Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதல் அத்தியாயம் மனிதன் என்றால் யார்? மனிதன் என்றால் யார்?
முதல் பக்கம் » கட உபநிஷதம் (மரணத்திற்கு பின்னால்)
மரணத்தை எதிர்கொள்வது எப்படி?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 மார்
2012
12:03

1.2 பிரித்திறந்து வாழ்!

மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை என்ன என்று கேட்டான் நசிகேதன். பலவிதங்களில் சோதித்து அவனது தகுதியை அறிந்த பிறகு சொல்லத் தொடங்குகிறான் எமதர்மன்.

மரணத்திற்குப் பின்னால் என்ன உள்ளது என்பதைப் பற்றி அறிய வேண்டுமானால் மரணத்தை எதிர் கொள்ள வேண்டும். இறக்கின்ற ஒவ்வொருவரும் மரணத்தை எதிர்கொள்வதில்லையா? இல்லை. பெரும்பாலோரும் மரணம் வருமுன்பு பயத்திலேயே செத்து விடுகின்றனர். எனவே அவர்கள் மரணத்தை எதிர்கொள்வதில்லை.

மரணத்தை எதிர்கொள்வது எப்படி?

வாழ்கையில் கவனம் செலுத்துவதன்மூலம். இந்த வாழ்க்கையைச் சிறப்பாக, உரிய முறையில் வாழ்பவனே இறைநிலையை அடைகிறான் (வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்) என்கிறார் தெய்வப் புலவர். வாழ்க்கை நம் முன் பல அனுபவங்களைக் கொண்டு வரும், சூழ்நிலைகளை உருவாக்கும், வாய்ப்புகளைத் தரும். அவற்றுள், நமது லட்சியத்திற்கானவற்றை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை விலக்கி வாழ அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு பிரித்தறிந்து வாழ்வதை அத்யாத்ம யோகம் என்று இந்த அத்தியாயத்தில் விளக்குகிறான் எமதர்மன் இவ்வாறு வாழத் தெரிந்தவனால் மரணத்தை எதிர்கொள்ள முடியும். மரணத்திற்கு அப்பால் உள்ளது என்ன என்பதை அறிய முடியும். 

எனவே வாழ்க்கையின் ஓர் அற்புதமான சித்திரத்துடன் தனது விளக்கத்தைத் தொடங்குகிறான் எமதர்மன்.

வாழ்க்கையின் இரண்டு கோணங்கள்(1-6)

பொதுவாக ஒருவனிடம் இருப்பவற்றை வைத்தே அவனை எடைபோடுகிறோம். வீடு, செல்வம், பதவி, அந்தஸ்து போன்ற புற வளர்ச்சிகளே அவனை நிர்ணயிக்கின்றன. ஆனால் அக வளர்ச்சி, உணர்வின் விரிவு என்று ஒன்று உள்ளது. மனிதன் அகத்திலும் வளர்கிறான். அன்பு, இரக்கம், விவேகம் போன்ற அவனது பண்புகள் விரிகின்றன. தன் உடம்பை, தன்னை மட்டுமே நேசித்தவன், தன் வீடு, தன் கிராமம், தன் நாடு, உலகம் என்ற பிரபஞ்சம் முழுவதையுமே தனதாகக் கண்டு, தானாகக் கண்டு நேசிக்கும் அளவிற்கு அவனது உணர்வு விரிகிறது.

இந்த அக வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி. புற வளர்ச்சிக்குக் காரணமாக அவனிடம் சேர்ந்தவை விலக நேர்ந்தால் அவன் பழையபடியே ஆகிவிட நேர்கிறது. ஆனால் அக வளர்ச்சியில் எதையும் இழக்கும் அபாயம் இல்லை.

அக, புற வளர்ச்சிகளுக்கான களம் உலகம் : 1-3

அக வளர்ச்சி, புற வளர்ச்சி இரண்டிற்குமான களமாக உள்ளது உலகம். அதாவது உலகம் இரண்டிற்கும் வாய்ப்பு தருகிறது.

1. அன்யச்ச்ரேயோ ன்யதுதைவ ப்ரேய
தே உபே நானார்த்தே புருஷம் ஸினீத
தயோ: ச்ரேய ஆததானஸ்ய ஸாது பவதி
ஹீயதேர்த்தாத் ய உ ப்ரேயோ வ்ருணீதே

ச்ரேய-மேலானது; அன்ய-வேறு; உத-மேலும்; ப்ரேய-சுகம் தருவது; அன்யத் ஏவ-வேறானது; தே உபே-அவை இரண்டும்; நானா அர்த்தே-வேறுபட்ட பலன்களைத் தந்து; புருஷம்-மனிதனை; ஸினீத-பிணைக்கின்றன; தயோ-அந்த இரண்டினுள்; ச்ரேய-மேலானதை; ஆததானஸ்ய-ஏற்றுக்கொள்பவனுக்கு; ஸாது-நன்மை; பவதி-உண்டாகிறது; ய-யார்; ப்ரேய: உ-சுகம் தருவதை; வ்ருணீதே-நாடுகிறானோ; ஸ:-அவன்; அர்த்தாத்-லட்சியத்திலிருந்து; ஹீயதே-வீழ்கிறான்.

பொருள் : மேலானது வேறு, சுகம் தருவது. அவை இரண்டும் வேறுபட்ட பலன்களைத் தந்து அவற்றின் மூலம் மனிதனைப் பிணைக்கின்றன. மேலானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மை உண்டாகிறது. சுகம் தருவதை நாடுபவன் லட்சியத்திலிருந்து வீழ்கிறான்.

உலகையும் அது தரும் சுகபோகங்களையுமே முடிவாகக் கொண்டு அவற்றைத் தேடுபவர்கள் பலர்; அவை பாதையில் சில படிக்கற்கள் மட்டுமே என்று கண்டு உயர் லட்சியங்களை நாடுபவர்கள் சிலர். இரு சாராரின் முன்னாலும் உலகம் உள்ளது. முன்னது புற வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலானது. உலகின் சுகங்கள், அனுபவிக்கின்ற அந்த நேரத்திற்கு இன்பத்தைத் தந்தாலும் முடிவில் துயரத்தில் ஆழ்த்துகின்றன. உயர் லட்சியங்கள் ஆரம்பத்தில் சிரமமாக, துன்பம் தருபவையாக இருந்தாலும் முடிவில் பேரின்பத்தில் சேர்க்கின்றன. மேலோட்டமாக இன்பத்தை நாடுபவன் முடிவில் துன்பத்தல் ஆழ்கிறான் என்பதையே இந்த மந்திரம், அவன் லட்சியத்திலிருந்து வீழ்கிறான் என்று கூறுகிறது.

2. ச்ரேயச்ச ப்ரேயச்ச மனுஷ்யமேத
தௌ ஸம்பரீத்ய விவினக்தி தீர
ச்ரேயோ ஹி தீரோபி ப்ரேயஸோ வ்ருணீதே
ப்ரேயா மந்தோ யோக ÷க்ஷமாத் வ்ருணீதே

ச்ரேய: ச-மேலானதும்; ப்ரேய: ச-சுகம் தருவதும்; மனுஷ்யம்-மனிதனை; ஏத-அணுகுகின்றன; தீர;-அறிவாளி ; தௌ-அவற்றை; ஸம்பரீத்ய-ஆராய்ந்து; விவினக்தி-பாகுபடுத்துகிறான்; ப்ரேயஸ-சுகம் தருவதை விட்டு; ச்ரேய; ஹி-மேலானதையே; அபி வ்ருணீதே-தேர்ந்தெடுக்கிறான். மந்த-மூடன்; யோக ÷க்ஷமாத்-உடம்பின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றிற்காக; ப்ரேய:-சுகம் தருவனவற்றை; வ்ருணீதே-வேண்டுகிறான்.

பொருள் : மேலானது, சுகம் தருவது இரண்டும் மனிதனை அணுகுகின்றன. அறிவாளி அவற்றை ஆராய்ந்து, அவை இரண்டையும் பாகுபடுத்துகிறான்; சுகம் தருவனவற்றை விட்டுவிட்டு மேலானதைத் தேர்ந்தெடுக்கிறான். மூடன், உடம்பின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சுகம் தருவனவற்றை நாடுகிறான்.

பாதையில் பணக்கட்டு ஒன்று கிடக்கிறது, அருகில் யாரும் இல்லை. அதை இறைவன் தந்தது என்று எடுத்து பையில் இட்டுக்கொண்டு எதுவும் அறியாயதுபோல் அங்கிருந்து அகலலாம், எடுத்து உரியவனைக் கண்டுபிடித்து அதைச் சேர்க்கலாம், எடுத்து நல்ல பணிகளில் செலவிடலாம், போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்கலாம், நமக்கேன் வம்பு என்று அதை அங்கேயே விட்டுச் செல்லலாம். பொறுப்பு நம் கையில். அந்தப் பணத்தைப் பையில் இட்டுக் கொள்பவன் சுகம் பெறுகிறான்; ஆனால் அது திருட்டு என்பதால் மேலானதை இழக்கிறான்; இறைநெறியில் செல்வதற்கான தகுதியை இழக்கிறான். இவ்வாறு உலகம் வாய்ப்புகளைத் தருகிறது, சூழ்நிலைகளை உருவாக்குகிறது. நமது லட்சியம் என்ன, அந்த லட்சியத்திற்கான பாதை எது, இந்தச் சூழ்நிலையில் நான் எப்படி நடந்துகொண்டால் அது அந்த லட்சியத்தை அடையத்துணை செய்யும் என்பதை மனத்தில்கொண்டு செயல்பட வேண்டும். பிரித்தறிந்து வாழ்வது என்பது இதுவே.

3. ஸ த்வம் ப்ரியான் ப்ரியரூபாம்ச்ச காமான்
அபித்யாயன்  நசிகேதோ த்யஸ்ராக்ஷீ
ஸநதாம் ஸ்ருங்காம் வித்தமயீமவாப்தோ
யஸ்யாம் மஜ்ஜந்தி பஹவோ மனுஷ்யா

நசிகேத-நசிகேதா; ஸத்வம்-நீயோ; அபி த்யாயன்-நன்றாகச் சிந்தித்து; ப்ரியான்-செல்வங்களையும்; ப்ரியரூபான்-அழகிய பெண்களையும்; அத்யஸ்ராக்ஷீ-ஒதுக்கிவிட்டாய்; யஸ்யாம்-எந்தப் பாதையில்; பஹவ-பெரும்பாலான; மனுஷ்யா-மனிதர்கள்; மஜ்ஜந்தி-உழல்கிறார்களோ; வித்தமயீம்-செல்வத்தைக் குறிக்கோளாகக் கொண்டது; ஏதாம்-இந்த; ஸ்ருங்காம்-பாதையை; ந அவாப்த; -தேர்ந்தெடுக்கவில்லை.

பொருள் : நசிகேதா! நீயோ நன்றாகச் சிந்தித்து, செல்வங்களையும் அழகிய பெண்களையும் ஒதுக்கிவிட்டாய், எந்தப் பாதையில் பெரும்பாலான மனிதர்கள் உழல்கிறார்களோ அது செல்வத்தைக் குறிக்கோளாகக் கொண்டது. அந்தப் பாதையை நீ தேர்ந்தெடுக்கவில்லை.

இறைநெறியும் உலகியலும்

4. தூரமேதே விபரீதே விஷூசீ
அவித்யா யா ச வித்யேதி ஜ்ஞாதா
வித்யாபீப்ஸினம் நசிகேதஸம் மன்யே
ந த்வா காமா பஹவோலோகலுபந்த

யா-எது; அவித்யா-உலகியல்; யா-எது; வித்யா-இறைநெறி; இதி-என்று; ஜ்ஞாதா-அறியப்படுகின்றனவோ; ஏதே-இரண்டும்; தூரம்-வேறுபட்டவை; விபரீதே-நேர்மாறானவை; விஷூசீ-வேறான பாதைகளைப் பின்பற்றுபவை; பஹவ-பல; காமா-ஆசைகள்; த்வா-உன்னை; ந அலோலுபந்த-விலக்கவில்லை; நசிகேதஸம்-நசிகேதனை; வித்யாம் அபி-இறைநெறியில்; ஈப்ஸினம்-நாட்டமுடையவனாக; மன்பே-கருதுகிறேன்.

பொருள் : இறைநெறி, உலகியல் இரண்டும் வேறுபட்டவை, நேர்மாறானவை, வேறுவேறான பாதைகளைப் பின்பற்றுபவை. எந்த ஆசையும் உன்னை மேலான பாதையை நாடுவதிலிருந்து விலக்கவில்லை. எனவே நீ இறைநெறியில் நாட்டமுடையவன் என்று நான் கருதுகிறேன்.

வித்யை(இறை நெறி), அவித்யை(உலகியல்) இரண்டும் உள்ளன. அவித்யை மோகத்தில் ஆழ்த்துகிறது. காமமும் பணத்தாசையும் அதிலிருந்தே உண்டாகிறது, அது மனிதனை மோகத்தில் ஆழ்த்துகிறது. பக்தி, தயை, ஞானம், பிரேமை இவற்றைத் தோற்றுவிப்பது வித்யை. இது இறை நெயில் நம்மை அழைத்துச் செல்கிறது. என்று விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

உலகியல் வழிச் செல்பவர்களின் கதி: 5-6

5. அவித்யாயாமந்தரே வர்த்தமானா
ஸ்வயம் தீரா: பண்டிதம் மன்யமானா
தந்த்ரம்யமாணா: பரியந்தி மூடா
அந்தேனைவ நீயமானா யதாந்தா

அவித்யாயாம்-உலகியலின்; அந்தரே-நடுவில்; வர்த்தமானா-வாழ்பவர்கள்; ஸ்வயம்-தங்களை; தீரா-அறிவாளிகள்; பண்டிதம்-பண்டிதர்கள்; மன்யமானா-கருதுபவர்கள்; மூடா-மூடர்கள்; தந்த்ரம்யமாணா-குறுக்குவழிகளைப் பின்பற்றுபவர்கள்; அந்தேன-குருடனால்; நீயமானா-வழிகாட்டப்படுகின்ற; அந்தா யதா இவ-குருடனைப்போல்; பரியந்தி-உழல்கிறார்கள்.

பொருள் : உலகியலின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்களை அறிவாளிகள் என்றும் பண்டிதர்கள் என்றும் கருதி குறுக்கு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப்போல் இவர்கள் மீண்டும்மீண்டும் பிறவிச் சுழலில் உழல்கிறார்கள்.

மேலானது என்று எமதர்மன் குறிப்பிடுகின்ற அகவளர்ச்சி அல்லது இறைநெறியில் குறுக்கு வழி எதுவும் கிடையாது. உலகில் சுக போகங்களை அனுபவித்து அல்லது குருவருளாலோ இறையருளாலோ புரிந்துகொண்டு, இந்த உலகம் போதும், இனி இறைவன் ஆசைகளை வைத்துக்கொள்ளலாம், கொஞ்சம் இறைவனையும் தேடலாம் என்றெல்லாம் கூறுபவர்கள் உண்மையை அறியாதவர்கள். சுயநலங்களுக்காக பிறருக்கு தவறான வழிகாட்டுபவர்கள். அவர்கள் காட்டும் பாதைகள் ஆரம்பத்தில் இதம் தருபவையாகத் தோன்றும். ஆனால் இறுதியில் படுகுழியிலேயே ஒருவனை ஆழ்த்தும். அத்தகைய வழிகாட்டுபவன். பின்பற்றுபவன் இருவருமே படுகுழியில் வீழ்கிறார்கள்
(குருட்டிகனை நீக்கும் குருவினைக்  கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டாம் ஆடி
குருடும் குருடும் குழிவிழுமாறே)என்று எச்சரிக்கிறார் திருமூலர்.

அக வளர்ச்சி நோக்கமாகக் கொண்ட இறைநெறி என்பது ஆரம்பத்தில் கடினமாகத் தெரிகிறது. ஆனால் இறுதியில் பேரின்பத்தைத் தருகிறது. எனவே குறுக்கு வழிகளை நாடாமல், சிரமமாக இருந்தாலும், உண்மையான வழிகளை நாட வேண்டும் என்பது இந்த மந்திரத்தின் கருத்து.

6. ந ஸாம்பராய: ப்ரதிபாதி பாலம்
ப்ரமாத்யந்தம் வித்தமோஹேன மூடம்
அயம் லோகோ நாஸ்தி பர இதி மானீ
புன: புனர் வசமாபத்யதே மே

ப்ரமாத்யந்தம்-குறுக்குவழியில் செல்கின்ற; வித்த மோஹேன-பணத்தாசையால்; மூடம்-அறிவிழந்த; பாலம்-மனப்பக்குவமற்றவனுக்கு; ஸாம்பராய;-மறுவுலகம்; ந ப்ரதிபாதி-புரிவதில்லை; அயம்-இந்த; லோக:-உலகம்; பர-வேறு; ந அஸ்தி-கிடையாது; இதி-என்று; மானீ -கருதுபவன்; புன: புன: மீண்டும் மீண்டும்; மே வசம்-என்னை; ஆபத்யதே-அடைகிறான்.

பொருள் : குறுக்குவழியில் செல்கின்ற, பணத்தாசையால் அறிவிழந்த. மனப்பக்குவமற்றவர்களுக்கு மறுவுலக உண்மைகள் புரிவதில்லை. இந்த உலகம்தான் எல்லாம், வேறு எதுவும் கிடையாது என்று கருதுகின்ற அவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அடைகிறார்கள்.

குருக்குவழிகளை நாடுபவர்கள் மீண்டும் மீண்டும் மரண தேவனிடம் செல்கிறார்கள், அதாவது பிறப்பு-இறப்புச் சுழலில் உழல்கிறார்கள். அவர்கள் உயர்ந்த கதியை அடைவதில்லை. ஏன்? ஏனெனில் அவர்களுக்கு உண்மை புரியவில்லை; உலகமும் அது தருகின்ற சுகங்களும்தான் எல்லாம், அவற்றை அனுபவிப்பதே லட்சியம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்; அக வளர்ச்சி, உயர் லட்சியம் எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

மரத்தால் செய்யப்பட்ட யானைச்சிலை ஒன்று உள்ளது. குழந்தை அதைப் பார்க்கும்போது யானை என்று பயப்படுகிறது. அங்கே அது மரத்தைக் காணவில்லை. மனவளர்ச்சி பெற்ற ஒருவன் அதே சிலையைக் காணும்போது அவன் பயப்படுவதில்லை. ஏனெனில் அங்கே அவன் யானையைக் காண்பதில்லை, மரப் பொம்மையைக் காண்கிறான். அதுபோல்தான் இந்த உலகமும். சுகபோகங்களும் காமமும் பணத்தாசையும் நம்மீது ஆதிக்கம் செலுத்தும் வரை உயர் லட்சியங்களோ அகவுலகமோ எதுவும் நம்  சிந்தையில் வருவதில்லை. அக வளர்ச்சி பெற்று உயர் லட்சியங்களை ஏற்று இறைநிலையை அடையும்வரை பிறவிச் சுழலிலிருந்து விடுபட முடியாது என்கிறது இந்த மந்திரம்.

உண்மையான குருவும் சீடரும் அபூர்வம்: 7-10

7. ச்ரவணாயாபி பஹுபிர்யோ ந லப்ய
ச்ருண்வந்தோபி பஹவோ யம் ந வித்யு
ஆச்சர்யோ வக்தா குசலோஸ்ய ஸப்தா
ஆச்சர்யோ ஜ்ஞாதா குசலானுசிஷ்ட்ட

ய:-எதனை; பஹுபி: பலரால்; ச்ரவணாய அபி-கேட்கவும்; ந லப்ய:-முடியவில்லையோ; ச்ருண்வந்த: அபி-கேட்டபோதிலும்; பஹவ-பலரால்; யம்-எதனை; ந வித்யு: அறிய முடியவில்லையோ; அஸ்ய-இதனை; வக்தா-உபதேசிப்பவரும்; ஆச்சர்ய:-அபூர்வம்; லப்தா-கேட்பவரும்; குசல:-அபூர்வம்; குசல அனுசிஷ்ட்ட: சிறந்த ஒருவரைப் பின்பற்றி; ஜ்ஞாதா அறிபவரும் ஆச்சர்ய-அபூர்வம்.

பொருள் : எதைப்பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்கும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப்பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம், கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்.

ஆன்மா, ஆன்மீகம், கடவுள், அக வளர்ச்சி, உணர்வு போன்ற உயர் உண்மைகளைப்பற்றி கேட்கும் வாய்ப்பு பெரும்பாலோருக்கும் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் நாம் உயர் உண்மைகளை உணர்வதற்கான தகுதி பெறும்போது, நமது மனம் அதற்கான பக்குவம் பெறும்போது அந்த உண்மைகளை உபதேசிப்பவர் வந்து சேர்வார் என்பதும் உண்மை. வயல் தயாரானதும், விதை வந்து சேர்ந்தேயாக வேண்டும் என்பது இயற்கையின் அறிய இயலாத நியதியாகும்........ நாம் எவ்வளவோ விரும்பியும், நமக்கு உண்மை இன்னும் கிடைக்கவில்லை என்று நாம் அங்கலாய்த்துக் கொள்ளும்போது, நமது முதல் கடமை, நம்முடைய  உள்ளத்தையே ஆராய்ந்து பார்த்து, உண்மையிலேயே நாம் உண்மையை விரும்புகிறோமோ என்று கண்டுபிடிப்பதுதான். பெரும்பாலோர் விஷயத்தில் நாம் இன்னும் தகுதி பெறவில்லை, நமக்கு உண்மையான ஆன்மீக தாகம் இன்னும் ஏற்படவில்லை என்பதையே காண்போம். என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

தகுதியான ஒருவர் வந்து அவரிடம் உபதேசம் பெற்றாலும், நமது நம்பிக்கை திடமாக இல்லாவிட்டால் பயனில்லை. என்னால் உயர் உண்மைகளை அடைய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இவரால் எனக்கு வழி காட்ட முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இந்த வழி என்னை என் லட்சியத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை வேண்டும். இவற்றுள் ஒன்று ஊசலாடினாலும் நமது முன்னேற்றம் தடைபடும். எனவேதான் தகுதி வாய்ந்த குருவும் அபூர்வம், தகுதி வாய்ந்த சீடனும் அபூர்வம் என்று இந்த மந்திரம் கூறுகிறது. ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுபவர் அற்புதமானவராக இருக்க வேண்டும். கேட்பவரும் அப்படியே இருக்க வேண்டும். இருவரும் சிறப்பான, அசாதாரணமானவர்களாக  இருக்கும்போது மட்டுமே மிகச் சிறந்த ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறது. இல்லாவிட்டால் ஏற்படாது. இவர்களே உண்மையான குருமார்கள், இவர்களே உண்மையான சீடர்கள். இவர்களோடு ஒப்பிடும்போது மற்றவர்கள் ஆன்மீகத்தோடு விளையாடுகிறார்கள்; தங்கள் அறிவாற்றலுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள்; தங்கள் ஆர்வத்தைச் சிறிது தீர்த்துக் கொள்கிறார்கள்; ஆனால் உண்மையில், இன்னும் வெளிவிளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.

8. ந நரேணாவரேண ப்ரோக்த ஏஷ
ஸுவிஜ்ஞேயோ பஹுதா சிந்த்யமான
அனன்ய ப்ரோக்தே கதிரத்ர நாஸ்தி அணீயான்
ஹ்யதர்க்யம் அணுப்ரமாணத்

ஏஷ-இந்த ஆன்மா; அவரேண நரேண-உலகியல் மனிதனால்; ப்ரோக்த-கூறப்படும்போது: ந ஹி ஸுவிஜ்ஞேய-நன்றாக அறியப்படுவதில்லை; பஹுதா -பலவிதமாக; சிந்த்யமான-கருதப்படுகிறது; அனன்ய-அனுபூதி பெற்றவரால்; ப்ரோக்தே-உபதேசிக்கப்படும் போது; அத்ர-இந்த விஷயத்தில்; கதி-குழப்பம்; ந அஸ்தி-இல்லை; அணு ப்ரமாணாத்-அணுவைவிட-அணீயாள்-நுண்ணியது; அதர்க்யம்-வாதங்களுக்கு அப்பாற்பட்டது.

பொருள் : உலகியல் மனிதர்கள் கூறும் வழிகளால் இந்த ஆன்மாவை அறிய முடியாது; ஏனெனில் அவர்கள் பலவிதமாகக் கூறுகின்றனர். அனுபூதி பெற்றவனின் உபதேசங்களைப் பின்பற்றினால் குழப்பம் இல்லை. இந்த ஆன்மா அணுவைவிட நுண்ணியது. எனவே வாதங்களுக்கு அப்பாற்பட்டது.

ஆன்மா அனுபவித்திற்கு உரியது; ஆராய்ச்சிக்கோ வாதங்களுக்கோ உரியது அல்ல. கடலை நேரில் காணாத ஒருவனுக்கு, எவ்வளவு விளக்கினாலும் அவனால் கடலைப் புரிந்துகொள்ள முடியாது. அதுபோலவே ஆன்மாவையும் விளக்கங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆன்மா என்ற ஒன்று உண்டு. அது பெரியது, அது சிறியது என்றெல்லாம் பல விளக்கங்களை நூல்களில் காண முடியும். அவற்றையும் படித்துவிட்டு விளக்க முயன்றால் அது சரியான விளக்கமாக அமையாது, அந்த விளக்கத்தைக் கேட்டு அதைப் பின்பற்ற முயற்சிப்பவனும் 1.2.5-இல் கண்டதுபோல் படுகுழியிலேயே வீழ்வான்.

ஆனால் ஆன்மாவை அனுபூதியில் அறிந்தவன் சரியான வழியைக் காட்டுவான். அந்த வழியில் செல்பவனும் அதனை அடைவான்.

நசிகேதனின் மனவுறுதி: 9-11

9. நைஷா தர்க்கேண மதிராபனேயா
ப்ரோக்தான்யேனைவ ஸுஜ்ஞானாய ப்ரேஷ்ட்ட
யாம் த்வமாப: ஸத்யத்ருதிர் பதாஸி
த்வாத்ருங் நோ பூயாந்நசிதேத: ப்ரஷ்ட்டா

ப்ரேஷ்ட்ட-அன்பற்குரியவனே; த்வம்-நீ யாம்-எந்த அறிவை; ஆப:-அடைந்துள்ளாயோ; ஏஷா -இந்த; மதி-அறிவு; தர்க்கேண-வாதங்களினால்; ந ஆபனேயா-அடையக் கூடியது அல்ல; அன்யேன ஏவ-மற்றவரால்; ப்ரோக்தா-உபதேசிக்கப்படும்போது; ஸுஜ்ஞானாய-மேலான ஞானத்திற்கு; ஸத்யத்ருதி; பத அஸி-உண்மையில் உறுதி உடையவனாக இருக்கிறாய்; நசிகேத:-நசிகேதா; ந-எங்களுக்கு; த்வாத்ருக்-உண்னைப்போல்; ப்ரஷ்ட்டா-மாணவன்; பூயாத்-உண்டாகட்டும்.

பொருள் : அன்பிற்குரியவனே! நீ அடைந்துள்ள இந்த அறிவு வாதங்களினால் அடையக்கூடியது அல்ல. உண்மையை உணர்ந்த ஒருவர் உபதேசித்து, அதைப் பின்பற்றும்போது அது ஒருவனை மேலான ஞானத்திற்கு அழைத்துச் செல்கிறது. நசிகேதா! உண்மையை அடைவதில் நீ உறுதி உடையவனாக இருக்கிறாய். உன்னைப்போன்ற மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

ஒரு லட்சியத்தை எடுத்துக்கொண்டால் அதனை அடைவதற்கான உறுதி வேண்டும் வழியில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறுகின்ற ஆற்றல் வேண்டும். அத்தகைய ஒருவனே லட்சியத்தை அடைவான். நசிகேதன் மரணத்திற்கு அப்பாலுள்ள  உண்மையை அறிய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டான். அதிலிருந்து அவனை விலக்குவதற்காக எமன் எத்தனையோ ஆசைகளைக் காட்டினான். அவை அனைத்தையும் மறுத்துவிட்டு உண்மையை அடைய வேண்டும் என்ற ஒன்றிலேயே உறுதியாக இருந்தான் நசிகேதன். அத்தகைய மாணவர்கள் தனக்கு வேண்டும் என்று கூறி அவனைப் புகழ்கிறான் எமதர்மன்.

10. ஜானாம்யஹம் சேவதிரித்யநித்யம்
ந ஹ்யத்ருவை: ப்ராப்யதே ஹி த்ருவம் தத்
ததோ மயா நசிகேதச் சிதோக்னி
அநித்யைர் த்ரவ்யை: ப்ராப்தவானஸ்மி நித்யம்

சேவதி-வினைப்பயன்கள்; அநித்யம்-நிலையற்றவை; இதி-என்று; அஹம்-நான்; ஜானாமி-அறிவேன்; அத்ருவை; -நிலையற்ற பொருட்களால்; த்ருவம்-நிலையான; தத்-அந்த ஆன்மா; ந ப்ராப்யதே ஹி-அடையப்படாது; தத:-அதனால்தான்; அநித்யை: த்ரவ்யை யாகத்தை; சித-செய்து; நித்யம்-எம பதவியை; ப்ராப்தவான் அஸ்மி-அடைந்திருக்கிறேன்.

பொருள் : வினைப்பயன்கள் நிலையற்றவை என்று நான் அறிவேன். நிலையற்ற அவற்றால் ஆன்மாவை அடைய முடியாது. அதனால்தான் நிலையற்ற பொருட்களால் நசிகேத யாகத்தைச் செய்த நான் எம பதவியை அடைந்திருக்கிறேன்.

நாம் செய்கின்ற நல்ல மற்றும் தீய செயல்களால் விளைபவை வினைப்பயன்கள். எவ்வளவு நல்ல செயலாக இருந்தாலும், அதன் விளைவாக எவ்வளவு உயர்ந்த சொர்க்க பதவி கிடைத்தாலும் அது நிலையற்றதே. ஏனெனில் புண்ணியம் நிறைவுற்றதும் பூமியில் பிறந்தேயாக வேண்டும். ஆசைகளற்ற நிலையை அடையும்போது மட்டுமே பிறப்பு-இறப்பு என்னும் சுழலிலிருந்து விடுபட்டு நிலையான இறைவனை அடைய முடியும்.

இங்கே எமதர்மன் தன்னையே உதாரணமாகக் காட்டுகிறான். நசிகேத யாகத்தைச் செய்ததால் தனக்கு சொர்க்கத்தில் பதவி, அதாவது எம பதவி கிடைத்துள்ளது என்கிறான் அவன். அவனது புண்ணிய காலம் தீர்ந்ததும் இந்த எமபதவியும் போய்விடும்.

நிலையற்ற பொருட்களால் என்று எமன் இங்கே குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஹோம குண்டம், விறகு, நெய், போன்ற புறப்பொருட்களால் செய்த யாகத்தை எம தர்மன் இங்கே குறிப்பிடுகிறான். இது நிலையற்ற சொர்க்க பதவியையே தரும். அதே யாகத்தை ஓர் அக யாகமாக, ஆன்மீக சாதனையாக, ஒரு வித்யையாகச் செய்யும்போது அது நிலையான முக்திப்பேற்றைத் தருகிறது. அந்த சாதனையையே 12-ஆம் மந்திரம் விளக்குகிறது.

11. காமஸ்யாப்திம் ஜகத: ப்ரதிஷ்ட்டாம்
க்ரதோரனந்த்யமபயஸ்ய பாரம்
ஸ்தோமம் மஹதுருகாயம் ப்ரதிஷ்ட்டாம் த்ருஷ்ட்வா
த்ருத்யா தீரோ நசிகேதோ த்யஸ்ராக்ஷீ

நசிகேத-நசிகேதா, காமஸ்ய-ஆசைகளின்; ஆப்திம்-நிறைவிடம்; ஜகத-உலகின்; ப்ரதிஷ்ட்டாம்-ஆதாரமானது; க்ரதோ-யாகங்களின்; அனந்த்யம்-அளவற்ற பலனாக இருப்பது; அபயஸ்ய-பயமின்மைக்கு; பாரம்-மேலான இடமானது; ஸதோம-போற்றத் தக்கது; மஹத்-மகிமை வாய்ந்தது; உருகாயம்-நீண்ட காலம் நிலைத்திருப்பது; ப்ரதிஷ்ட்டாம்-மேலானது; த்ருஷ்டவா-அறிந்து; தீர-புத்திசாலியான நீ; த்ருத்யா-உறுதியுடன்; அத்யஸ்ராக்ஷீ-மறுத்துவிட்டாய்.

பொருள் : நசிகேதா! சொர்க்க லோகம் ஆசைகளின் நிறைவிடம், உலகின் ஆதாரம், யாகங்களின் பலனாகக் கிடைக்கின்ற அளவற்ற இன்பங்களின் இருப்பிடம், பயமின்மையின் உறைவிடம், போற்றத் தக்கது, மகிமை வாய்ந்தது, நீண்ட காலம் நிலைத்திருப்பது, மேலானது. புத்திசாலியான நீ(இந்த உண்மைகளை அறிந்தும், அது நிலையற்றது என்பதற்காக) அதனை உறுதியுடன் மறுத்துவிட்டாய்.

பூமியில் அனுபவிக்கின்ற சுகபோகங்கள் போதாமல் சொர்க்கத்தை நாடுகிறான் மனிதன். எனவே சொர்க்கம் என்பது அனைத்து ஆசைகளும் நிறைவேறுகின்ற இடமாகக் கருதப்படுகிறது.

பிரபஞ்சத்தை இயக்குகின்ற பல்வேறு சக்திகள் தேவர்களாக உருவகிக்கப்பட்டிருப்பதை 1.1.1 விளக்க வுரையில் கண்டோம். யாகங்களின்மூலம் மனிதர்கள் தேவர்களைப் பேண வேண்டும், பதிலாக தேவர்கள் மழை, காற்று முதலானவற்றின்மூலம் மனித குலத்தை வளர்ப்பார்கள். இந்தச் சுழற்சியில் ஏற்றத் தாழ்வு ஏற்படும்போது இயற்கை வளம் குன்றுகிறது. எனவேதான் சொர்க்கம் உலகிற்கு ஆதாரமாகக் கூறப்பட்டது.

நசிகேத வித்யை (12-17)

புற யாகத்தால் தனக்கு எம பதவி மட்டுமே கிடைத்தது(1.2.10) என்றும், இத்தகைய உலகங்களின் நிலையாமையை உணர்ந்த நசிகேதன் அவற்றை மறுத்து விட்டான் என்றும் (1.2.11) கூறிய எமதர்மன் அக யாகத்தைப் பற்றி அதாவது நசிகேத வித்யையைப்பற்றி கூற ஆரம்பிக்கிறான்.

அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது. (1.1.13) என்பது நசிகேத வித்யையின் அடிப்படைக் கருத்தாக உள்ளது. அந்த இதயக் குகை பற்றிய விளக்கம் ஆரம்பிக்கிறது.

இதயக் குகை

12. தம் துர்தர்சம் கூடமனுப்ரவிஷ்ட்டம்
குஹாஹிதம் கஹ்வரேஷ்ட்டம் புராணம்
அத்யாத்ம யோகாதிகமேன தேவம்
மத்வா தீரோ ஹர்ஷ சோகௌ ஜஹாதி

துர்தர்சம்-சிரமப்பட்டு அடைய வேண்டியது; கூடம்-மறைவான இடத்தை; அனுப்ரவிஷ்ட்டம்-அடைந்தது; குஹாஹிதம்-இதயக் குகையில் உள்ளது; கஹ்வரேஷ்ட்டம்-இருண்ட பகுதியில் உள்ளது; தீர-புத்திவிழிப்புற்றவன்; புராணம்-பழமையானது; தம்-அந்த; வேதம்-ஒளிமயமானதை; அத்யாத்ம யோக அதிகமேன-அத்யாத்ம யோகத்தால்; மத்வா-தியானித்து; ஹர்ஷ சோகௌ-இன்ப துன்பங்களை; ஜஹாதி-கடக்கிறான்.

பொருள் : நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடைய வேண்டியது, மறைவான இடத்தில் இருப்பது, இதயக் குகையில் ஒளிர்வது, இருண்ட பகுதியில் உள்ளது, பழமையானது. புத்தி விழிப்புற்றவன் ஒளிமயமான அந்த ஆன்மாவை அத்யாத்ம யோகத்தால் தியானித்து இன்பதுன்பங்களைக் கிடக்கிறான்.

நம்முள்ளே இருக்கின்ற, நமக்கு ஆதாரமான ஆன்மா எளிதாக அறியத்தக்கது அல்ல. புறமுகமாக இயங்குகின்ற புலன்களை அகமுகமாக்கி ஆன்மாவைத் தேடுவது அவ்வளவு எளிய காரியம் அல்ல. எனவேதான் அதனை சிரமப்பட்டு அடைய வேண்டியது என்று இந்த உபநிஷதம் குறிப்பிடுகிறது.

இதயக் குகையில் ஆன்மா இருப்பதாக ஏற்கனவே (1.1.14) கண்டோம். ஆனால் இதயக் குகை என்ற ஒன்று இருப்பதாகவே நாம் அறிவதில்லையே, ஏன்? இதனைச் சற்று விரிவாக அறிய வேண்டியது அவசியம்.

இதயக் குகைபற்றி பேசப்படுகிறது இது எந்த இதயம்? லப்டப் என்று துடித்துக் கொண்டிருக்கின்ற பவுதீக இதயம் அல்ல இது. இது ஆன்மீக இதயம். இதற்கு மூன்று அடையாளங்களைச் சொல்கிறது நாராயண ஸூக்தம். ஒன்று, தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் உள்ளது, ஆனால் அது சற்று இடது புறம் உள்ளது. ஆனால் ஆன்மீக இதயம் நடுவில் உள்ளது. இரண்டு, சுடர் வரிசையால் சூழப்பட்டுள்ளது. மூன்று, அந்த இதயம் பிரகாசிக்கிறது.(அதோ நிஷ்ட்ட்யா விதஸ்த்யாந்தே நாப்யாமுபரி திஷ்ட்டதி ஜ்வாலமாலாகுலம் பாதீ விச்வஸ்யாயதனம் மஹத் நாராயண ஸூக்தம், தைத்திரீய ஆரண்யாகம், 4.10.13.7). இந்த மூன்று அடையாளங்களும் பவுதீக இதயத்திற்குப் பொருந்தாது. இந்த ஆன்மீக இதயம்தான் இதயக் குகை. ஆனால் இதனை நாம் உணர்வதில்லையே! உணர்வதில்லை. ஆனாலும் அது அங்கே உள்ளது. இதுவே புத்தி, தீ; இதயத் தாமரை, மூன்றாம் கண் ஞானக் கண் என்றெல்லாம் சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. மிகப் பெரும்பாலோரிடம் இந்த ஆன்மீக இதயம் மலராமல் அரும்பாகவே உள்ளது. இதனால்தான் இது குகை, இருண்ட பகுதி, மறைவான இடம் என்றெல்லாம் கூறப்பட்டது முதலில் அதை மலரச் செய்ய வேண்டும், உணர வேண்டும்.

இதயக் குகையை உணர்வதற்கான ஒரு வழியாக இந்த உபநிஷதம் கூறுவது அத்யாத்ம யோகம். யோகம் என்றால் பொருந்துதல் அல்லது இணைதல். அத்யாத்ம யோகம் என்றால் ஆன்மாவுடன் இணைதல். புறப்பொருட்களை விட்டுவிட்டு அகத்தை நாடுந்தோறும் நாம் மேலும்மேலும் இதயக் குகையை உணர்வோம். புறப்பொருட்களிலிருந்து விலகவிலக, நம்முள் புற உலகால் பாதிக்கப்படாத அகஉலகம் ஒன்று இருப்பதை நாம் உணர்வோம். நம்முள் உள்ள இந்த அமைதிப் பிரதேசத்தை உணரத் தொடங்கிவிட்டது புற உலகம் நம்மைப் பாதிப்பது படிப்படியாகக் குறைத்து விடும். இதையே இந்த மந்திரம் இன்ப துன்பங்களைக் கடக்கிறான் என்று கூறுகிறது.

அத்யாத்ம யோகப் பயிற்சி

13. ஏதச்ச்ருத்வா ஸம்பரிக்ருஹ்ய மர்த்ய
ப்ரவ்ருஹ்ய தர்ம்யமணுமேதமாப்ய
ஸ மோததே மோதனீயம் ஹி லப்த்வா
விவ்ருதம் ஸத்ம நசிகேதஸம் மன்யே

ஏதத்-இந்த உண்மையை; ச்ருத்வா-கேட்டு; ஸம்பரிக்ருஹ்ய-ஆராய்ந்து; தர்ம்யம்-ஆன்மாவை; ப்ரவ்ருஹ்ய-பிரித்து; ஏதம்-இந்த; மோதனீயம்-ஆனந்தம் நிறைந்த; அணும்-அணு போன்ற ஆன்மாவை; ஆப்ய-அடைந்து; ஸ; மர்த்ய-மனிதன்; மோததே-மகிழ்கிறான்; ஸத்ம-அந்தப் பாதை; நசிகேதஸம்-நசிகேதனாகிய உனக்கு; விவ்ருதம்-திறந்திருப்பதாக; மன்யே-நினைக்கிறேன்.

பொருள் : இந்த உண்மையைத் தகுந்த குருவிடமிருந்து கேட்டு, ஆராய்ந்து அறிய வேண்டும். பிறகு, உடம்பிலிருந்து அதனைப் பிரித்து உணர வேண்டும். அணு போன்றதும், ஆனந்தம் நிறைந்ததுமான ஆன்மாவை இவ்வாறு பிரித்தறிபவன் ஆனந்தம் பெறுகிறான். நசிகேதா! உனக்கு அந்தப் பாதை திறந்திருப்பதாக நினைக்கிறேன்.

தலைவவி வந்தால் தலைவலி மாத்திரை சாப்பிடுகிறோம். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இது நோயை நிரந்தரமாக குணப்படுத்துவதற்கான வழி அல்ல, அதற்கு டாக்டரை அணுக வேண்டும். தலைவலிக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்குரிய மருந்தைத் தர அவரால் மட்டுமே முடியும். அவரது ஆலோசனைப்படி சிகிச்சை செய்தால் தலைவலியை முற்றிலுமாக குணப்படுத்த முடியும். அதுபோல்தான் அகவுலக உண்மைகளும், ஆன்மா, கடவுள் போன்ற விஷயங்களும் பல நூல்களில் காணப்படலாம், பலர் சொல்ல கேட்கவும் செய்திருக்கலாம். ஆனால் இவற்றை அனுபவித்து அறிந்த, ஆன்மாவை அனுபூதியில் உணர்ந்த, இறைவனை நேரடியாகக் கண்ட ஒருவரிடமிருந்து இந்த உண்மைகளை அறிந்தால் மட்டுமே அது நம்மைச் சரியான வழியில் அழைத்துச் செல்லும். அத்தகைய ஒருவரே குரு எனப்படுகிறார். எனவே உயர் வாழ்க்கை அல்லது ஆன்மீக வாழ்க்கைக்கு முதல் தேவை தகுந்த குரு. அவரிடமிருந்து நேரடியாக உண்மைகளைப் பெற வேண்டும்.

அடுத்ததாக குருவிடமிருந்து பெற்ற உண்மைகளை நன்றாக ஆராய்ந்து அதனை நமக்குரியதாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு மனத்தளவில் உடம்பு வேறு ஆன்மா வேறு என்று பிரித்தறிந்து பழக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மனத்திற்குப் பயிற்சி அளிப்பது ஆரம்பகால அடிப்படைப் பயிற்சிகளுள் ஒன்றாகும். சாதாரணமாக நமது வாழ்வில் உடம்பே எல்லாமாக இருக்கிறது. உடம்பே எல்லாம், அதைத் தவிர எதுவுமில்லை என்பதை அடிப்படையாக வைத்தே நமது வாழ்க்கை செல்கிறது. ஆனால் உடம்பு ஒரு கருவி மட்டுமே, வாழ்க்கை என்னும் மாபெரும் பயணத்தில் நாம் அணிகின்ற ஒரு சட்டை மட்டுமே உண்மையான நாம் என்பது இந்த உடம்பினுள் ஒளிர்கின்ற ஆன்மா என்பதை மனத்திற்குப் புரியவைக்க வேண்டும்.

நசிகேதனைப் பொறுத்தவரை இந்த மூன்று படிகளையும் கடந்து ஆன்மீக பாதையில் பயணம் செய்யத் தயாராக இருக்கிறான் என்பதை இங்கே எமதர்மன் சுட்டிக்காட்டுகிறான்.

நசிகேதனின் கேள்வி

14. அன்யத்ர தர்மாத் அன்யத்ராதர்மாத்
அன்யத்ராஸ்மாத் க்ருதாக்ருதாத்
அன்யத்ர பூதாச்ச பவ்யாச்ச
யத்தத் பச்யஸி தத்வத

தர்மாத்-தர்மத்திலிருந்து; அன்யத்ர-வேறுபட்டது; அதர்மாத்-அதர்மத்திலிருந்து; அன்யத்ர-வேறுபட்டது; அஸ்மாத்-இந்த; க்ருத அக்ருதாத்-காரியம், காரணம் ஆகியவற்றிலிருந்து; அன்யத்ர-வேறுபட்டது; பூதாத் ச-இறந்த காலத்திலிருந்து; பவ்யாத் ச-எதிர்காலத்திலிருந்து; அன்யத்ர-வேறுபட்டது; யத் தத்-எதை; பச்யஸி-காண்கிறாயோ; தத்-அதை; வத-சொல்வாய்.

பொருள் : தர்மம், அதர்மம் காரியம், காரணம், இறந்த காலம், எதிர் காலம் ஆகியவற்றிலிருந்து வேறு பட்டதாக நீ எதைக் காண்கிறாயோ அதை எனக்குச் சொல்வாய்.

பிரணவ தியானம்: 15-17

அத்யாத்ம யோகத்தின் சாதனையாக ஓங்காரம் அல்லது பிரணவ மந்திரத்தை தியானிக்குமாறு கூறுகிறது உபநிஷதம். இது ஓங்காரம், சப்த பிரம்மம், நாத பிரம்மம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. உலகம் படைக்கப்பட்ட போது முதலில் எழுந்தது இந்த ஓங்கார த்வனி. இது எங்கும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் யோகிகளால் இதனைக் கேட்க முடியும் என்றும் கூறப்படுகிறது. யாராலும் எழுப்பப்படாத ஓசை ஆதலால் இது அனாஹத த்வனி எனப்படுகிறது. ஓங்காரமும் அதன் உபாசனை முறையும் நமது உபநிஷதங்களில், குறிப்பாக மாண்டூக்யம் போன்றவற்றில், சிறப்பாக பேசப்படுகிறது. பிரம்மம் என்ற அறுதி நிலையிலிருந்து எழுந்த முதல் நாதம் ஆதலால் இதனைப் பின்பற்றிச் செல்லும்போது இறைவனை அடையலாம். தொலைவிலிருந்து அலையோசையைக் கேட்கிறோம். அந்த ஓசையைப் பின்பற்றிச் சென்றால் கடலை அடைந்து விடலாம். அலையோசை இருந்தால் கடலும் இருக்கிறது. அதுபோல் அனாஹத த்வனியைப் பற்றியவாறே சென்றோமானால் அந்த த்வனி குறிப்பதான பிரம்மத்திடம் போய்ச் சேரலாம். அதுவே பரமபதம் எனப்படுகிறது. என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். பிரணவ மந்திரத்தின் மகிமையை தொடரும் மூன்று மந்திரங்கள் கூறுகின்றன.

15. ஸர்வே வேதா யத்பதமாமனந்தி
தபாம்ஸி ஸர்வாணி ச யத் வதந்தி
யதிச்சந்தோ ப்ரஹ்மசார்யம் சரந்தி
தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவீமி ஓமித்யேதத்

ஸர்வே-எல்லா; வேதா-வேதங்களும்; யத் பதம்-எந்த லட்சியத்தை; ஆமனந்தி-உபதேசிக்கின்றனவோ; ஸர்வாணி-எல்லா; தபாம்ஸி ச-தவங்களும்; யத்-எதை; வதந்தி-சொல்கின்றனவோ; யத்-எதை; இச்சந்த-விரும்பி; ப்ரஹ்மசர்யம்-பிரம்மச்சரியத்தை; சரந்தி-கடைப்பிடிக்கிறார்களோ; தத்-அந்த; பதம்-சொல்லை; ஸங்க்ரஹேண-சுருக்கமாக; தே-உனக்கு; ப்ரவீமி-சொல்கிறேன்; ஏதத்-அது; ஓம் இதி-ஓம் ஆகும்.

பொருள் : எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தை உபதேசிக்கின்றவோ, எதற்காக எல்லா தவங்களும் செய்யப்படுகின்றனவோ, எதை விரும்பி பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கிறார்களோ அந்த லட்சியத்தை அடைவதற்கான மந்திரத்தைச் சுருக்கமாக உனக்குச் சொல்கிறேன். அது ஓம்

16. ஏதத்த்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏதத்த்யேவாக்ஷரம் பரம்
ஏதத்த்யேவாக்ஷரம் ஜ்ஞாத்வா யோ யதிச்சதி தஸ்ய தத்

ஏதத்-இந்த; அக்ஷரம் ஏவ-மந்திரமே; ப்ரஹ்ம-இறைவன்; ஏதத்-இந்த; அக்ஷரம் ஏவ-மந்திரமே; பரம்-மேலானது; ஏதத்-இந்த; அக்ஷரம் ஏவ-மந்திரத்தை; ஜ்ஞாத்வா-அறிந்து; ய-யார்; யத்-எதை; இச்சதி-விரும்புகிறானோ; தஸ்ய-அவனுக்கு; தத்-அது கிடைக்கிறது.

பொருள் : ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன். இந்த மந்திரம் மேலானது. இந்த மந்திரத்தை அறிந்து யார் எதை விரும்புகிறானோ அவனுக்கு அது கிடைக்கிறது.

17. ஏததாலம்பனம் ச்ரேஷ்ட்டம் ஏததாலம்பனம் பரம்
ஏததாலம்பனம் ஜ்ஞாத்வா ப்ரஹ்ம லோகே மஹீயதே

ஏதத்-இந்த; ஆலம்பனம்-பாதை; ச்ரேஷ்ட்டம்-சிறந்தது; ஏதத்-இந்த; ஆலம்பனம்-பாதை; பரம்-மேலானது; ஏதத்-இந்த ஆலம்பனம்-பாதையை; ஜ்ஞாத்வா-அறிந்து; ப்ரஹ்ம லோகே-பிரம்ம லோகத்தில்; மஹீயதே-சிறப்பு பெறுகிறான்.

பொருள் : இந்தப் பாதை சிறந்தது. இந்தப் பாதை மேலானது. இந்தப் பாதையை அறிந்து அதன் வழிச் செல்பவன் பிரம்ம லோகத்தில் சிறப்பு பெறுகிறான்.

மரணம் யாருக்கு? (18-22)

உடம்பு, உயிர், ஆன்மா என்ற மூன்றின் சேர்க்கையே மனிதன். நாம் பொதுவாக மரணம் என்று குறிப்பிடுவது உடம்பின் மரணத்தை மட்டுமே. பழைய சட்டையைக் களைந்துவிட்டு புதிய சட்டை அணிந்து கொள்வதுபோல் ஜீவன் ஓர் உடம்பைக் களைந்துவிட்டு புதிய உடம்பை எடுக்கிறது.
(வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோபராணி
ததாசரீராணி விஹாய ஜீர்ணானி அன்யானி ஸம்பாதி நவானி தேஹீ) உடம்பைக் களைதலையே மரணம் என்கிறோம். ஆனால் நாம் ஆன்மா, நமக்கு மரணமில்லை. உடம்பின் மரணத்திற்குப் பிறகும் நாம் வாழ்கிறோம். என்றென்றும் நாம் வாழ்கிறோம்.

ஆன்மாவில் எந்த மாற்றங்களும் இல்லை: 18-19

18. ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்
நாயம் குதச்சித் ந பபூவ கச்சித்
அஜோ நித்ய: சாச்வதோயம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே சரீரே

விபச்சித்-ஆன்மா; ந ஜாயதே-பிறப்பதில்லை; ம்ரியதே வா-இறப்பதும் இல்லை; அயம்-இது; குதச்சித்-எதிலிருந்தும்; ந பபூவ-உண்டானதில்லை; கச்சித்-எதுவும்; அயம்-இது; அஜ-பிறப்பற்றது; நித்ய-என்றென்றும் இருப்பது; சாச்வத; நிலையானது; புராண-பழமையானது; சரீரே-உடம்பு; ஹன்யமானே-அழிக்கப்பட்டாலும்; ந ஹன்யதே-அழியாதது.

பொருள் : ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை, இது எதிலிருந்தும் உண்டானதில்லை, எதுவும் இதிலிருந்தும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது, என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது.

19. ஹந்தா சேன்மன்யதே ஹந்தும்
ஹதச்சேன் மன்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜானீதோ
நாயம் ஹந்தி ந ஹன்யதே

ஹந்தா-அடிப்பவன்; ஹந்தும்-அடிப்பதாக; மன்யதே சேத்-நினைப்பானானால்; ஹத-அடிபட்டவன்; ஹதம்-அடிபட்டதாக; மன்யதே சேத்-நினைப்பானானால்; தௌஉபௌ-இருவரும்; ந விஜானீத-அறியாதவர்கள்; அயம்-இந்த ஆன்மா; ந ஹந்தி-அடிப்பதும் இல்லை; ந ஹன்யதே-அடிபடுவதும் இல்லை.

பொருள் : தான் அடிப்பதாக நினைப்பவன், தான் அடிபட்டதாக நினைப்பவன் இருவருமே உண்மையை அறியாதவர்கள். ஆன்மா அடிப்பதும் இல்லை, அடிபடுவதும் இல்லை.

ஆன்மாவின் இயல்புகள்: 20-22

அறிவு, உணர்ச்சி இரண்டும் வெவ்வேறானவை, நமது வாழ்க்கை, இரண்டுடனும் பின்னிப் பிணைந்ததாக உள்ளது. அன்பு, ஆசை, கோபம், பயம், வெறுப்பு என்று பொதுவாக நமது வாழ்க்கையில் உணர்ச்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன; அறிவின் செயல்பாடு மிகக் குறைவே. அதிலும் ஆன்மீகம், கடவுள், ஆன்மா போன்ற உண்மைகளை அறிவினால் ஆராய்ந்து புரிந்துகொள்ள முடியாது, உணர மட்டுமே இயலும்.

ஆன்மா, கடவுள் போன்றவைபற்றி படிக்கும்போது இந்தக் கண்ணோட்டம் நமக்கு மிக முக்கியமானது. அறிவுக்கு எட்டாதது என்பதை உணர்த்துவதற்கே நமது ரிஷிகள் முரண்பட்ட இயல்புகளால் அவற்றை விளக்க முயல்கின்றனர். தொடரும் மந்திரங்களை, சாதனைகள் செய்து உணர முடியுமே தவிர அறிவினால் விளக்கவோ அறியவோ முடியாது. அதற்கான ஒவ்வொரு முயற்சியும் நம்மை மேலும் குழப்பத்திலேயே ஆழ்த்தும்.

20. அணோரணீயன் மஹதோ மஹீயான்
ஆத்மாஸ்ய ஜந்தோர் நிஹிதோ குஹாயாம்
தமக்ரது: பச்யதி வீதசோகோ
தாதுப்ரஸாதான் மஹிமானமாத்மன

அணோ-அணுவைவிட; அணீயாள்-அணுவானதும்; மஹத: பெரியதைவிட; மஹீயான்-பெரியதும்; ஆத்மா-ஆன்மா; அஸ்ய-இந்த; ஜந்தோ-உயிரினங்களின்; குஹாயாம்-இதயக் குகையில்; நிஹித-இருக்கிறது; தம்-அதனை; அக்ரது-ஆசையற்றவன்; பச்யதி-காண்கிறான்; தாது ப்ரஸாதாத்-மனத் தெளிவினால்; ஆத்மன-ஆன்மாவின்; மஹிமானம்-மகிமையை; வீதசோக-கவலைகளைக் கடக்கிறான்.

பொருள் : அணுவைவிட அணுவானதும், பெரியதைவிடப் பெரியதுமான இந்த ஆன்மா உயிரினங்களின் இதயக் குகையில் இருக்கிறது. ஆசையற்றவன் அதனைக் காண்கிறான். மனத்தெளிவினால் ஆன்மாவின் மகிமையை உணர்கின்ற அவன் கவலைகளைக் கடந்து செல்கிறான்.

21. ஆஸீனோ தூரம் வ்ரஜதி சயானோ யாதி ஸர்வத
கஸ்தம் மதாமதம் தேவம் மதன்யோ ஜ்ஞாதுமர்ஹதி

ஆஸீன-உட்கார்ந்தபடியே; தூரம்-வெகுதூரம்; வ்ரஜதி-செல்கிறது; சயான-படுத்துக்கொண்டே; ஸர்வத-எல்லா இடங்களுக்கும்; யாதி-செல்கிறது; மத அமதம்-இன்ப துன்ப வடிவானது; தேவம்-ஒளி மயமானது; தம்-அந்த ஆன்மாவை; மத் அன்ய-என்னைத் தவிர; க-யார்; ஜ்ஞாதும்-அறிவதற்கு; அர்ஹதி-தகுந்தவன்.

பொருள் : அந்த ஆன்மா உட்கார்ந்தபடி வெகுதூரம் செல்கிறது. படுத்துக்கொண்டே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அது இன்ப வடிவானது. துன்ப வடிவானதும் அதுவே. அது ஒளி மயமானது என்னைத் தவிர வேறு யார் அதனை அறிவதற்குத் தகுதியானவன்?

என்னைத் தவிர யார் தகுதியானவன்? என்று மரணதேவன் கேட்கிறான். அதாவது மரண நிலையைப் போன்ற தொரு நிலையிலேயே ஆன்மாவை உணர முடியும். இதன் பொருள் என்ன? மரணத்தில் புலன்கள், மனம் எல்லாம் செயலிழக்கின்றன. அதுபோல் புலன்களும் மனமும் செயலிழந்த, அதாவது புலன்களையும் மனத்தையும் கடந்த ஒரு நிலையில்தான் ஆன்மாவை உணர முடியுமே தவிர புலன்களாலோ மனத்தாலோ அதனை அறிய முடியாது என்பதை இங்கே குறிப்பால் உணர்த்துகிறான் எமதர்மன்.

22. அசரீரம் சரீரேஷு அனவஸ்தேஷு அவஸ்திதம்
மஹாந்தம் விபுமாத்மானம் மத்வா தீரோ சோசதி

சரீரேஷு-உடல்களில்; அசரீரம்-உடல் அற்றது; அனவஸ்தேஷு-நிலையற்ற பொருட்களில்; அவஸ்திதம்-நிலையானது; மஹாந்தம்-பெரியது; விபும்-எங்கும் நிறைந்தது; ஆத்மானம்-ஆன்மாவை; மத்வா-அறிந்து; தீர-புத்தி விழிப்புற்றவன்; ந சோசதி-கவலைப்படுவதில்லை.

பொருள் : ஆன்மா உடல்களில் உடலற்றது; நிலையற்ற பொருட்களில் நிலையானது; பெரியது; எங்கும் நிறைந்தது. புத்தி விழிப்புற்றவன் அதனை அறிந்து கவலைகள் நீங்கப் பெறுகிறான்.

ஆன்மா எல்லா உடல்களிலும் உறைகிறது. ஆனால் அதற்கென்று ஒரு தனியான உடலோ உருவமோ இல்லை. உடல்கள் உட்பட இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிலையற்றது, மாறுவது, தோன்றி மறைவது. ஆனால் இந்த மாற்றங்கள் எதுவுமே இல்லாமல் நிலைத்திருப்பது ஆன்மா.

நாளை உணவு கிடைக்காதோ என்ற எண்ணம் கவலையைத் தருகிறது. நாளை இறந்து விடுவோமோ என்ற பயம் கவலையைத் தருகிறது. அதாவது, வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களே கவலையையும் பயத்தையும் தருகின்றன. ஆன்மா இந்த மாற்றங்கள் அனைத்தையும் கடந்தது. ஆதலால் அந்த நிலையை அடைபவன் கவலைகள் நீங்கப் பெறுகிறான்.

நான் ஆன்மா என்று யாரால் உணர முடியும்? 23-24

23. நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ
ந மேதயா ந பஹுனா ச்ருதேன
யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ்
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம்

அயம்-இந்த; ஆத்மா-ஆன்மா; ப்ரவசனேன-சொற்பொழிவுகளால்; ந லப்ய-அடையப்படுவதில்லை; ந மேதயா-புலமையால் அல்ல; பஹுனா ச்ருதேன-எவ்வளவோ கேட்பதாலும் அல்ல; யம் ஏவ ஏஷ-யார் அதற்காகவே; வ்ருணுதே-மன ஏக்கம் கொள்கிறானோ; தேன-அவனால்; லப்ய-அடையப்படுகிறது; தஸ்ய-அவனுக்கு; ஸ்வாம்-தனது; தனூம்-சொந்த இயல்பை; விவ்ருணுதே-வெளிப்படுத்துகிறது.

பொருள் : சொற்பொழிவுகளாலோ, புலமையாலோ, பலவற்றைக் கேட்பதாலோ இந்த ஆன்மாவை அடைய இயலாது. யார் அதை அடைவதற்காக மன ஏக்கம் கொள்கிறானோ அவன் மட்டுமே அதனை அடைகிறான். அந்த ஆன்மா அவனுக்குத் தனது சொந்த இயல்பை வெளிப்படுத்துகிறது.

மன ஏக்கம் என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் ஆன்மீக சாதனையாகக் கூறுவதுடன். இறைக் காட்சிக்கு முந்தின நிலையாகவும் வைக்கிறார்; ஆழ்ந்த மன ஏக்கத்துடன் அழுதால் அவரைக் காண முடியும்....... மன ஏக்கம் வந்து விட்டாலே அருணோதயம் ஆகிவிட்டது. அதன்பிறகு கதிரவன் தன்னைக் காட்டியருள்வான். அதுபோல் மனஏக்கத்திற்குப் பிறகு இறைக்காட்சி வருகிறது.

தீவிரமான தேவை ஏற்படும்போதுதான் மன ஏக்கம் வருகிறது. உள்ளார்ந்த ஏக்கமின்றி, சொற்பொழிவுகளைச் செய்வதாலோ கேட்பதாலோ, நூல்களைப் படிப்பதாலோ ஆன்மீகத்தில் எதையும் அடைய இயலாது. உயர் உண்மையை அடைய வேண்டும், இறைவனைக் காண வேண்டும் என்பதெல்லாம் உணவு, உடை போன்ற நமது அன்றாடத் தேவைகளுள் ஒன்றாக வேண்டும். அப்போது மட்டுமே அதற்காக நாம் ஏக்கம் கொள்வோம். ஏக்கம் கொள்ளும்போதுதான் வழி பிறக்கும், உண்மை தெரியும்.

24. நாவிரதோ துச்சரிதாத் நாசாந்தோ நாஸமாஹித
நாசாந்தமானஸோ வாபி ப்ரஜ்ஞானேன ஏனமாப்னுயாத்

துச்சரிதாத்-தீய ஒழுக்கத்திலிருந்து; ந அவிரத-விலகாதவன்; ந அசாந்த-புலனடக்கம் இல்லாதவன்; ந அஸமாஹித-மன ஒருமைப்பாடு இல்லாதவன்; ந அசாந்த மானஸ; வா அபி-மனத்தின் பரபரப்பு அடங்கப் பெறாதவன்; ப்ரஜ்ஞானேன-அறிவினால்; ஏனம்-இந்த ஆன்மாவை; ந ஆப்னுயாத்-அடைவதில்லை.

பொருள் : தீய ஒழுக்கத்திலிருந்து விலகாதவன், புலனடக்கம் இல்லாதவன், மன ஒருமைப்பாடு இல்லாதவன், மனதில் பரபரப்பு அடங்கப் பெறாதவன்-இத்தகையவன் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும் ஆன்மாவை அடைவதில்லை.

உயர் உண்மைகளை அடைவதற்கான சில அடிப்படை பண்புகள் இங்கே கூறப்படுகின்றன.

1. நல்லொழுக்கம்: எந்த ஒன்றையும் செய்ய வேண்டுமானால் அதற்கு ஆற்றல் தேவை. பவுதீகமாக ஒன்றைச் செய்ய உடம்பின் ஆற்றல் வேண்டும். மனத்தால் ஒன்றைச் செய்ய வேண்டுமானால் மன ஆற்றல் வேண்டும். உயர் உண்மைகளை நாடி, இறைவனைத் தேடி செய்யப்படுகின்ற அனைத்தும் மனத்தின்மூலமே செய்யப்படுகின்றன. அதற்கு மன ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் ஒழுக்க வாழ்வின்மூலம் மட்டுமே அடையப்படுகிறது. தூய்மையின் ஆற்றல் நிலையான ஆற்றல் என்கிறார் சுவாமி விவேகானந்தர். மனத்திற்கு இந்த ஆற்றல் வரும்போது தான் அதனால் உயர்ந்த உண்மைகளைச் சந்திக்க முடிகிறது, அதற்கான வழியில் செல்ல முடிகிறது. இந்த ஆற்றலை தருவது நல்லொழுக்க வாழ்க்கை மட்டுமே.

2. புலனடக்கம்: புலன்கள் புற உலகை நாடுமாறே படைக்கப்பட்டுள்ளன என்று இதே உபநிஷதம் பின்னால் (2.1.1) கூறுகிறது. எனினும் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டால், அதற்கு ஏற்புடையவற்றை மட்டுமே நாடுமாறு அவற்றிற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இது புலனடக்கம். தொடர்ந்த பயிற்சியால் இதனைச் சாதிக்க முடியும்.

3. மன ஒருமைப்பாடு: பணம் சம்பாதிப்பதிலும் சரி, கடவுளை வழிபடுவதிலும் சரி, மற்ற எதைச் செய்வதிலும் சரி, மன ஒருமைப்பாடு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கின்ற அளவுக்கு அந்த காரியத்தை நன்றாகச் செய்ய முடியும். இந்த ஒரு முயற்சியால் மட்டுமே, இந்த ஒரு சாவியால் மட்டுமே இயற்கையின் கதவுகளைத் திறக்க முடியும், அதன் ஒளியை வெளியே கொண்டுவர முடியும். இந்த ஒருமைப்பாட்டுச் சக்தியே அறிவுப் பொக்கிஷத்திற்கான ஒரே திறவுகோல் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

4. பரபரப்பின்மை: எந்தப் பூவிலும் அமராமல் படபடத்தபடியே பறக்கின்ற வண்ணத்துப்பூச்சிபோல் மனம் சிலவேளைகளில் பரபரப்பதை அனைவரும் உணர முடியும். இந்த நேரங்களில் மனத்தால் எதிலும் ஆழ்ந்து ஈடுபட இயலாது; ஜபம் தியானம் போன்றவற்றில் கட்டாயமாக மனத்தைச் செலுத்த முடியாது.

புலனடக்கம், மன ஒருமைப்பாடு, மனத்தின் பரபரப்பின்மை அனைத்தையும் ஒழுக்க வாழ்வின்மூலம் நாம் அடைய முடியும். அதைத் தவிர வேறு வழியில்லை. அனைத்திற்கும் மூலமாக அமைவது நல்லொழுக்கம். ஆன்மீக வாழ்வில் ஈடுபட விரும்பும் ஒருவருக்குச் சிந்தையில், சொல்லில், செயலில் தூய்மை முற்றிலும் இன்றியமையாதது என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஒழுக்கவாழ்க்கை இல்லாமல் எவ்வளவு கற்றாலும் கேட்டாலும் முயற்சித்தாலும் ஆன்மாவை அடைய முடியாது என்பது இங்கே ஆணித்தரமாகக் கூறப்படுகிறது.

ஆன்மாவின் மகிமை

25. யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே பவத ஓதன
ம்ருத்யுர் யஸ்யோபஸேசனம் க இத்தா வேத யத்ர ஸ

யஸ்ய-யாருக்கு; ப்ரஹ்ம ச-அறிவின் ஆற்றல்; க்ஷத்ரம் ச-தோள் வலிமை; உபே-இரண்டும்; ஓதன-உணவாக; பவத-ஆகிறதோ; யஸ்ய-யாருக்கு; ம்ருத்யு-மரணம்; உபஸேசனம்-ஊறுகாயாக உள்ளதோ; ஸ-அது; யத்ர-எங்கே உள்ளது; இத்தா-இவ்வாறு; க-யார்; வேத-அறிவார்.

பொருள் : அறிவின் ஆற்றல், தோள் வலிமை இரண்டும் யாருக்கு உணவாக உள்ளதோ, மரணம் யாருக்கு ஊறுகாயாக உள்ளதோ அது எத்தகையது என்பதை யார் அறிவார்?

நம்மை இயக்குபவற்றுள் அறிவின் ஆற்றல், தோள் வலிமை இரண்டும் முக்கியமானவை. இந்த இரண்டும் ஆன்மாவிற்கு உணவு போன்றவை. அனைவரும் பயப்படும் மரணம் அதற்கு ஊறுகாய் போன்றது. அதாவது ஆற்றல்கள், மரணம் எல்லாம் ஆன்மாவின் முன் மண்டியிடுகின்றன. இத்தகைய ஆற்றல்களால் ஆன்மாவை அறிய முடியாது. மன ஏக்கம் ஆகிய அன்பின் ஆற்றல் ஒன்றினாலேயே அதனை அடைய இயலும் என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.

இதி காடக உபநிஷதி ப்ரதம அத்யாயே த்விதீயா வல்லீ

 
மேலும் கட உபநிஷதம் (மரணத்திற்கு பின்னால்) »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news
1.1  எல்லாம் உன்னுள் நசிகேதன்(1-5) கட உபநிஷதத்திற்கு ஒரு முன்னுரைபோல் அமைகிறது இந்த முதல் அத்தியாயம். ... மேலும்
 
temple news
1.3 விழித்தெழு! உடம்பின் மாற்றங்களாலோ மனத்தின் மாற்றங்களாலோ பாதிக்கப்படாத ஆன்மா என்ற ஒன்று ... மேலும்
 
temple news
2.1 அதுவே நீ கட உபநிஷதத்தின் இரண்டாம் பகுதி ஆரம்பிக்கிறது. உயர் வாழ்விற்கான அடிப்படைகள் சிலவற்றை முதற் ... மேலும்
 
temple news
மரணத்திற்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை இந்த அத்தியாயம் கூறுகிறது. நம்மில் இருவர் இருப்பதாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar