பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
11:07
காஞ்சிபுரம்: அத்தி வரதரை தரிசிக்க சென்று, கூட்ட நெரிசலில் சிக்கி, நான்கு பேர் இறந்ததை அடுத்து, வி.ஐ.பி., தரிசனம், மாலை, 6:00 மணிக்கு மேல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், இன்றைய(ஜூலை 19) தரிசனத்தில், முதியவர் ஒருவர் இறந்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளி இருக்கும், அத்தி வரதரை தரிசிக்க, தினமும், லட்சக்கணக்கானோர் வருகின்றனர். நேற்று (ஜூலை 18) இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சு திணறலால், நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால், மூலவர், வரதராஜ பெருமாள் தரிசனம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வி.ஐ.பி.,
தரிசனம், இன்றில் இருந்து, மாலை, 6:00 மணிக்கு மேல் ரத்து செய்யப்படுவதாக, கலெக்டர், பொன்னையா அறிவித்துள்ளார்.
நான்கு பேர் இறப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையால், இன்று, பக்தர்கள் கூட்டம் குறைந்திருந்தது. எனினும், அத்தி வரதரை தரிசித்து விட்டு, வெளியே வந்த, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 70, என்பவர் இறந்தார்.இதுவரை, அத்தி வரதரை தரிசிக்க வந்து, ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக, நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வரதராஜ பெருமாள் கோவில் அருகே, மத்திய அரசின் சிறப்பு திட்டத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை கல் விழுந்து, அத்தி வரதர் தரிசனத்திற்கு வந்த குரோம்பேட்டை சுரஷே் மகள் பிரேமிகா, 5, கால் எலும்பு முறிந்தது. பிரேமிகா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தி வரதரை தரிசனம் செய்வதற்கு வசதியாக, ஆன்லைனில், 300 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்யும் வசதியை, நேற்று முதல், அறநிலையத் துறை துவக்கியுள்ளது. 500 ரூபாய் கட்டண பாஸ், ஏற்கனவே உள்ளது.
அராஜகம் செய்யும் ஏ.எஸ்.பி.,: வரதராஜ பெருமாள் கோவில் உள்ளே, செய்தி சேகரிக்க செல்வதற்காக, நிருபர்களுக்கு, கலெக்டர், பொன்னையா, பாஸ் வழங்கியுள்ளார். வி.ஐ.பி., தரிசனம் வழியாக, சென்ற நிருபர்களை, உள்ளே செல்ல விடாமல், ஸ்ரீபெரும்புதுார் ஏ.எஸ்.பி., ராஜஷே்கண்ணா தடுத்து நிறுத்தினார். பாஸ் வைச்சிருக்கியா... டோனர் பாஸ் வழியாக போங்க, என்றார். அப்போது, பாஸ் இல்லாத பலரை, வி.ஐ.பி., என்ற பெயரில், உள்ளே செல்ல, அவர் அனுமதித்தார். இதை, நிருபர்கள் கேட்டதற்கு, அதை கேட்க நீ யார். நிருபர்னா எல்லாத்தையும் கேள்வி கேப்பியா என, பொதுமக்கள் முன்னிலையில் ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசினார். இதனால், ஏ.எஸ்.பி.,க்கும், நிருபர்களுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது.பின், அங்கு வந்த ஏ.டி.எஸ்.பி., மாணிக்கம், நிருபர்களை சமாதானப்படுத்தி, கோவிலுக்குள் அனுப்பினார். இது குறித்து, மாவட்ட கலெக்டரிடமும், புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும், எஸ்.பி.,யிடம் தெரிவித்து, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.