பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
11:07
சென்னை: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, அதிகாலை, 4:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, வடபழனி கோவில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடபழனி முருகன் கோவிலில், 26ம் தேதி, ஆடிக்கிருத்திகை விமரி சையாக நடைபெற உள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்ய, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலின் தெற்கு ராஜகோபுரம் எதிரில், பொது தரிசனத்திற்காக, இரண்டு வரிசைகளும்; 50 ரூபாய் கட்டணத்தில், சிறப்பு தரிசனத்திற்காக, ஒரு வரிசையும் அமைக்கப்பட்டுள்ளன. வரிசையில் செல்லும் போதே, அர்ச்சனை சீட்டுகளை பெற்று கொள்ளலாம். சிறப்பு விரைவு தரிசனத்திற்கான, 100 ரூபாய் நுழைவுச்சீட்டு, கோவிலின் ராஜகோபுர வாசலில், காலை, 4:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, விற்பனை செய்யப்படும். காவடி துாக்குவோர், மேற்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் வந்து, வடக்கு மாடவீதி மற்றும் கிழக்கு மாவடவீதி வழியாக, உற்சவர் அர்ச்சனை செய்யுமிடத்தில், காவடிகளை செலுத்தலாம். காவடிக்கு, கட்டணம் ஏதுமில்லை. அதிகாலை, 4:00 – 12:00 மணிக்கு, சிறப்பு அலங்கார தரிசனம்; மதியம், 1:00 முதல், மாலை, 4:00 மணி வரை, தங்க கவச அலங்கார தரிசனம்; மாலை, 4:00 முதல், இரவு, 11:00 மணி வரை, சந்தன காப்பு புஷ்ப அலங்கார தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், சுகாதாரம், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கோவிலுக்கு வந்து செல்ல, மாநகர போக்குவரத்து கழகத்தின் வாயிலாக, சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.