மேட்டுப்பாளையம்:ஆடி வெள்ளியை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.மேட்டுப்பாளையம் பழைய சந்தையிலுள்ள மைக்கண் மாரியம்மன், மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவிலில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு மஞ்சள் திருமுக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சர்க்கரை பொங்கல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் சிவன்புரம் ஆசிரியர் காலனியில் ராஜஅஷ்டவிமோச்சன மகாகணபதி கோவிலிலுள்ள துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.