பதிவு செய்த நாள்
19
ஜூலை
2019
11:07
சென்னை: காஞ்சிபுரம், அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் உறையினை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், , சென்னை ராஜ்பவனில் வெளியிட்டார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 1979ம் ஆண்டிற்கு பின், கடந்த ஜூலை 1ம் தேதி, அனந்த புஷ்கரணியில் இருந்து, அத்தி வரதர் வெளியே வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் உறை வெளியிட, ஹிந்து அறநிலையத் துறை சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.
அதன்படி, நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய, 1,000 சிறப்பு கவர்களை, அஞ்சல்துறை வெளியிட்டுள்ளது. அதன் மதிப்பு 50 ரூபாய். பக்தர்கள் வசதிக்காக, ஒரு லட்சம் அஞ்சல் சிறப்பு உறைகள் தயாரித்து, 20 ரூபாய்க்கு வழங்குகிறது. இதற்காக, அண்ணா சாலையில் தலைமை அஞ்சலம், காஞ்சிபுரம், தேவராஜ சுவாமி கோவில் அருகில், சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, கங்கை புனித நீர் பாட்டிகளும், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. அத்தி வரதர் அஞ்சல் சிறப்பு உறையினை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேற்று மாலை, ராஜ்பவனில் வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில், கவர்னரின் கூடுதல் முதன்மை செயலர் ராஜகோபால், முதன்மை அஞ்சல் துறை தலைவர்கள் சம்பத், சாருகேசி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆனந்த், ஹிந்து அறநிலைத் துறை கமிஷனர் பனீந்திர ரெட்டி, செயல் அலுவலர் தியாகராஜன் உட்பட பலர்பங்கேற்றனர்.
ஏரிக்கரையில் பொங்கல்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகில் உள்ள அம்மையப்பநல்லுாரில், பருவமழையை வரவேற்று ஆண்டு தோறும் ஆடி மாதம் துவங்கும் முன் ஏரிக்கரையில் பொங்கல் வைத்து கிராமத்தினர் வழிபடுகின்றனர். அங்குள்ள வேப்ப மரத்துக்கு புதுத்துணி அணிவித்து மழை வேண்டி குறி கேட்கும் பழக்கமும் உள்ளது.