பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
11:07
சிவகங்கை : ஆடி வெள்ளியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
ஆடி வெள்ளியை முன்னிட்டு கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன், சிவகங்கை பிள்ளைவயல் காளிகோயில் உட்பட அனைத்து அம்மன் கோயில்களில் நேற்று காலை முதல் இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அம்மன் சன்னதி முன் பெண் பக்தர்கள் எலுமிச்சை மற்றும் மாவிளக்கில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் காமாட்சிஅம்மன் அலங்காரத்தில் காட்சிஅளித்தார். கொல்லங்குடி வெட்டுடையார் காளி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு, நெய்விளக்கு ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெரும்பாலான கோயில்களில் பெண்கள் அங்கப்பிரதட்சணம் செய்து அம்மனை வழிபட்டனர்.
பக்தர்களுக்கு கம்மங்கூழ் பிரசாதம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடிவெள்ளியில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. அம்மனுக்கு அதிகாலையிலேயே, சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டுச் சென்றனர். பக்தர்கள் அம்மனுக்கு கூழ் படைத்தும், பக்தர்களுக்கு ஊற்றியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஆடி முதல் வெள்ளி என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.போலீசார் மற்றும் கோயில் நிர்வாகத்தின் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளால் பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசனம் செய்தனர்.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரத்தில் ஆடி முதல் வெள்ளியன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். உச்சி கால பூஜையின் போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அம்மனை தரிசனம் செய்வர்.
இந்தாண்டு போலீசார், தீயணைப்பு துறையினர், கோயில் நிர்வாகம் ஆகியோர் இணைந்து முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.கோயில் வளாகத்தில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் வரிசையாக சென்று அம்மனை தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தின் நான்கு பிரகாரத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கோயில் வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பக்தர்கள் மைக் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டு வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். உச்சி கால சிறப்பு பூஜை முடிவடைந்த பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மானாமதுரை டி.எஸ்.பி., கார்த்திகேயன், கோயில் செயல் அலுவலர் செல்வி உள்ளிட்டோர் செய்திருந்தனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. மடப்புரம் விலக்கு வரை மட்டுமே ஷேர் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்டன.