம் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்படும்.காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மட்டும் மலை மீது பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் கழிவறை வசதிகள் செய்யப்படவுள்ளன. தாணிப்பாறை விலக்கில் 10 ஏக்கர் பரப்பளவில் வாகன காப்பகம் அமைக்கப்படும். வாகனங்களை இங்கு நிறுத்தி விட்டு 7 கி.மீ. துாரம் உள்ள தாணிப்பாறைக்கு பஸ்களில் தான் செல்லவேண்டும். 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அன்னதானம் வழங்க அழைப்பு: சதுரகிரியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணிக்கு தன்னார்வலர்கள் பங்கேற்க கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. சதுரகிரியில் செயல்பட்டு வந்த தனியார் அன்னதான மடங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளதை தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் போதிய உணவு, தண்ணீர் இன்றி அவதிபடுகின்றனர்.ஆடி அமாவாசையை முன்னிட்டு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1 வரை பல லட்சம் பக்தர்கள் வரும் நிலையில் அன்னதானம் வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அன்னதானம் தயார் செய்யும் பணி , முறையாக பக்தர்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக உபயதாரர்களிடமிருந்து அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் பெற்று ரசீது பெற்று கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு 04563-288 155, 98946 69320, 94425 17403.