காஞ்சிபுரம் : பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையான நேற்று(ஜூலை 20) காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் எனவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சிரமமின்றி நேற்று அத்தி வரதரை தரிசனம் செய்து சென்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் அதிகளவில் பக்தர்கள் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்து செல்கின்றனர். சில நாட்களாக நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்றாடம் வந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை ஐந்து பேர் இறந்தனர். இதனால் பக்தர்கள் ஏராளமானோர் பீதியடைந்துள்ளனர். பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையான நேற்று லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்றும் கோவிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் நிற்ககூட இடமிருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு சனிக்கிழமைகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். ஆனால் நேற்றைய சனிக்கிழமை முற்றிலும் வேறாக இருந்தது. பக்தர்கள் பெருமளவில் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். கோவிலின் வடக்கு மாடவீதிகள் காலியாகவே இருந்தன. வரிசைகள் அனைத்தும் காலியாக இருந்ததைக் கண்டு பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர்.பக்தர்கள் சிலர் இறந்ததாலும் சனிக்கிழமை கூட்டம் அதிகம் இருக்கும் என்ற அச்சத்தாலும் பக்தர்கள் குறைவாக இருந்திருக்கலாம் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு மணி நேரத்தில்..: சராசரியாக இரண்டு மணி நேரத்தில் பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் களைப்பாகக் கூடாது என்பதற்காக பிஸ்கட் குடிநீர் உள்ளிட்டவை பல்வேறு இடங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பக்தர்களும் நேற்று சிரமமின்றி அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.
சிறப்பு தரிசனம்: டோனர் பாஸ் வைத்திருப்பவர்கள் மாலை 6:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 6:00 மணிக்கு மேல் ஸ்பீட் தரிசனம் பெயரில் 300 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 300 ரூபாய் கட்டணத்தில் ஒரு நாளைக்கு 500 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் முதல் இந்த நடைமுறை துவங்கியுள்ளது.