பதிவு செய்த நாள்
18
ஜூலை
2019
02:07
புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில், மாங்கனி திருவிழாவையொட்டி, காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.
காரைக்கால் அம்மையார், 63 நாயன்மார்களில் ஒருவர். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெண் நாயன்மாரான இவரது வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், காரைக்காலில் மாங்கனி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில், சிறுதொண்ட நாயனார் திருத்தொண்டு சபை சார்பில், ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 17ம் ஆண்டாக நேற்று முன்தினம் மாங்கனி திருவிழா நடந்தது.காலை 9:00 மணி முதல் பகல் 1:00 வரையில், வேதபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி மற்றும் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதை தொடர்ந்து, மாங்கனிகளால் உருவாக்கப்பட்ட தேரில் காரைக்கால் அம்மையார் எழுந்தருள செய்யப்பட்டு, ஆலய உள்பிரகார புறப்பாடு நடந்தது. அப்போது, காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனி குவித்து வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.இரவு, காரைக்கால் ராமசாமி தமிழ்க்கல்லுாரி முன்னாள் முதல்வர் முருகசாமியின், காரைக்கால் தாய் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.