பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
03:07
முன்பு ஒரு ஊருக்குப் போக வேண்டும் என்றால் தெரிந்தவர்களிடம் வழி கேட்போம். ஆனால் இப்போதோ ஸ்மார்ட் போனில் கூகுள் மேப்பை பயன்படுத்துகின்றோம். ஒரு இடத்திற்கு போக அது பல வழிகளைக் காட்டும். சரி...நாம் போக விரும்பாத இடம் ஒன்றும் இருக்கிறது. அங்கு நம்மையும் அறியாமல் சில நேரம் பயணிக்கிறோம். அந்த இடம் பற்றியும், செல்லும் வழி பற்றியும் ஏற்கனவே பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறியிருக்கிறார்.
”த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன: காம: க்ரோத ஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத் த்ரயம்த்யஜேத்” (16.21) பொருள்: நரகத்திற்கு காமம், குரோதம், லோபம் என்னும் மூன்று வாசல்கள் உள்ளன. மூன்றும் ஜீவனைக் கெடுக்கும் தன்மை கொண்ட இவற்றை, துறத்தல் வேண்டும். ஆனால் மனதைக் கட்டுப்படுத்த தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக நாம் அங்கே போகிறோம். இவற்றை தவிர்க்க வேண்டும் எனில் மனம் விழித்தெழ வேண்டும்.
இப்போது கோபத்தை அடக்கும் முறைகளை சற்று சிந்திப்போம். சில சமயம் தலை வலிக்கிறது என்றால் மருத்துவரிடம் போகிறோம். அவர் மருந்து கொடுத்தும் தலை வலி தொடர்கிறது என்றால், எப்போதெல்லாம் தலை வலிக்கிறதோ அந்த சந்தர்ப்பத்தை பற்றி மருத்துவர் நம்மிடம் கேட்பார். அதன் அடிப்படையில் மாற்று மருந்தோ, மருத்துவமோ செய்வார். கோபத்திற்கும் இதே அணுகுமுறை பொருந்தும். நாம் எப்போது, யார் மீது, எதற்கு கோபப்படுகிறோம் என யோசிக்க வேண்டும். இரண்டாவது, கோபத்தில் எப்படி செயல்பட்டோம் என நம்மை நாமே கேட்க வேண்டும்.
மூன்றாவது, ஏன் கோபப்படுகிறோம், எந்த திறமை இருந்தால் கோபப்படுவதற்கு பதிலாக, வேறு விதமாக நடந்து கொண்டிருப்போம் என யோசிக்க வேண்டும். உதாரணமாக மற்றவர்கள் நடக்கும் விதம் எரிச்சல் தரலாம். அப்போது நமக்குத் தேவை சகிப்புத்தன்மை. புதிய கார் ஒன்றை வாங்கினார் ஒருவர். எப்போதும் அக்கறையுடன் பாதுகாத்தார். யாராவது அதன் மீது கை வைத்தால் கூட கோபப்படுவார். ஒருநாள் இரவு மழை பெய்யும் போது காரில் வந்திறங்கினார்.
வண்டியோ சேறும் சகதியுமாக இருந்தது. மறுநாள் காலை அவரது நான்கு வயது மகன் காரின் மீது படிந்துள்ள சேற்றில் ஏதோ கிறுக்குவதைக் கண்டார். கோபம் கொப்பளிக்க, ஓங்கி அவனை அடித்தார். ’அப்பா, ஐ வவ் யூ’ என அவன் எழுதியிருந்தான். அதைப் படித்த உடன் மனம் வருந்தினார். இதற்குப் பிறகு அவருக்கு அவ்வளவாக கோபம் வருவதில்லை! நான்காவது, கோபத்தில் என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம் என யோசிக்க வேண்டும். இது சாத்தியமா என கேட்கலாம். ஆனால் இந்த இடத்தில் தான், முன்னுக்கு வந்தவர்களும், மற்றவர்களும் வேறுபடுகிறார்கள்.
’யாகாவராயினும் நா காக்க காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்னும் குறளை நினைவில் கொள்ளுங்கள். ஐந்தாவதாக இரண்டு ஆங்கில வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அவை ’ரியாக்ட்டிங்’ (கீஞுச்ணtடிஇஞ்) மற்றும் ’ரெஸ்பாண்டிங்’ (கீஞுண்ணீணிணஞீடிணஞ்). ’ரியாக்டிங்’ என்றால் நம் மனதின்படி நடத்தல் என்று பொருள் கொள்ளலாம். சட்டென்று கோபப்பட்டு, வார்த்தைகளைக் கொட்டி விட்டு பிறகு வருத்தப்படுவதும் இதில் அடங்கும். ’ரெஸ்பாண்டிங்’ என்றால் அது போன்ற நேரத்தில் சற்று யோசித்து நிதானம் இழக்காமல் நடத்தல். உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாலும் நம் உறவுகளும் காக்கப்பட வேண்டும். ஆறாவது, மற்றவர் உதவியை நாடுதல். கோபத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் நண்பர்களிடம் ஆலோசிக்கலாம். தேவையானால் மனநல ஆலோசகர்களிடம் ’கவுன்சிலிங்’ பெறலாம்.
எனது நண்பர் ஒருவருக்கு அதிகமாகக் கோபம் வரும். இதனால் அவருடைய நற்குணங்கள் பயனற்றதாக போனது. ஒருநாள் அவர் கையில் தாயத்து கட்டியிருப்பதைக் கண்டு விசாரித்தேன். ”சார்! கோபத்தை அடக்க இஷ்ட தெய்வத்தை வேண்டி தாயத்தைக் கட்டியுள்ளேன். கோபம் வரும் போது கடவுளை எண்ணி தாயத்தைப் பார்ப்பேன். மனதிற்குள் பத்து எண்கள் வரை எண்ணுவேன். அப்புறம் தான் பேசுவேன். அதற்குள் என்னுடைய வார்த்தை, செயல்கள் கட்டுக்குள் வருவதை உணருகிறேன்’ என்றார். இந்த ஆறாவது உதாரணமும் நல்ல ஐடியா தானே!
ஏழாவது விஷயம். கோபம் வரும் போது அந்த இடத்தை விட்டு வெளியேறுவது. பல நேரங்களில் சூழ்நிலையை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நாம் அங்கிருந்து விலகலாம். மேலே சொன்னதெல்லாம் தற்காலிக பலனே அளிக்கும். ஆனால் எட்டாவதான இந்த விஷயமே நிரந்தர தீர்வு தரும். அது தான் தியானம். மனம் அலை பாயும் தன்மை கொண்டது. எப்படி கைகள், கால்களுக்கு பயிற்சி கொடுக்கிறோமோ அதே போன்று மனதிற்கும் பயிற்சி கொடுக்கும் வழிமுறை தான் யோகா மற்றும் தியானம். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மவுனமாக கண்களை மூடி நம் இயல்பு பற்றியும், அது வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பது பற்றியும் சற்று சிந்தியுங்கள். கடந்த காலத்தில் நாம் மற்றவரோடு எப்படி நடந்து கொண்டோம், அது நமக்கே நியாயமானதா, அது நம்மையும் மற்றவரையும் எப்படி பாதித்தது, நாம் வேறு மாதிரி நடந்திருக்கலாமா, அப்படி நடந்தால் ஒருவேளை மனதில் அமைதி நிலவியிருக்குமா என்று சிந்திக்கும் வாய்ப்பு உருவாகும். ஆக, நரகத்தின் மூன்று வாசல்களில் ஆசை, கோபம் குறித்து ஓரளவு தெரிந்து கொண்டோம். ’கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக’ என்கிறார் திருவள்ளுவர். எனவே மனம் விழித்தெழவும், விழிப்பு நிலையில் இருக்கவும் பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.