பதிவு செய்த நாள்
19
ஜூலை
2019
02:07
கூடலுார் : முதுமலை யானைகள் முகாமுக்கு, காயங்களுடன் வந்த சமயபுரம் கோவில் யானை மசினி, சிகிச்சை முடிந்து பழைய நிலைக்கு திரும்பியது.
முதுமலை, கார்குடி அருகே, 2006ல் தாயை பிரிந்து மீட்கப்பட்ட குட்டி யானையை வனத் துறையினர் மீட்டு, ’மசினி’ என பெயரிட்டு தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரித்து வந்தனர். கடந்த, 2015ல், மசினி சமயபுரம் கோவிலுக்கு அனுப்பபட்டது. அப்போது அதன் உடல் எடை, 2,600 கிலோவாக இருந்தது. மாறுபட்ட சூழலுக்கு மாறிய மசினி, இரண்டு பாகனங்களை தாக்கியதுடன், 2018 மே 25ல் பாகன் ஒருவரை தாக்கி கொன்றது; எட்டு பேர் காயமடைந்தனர். உடலில் காயங்களுடன் தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லுாரியில், சிகிச்சை பெற்று வந்த ’மசினி’ மதுரை ஐகோர்ட் உத்தரவுபடி ஜன., 4ம் தேதி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது; உடல் எடை, 1900 கிலேவாக இருந்தது.
யானைகள் முகாமில், அதற்கு தனி அறை ஒதுக்கப்பட்டு, காயங்களுக்கு சிகிச்சை அளித்து ஊட்டசத்து உணவுகளை, வனத்துறையினர் வழங்கி வந்தனர். இதன் மூலம், மசினி உடல் மற்றும் மனதளவில் சகஜ நிலைக்கு மாறியது. மேய்ச்சலுக்கு வனத்தினுள் செல்ல துவங்கி யது. தொடர்ந்து, இரு வாரங்களுக்கு முன், மருத்துவ சிகிச்சை நிறுத்தப்பட்டது. தற்போது, குளித்த பின் ஆலிவ் ஆயில் மட்டும் உடலில் பூசி வருகின்றனர். வனத்துறையினர் கூறுகை யில், ’தொடர் மருத்துவ சிகிச்சை மூலம், உடல் நிலை முழுமையாக தேறி விட்டது. தற்போது அதன் உடல் எடை, 2400 கிலோவாக அதிகரித்துள்ளது. மற்ற வளர்ப்பு யானைகள் போன்று, மகிழ்ச்சியாக வனத்தில் மேய்ச்சலுக்கு சென்று வருகிறது,’ என்றனர்.