பதிவு செய்த நாள்
19
ஜூலை
2019
10:07
மதுரை: ஆடி வெள்ளியையொட்டி, அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடி மாத வெள்ளிக் கிழமைகள் தனிச் சிறப்பு மிக்கவையாக சொல்லப்பட்டுள்ளன. இந்த நாட்களில் அம்மனுக்கு கூழ்வார்த்தும்; வேப்பிலை, மஞ்சள் அரைத்துப் பூசியும்; பாற்குடம், முளைப்பாரி எடுத்தும் வழிபடுவது சிறப்பான பலன்தரும் என்பது ஐதிகம். ஆண், பெண் இருபாலரும் தீமிதித்து வழிபடுவதும் உண்டு. ஆடி வெள்ளி நாட்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால், ஆரோக்கியம் சீராகும். பெண்கள் பலர் கூடி திருவிளக்கு பூஜை செய்வதும் சிறப்பானது. இந்த நாட்களில் கோயில்களிலும் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரங்கள், பூஜைகள் செய்வர். இவற்றுள் தனிச் சிறப்பானது சாகம்பரி அலங்கார பூஜை. முழுக்க முழுக்க காய்கனிகளால் அம்மனை அலங்கரித்து நடத்தப்படுவதே இந்த பூஜை. இந்த அலங்காரத்தில் அம்மனை தரிசித்தால், ஆண்டு முழுதும் உணவுப் பஞ்சம் இருக்காது என்பது நிச்சயம்.
இன்று ஆடிவெள்ளியை முன்னிட்டு, ஏராளமான பெண்கள், பொங்கலிட்டு, அம்மனை வழிபட்டனர். கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் உள்ள ஸ்ரீ பட்டீஸ்வரர்-அருள் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.