Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மரணத்தை எதிர்கொள்வது எப்படி? ஆன்மாவை அறிவதற்கான அடிப்படை நிபந்தனை .. ஆன்மாவை அறிவதற்கான அடிப்படை ...
முதல் பக்கம் » கட உபநிஷதம் (மரணத்திற்கு பின்னால்)
மனிதன் என்றால் யார்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 மார்
2012
12:03

1.3 விழித்தெழு!

உடம்பின் மாற்றங்களாலோ மனத்தின் மாற்றங்களாலோ பாதிக்கப்படாத ஆன்மா என்ற ஒன்று இதயக்குகையில் உள்ளது. அதை அறிய வேண்டும். பிரித்தறிந்து வாழ்தல், பிரணவ தியானம் போன்றவை அதற்குரிய சாதனைகள் என்பதைச் சென்ற அத்தியாயத்தில் கண்டோம். ஆனால் இந்தச் சாதனைகள் சிறந்த பலனளிக்க வேண்டுமானால் புத்தி விழிப்புற்றிருக்க வேண்டும் என்பதை இந்த அத்தியாயம் வலியுறுத்துகிறது.

வாழ்க்கையை ஒரு தேர்ப் பயணத்துடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற எமதர்மன் தேரோட்டி விழித்திருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதைக் கூறுவதன்மூலம் புத்தியின் விழிப்பு எவ்வளவு முக்கியம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறான்.மனிதன் என்றால் யார் என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தையும் இங்கு நாம் காண்கிறோம்.

1. ரிதம் பிபந்தௌ ஸுக்ருதஸ்ய லோகே
குஹாம் ப்ரவிஷ்ட்டௌ பரமே பரார்தே
சாயாதபௌ ப்ரஹ்மவிதோ வதந்தி
பஞ்சாக்னயோ யே ச த்ரிணாசிகேதா

ஸுக்ருதஸ்ய-செயல்களின்; ரிதம்-பலனை; பிபந்தௌ-அனுபவிக்கின்ற இருவர்; லோகே-உடம்பில் பரமே-மேலான; பரார்தே-நுண்ணியதான; குஹாம்-இதயக் குகையில்; ப்ரவிஷ்ட்டௌ-புகுந்தவர்கள்; சாயா தபௌ-நிழலும் வெயிலும் போன்றவர்கள்; ப்ரஹ்மவித-மகான்கள்; பஞ்சாக்னய-ஐந்து அக்கினி உடையவர்கள்; த்ரிணாசிகேதா; மூன்றுமுறை நசிகேத யாகம் செய்தவர்கள், யே-யாரோ; வதந்தி-சொல்கின்றனர்.

பொருள் : செயல்களின் பலனை அனுபவிக்கின்ற இருவர் இந்த உடம்பில் உள்ளனர். அவர்கள் நிழலும் வெயிலும் போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்கள்; இந்த உடம்பிலுள்ள நுண்ணியதான இதயக் குகையில் புகுந்தவர்கள். மகான்களும், ஐந்து அக்கினியை உடையவர்களும், மூன்றுமுறை நசிகேத யாகம் செய்தவர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.

இந்த உடம்பில் இருவர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் செயல்களின் பலனை அனுபவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நிழலும் வெயிலும்போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர் என்று கூறுவதால் ஒருவர் செயல்களின் பலனை அனுபவிக்கிறார், மற்றவர் எதிலும் பங்கெடுக்காமல் சாட்சியாக இருக்கிறார் என்றும் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீசங்கரர் விளக்குகிறார் (தௌ ச சாயாதபாவிவ விலக்ஷணௌ ஸம்ஸாரித்வ அஸம்ஸாரித்வத்வேன ப்ரஹ்மவிதோ வதந்தி)

ஸ்ரீராமகிருஷ்ணரின் அனுபவ வார்த்தைகள் இதனை விளக்குகிறது. தமது கையில் அடிப்பட்டபோது அவர் கூறினார் இதனுள்(உடம்பினுள்) இருவர் இருக்கின்றனர். ஒன்று அன்னை....இன்னொருவர் பக்தனாக ஆகியுள்ளான். பக்தனுக்குத்தான் கை உடைந்தது. இப்போது நோய் வந்திருப்பது அவனுக்குத்தான் புரிகிறதா?

முண்டக உபநிஷதம் ஒரு கதையின்மூலம் இந்தக் கருத்தை விளக்குகிறது. ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் வாழ்கின்றன. ஒன்று அந்த மரத்திலுள்ள இனிப்பும் புளிப்பும் கசப்புமான பல்வேறு பழங்களைத் தின்கிறது.; அதன் காரணமாக இன்ப துன்பங்களை மாறிமாறி அனுபவிக்கிறது. மற்றொரு பறவை எதையும் திண்ணாமல் அமைதியாக அனைத்தையும் பார்த்தவண்ணம் இருக்கிறது( த்வாஸுபர்ணாஸபுஜாஸகாயாமானம்வ்ருக்ஷம் பரிஷஸ்வாஜாதே தயோரன்ய: பிப்பலம் ஸ்வாத்வத்யனச்னன் அன்யோ அபிசாகசீதி)

செயல்களின் ஈடுபட்டு, சுகதுக்க அனுபவங்களைப் பெற்று, அவற்றின் பலனை அனுபவிப்பது ஜீவன் அல்லது உயிர். மனம் மற்றும் பிராணனின் சேர்க்கை இது. எதிலும் பங்கெடுக்காமல் அனைத்தையும் பார்த்து கொண்டு சாட்சியாக நிற்கின்ற ஒன்றே ஆன்மா. ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்தி காணக்காண நாம் இறைநிலையை அடைவோம். ஜீவனுடன் நம்மை ஒன்றுபடுத்தி காணக்காண நாம் உலகியலில், குழப்பங்களில் அழுந்துவோம்.

மேலே கண்ட உண்மையை மகான்களிடமிருந்து கேள்விப்பட்டதாக உபநிஷத முனிவர் கூறுகிறார். மூன்று வகையான மகான்களைப்பற்றி அவர் கூறுகிறார்

1. மகான்கள் : இறைவனை உணர்ந்தவர்கள் என்று பொருள்படுகின்ற ப்ரஹ்மவித என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. ஐந்து அக்கினி உடையவர்கள்: கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி, ஸப்யம், ஆவஸத்யம் என்பவை ஐந்து அக்கினிகள். இல்லறத்தான் இந்த ஐந்து அக்கினிகளையும் வீட்டில் நிறுவி வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கார்ஹபத்யம்-குல தெய்வத்தின் வடிவமாகக் கருதப்படுவது. இல்லற தர்மத்தைப் பரிபாலிப்பதுவரை இந்த அக்கினி எரிய வேண்டும்.

ஆஹவனீயம்-ஆஹுதி அளிப்பதற்கான அக்கினி

தக்ஷிணாக்னி-தக்ஷிணம் என்றால் மகிழ்ச்சி. மகிழ்ச்சியைத் தருகின்ற அக்கினி. இது தெற்கு மூலையில் நிறுவப்படுகிறது.

ஸப்யம்-சாட்சி ரூபமாக விளங்குகிறது. செயல்கள் அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துகின்ற அக்கினி.

ஆவஸத்யம்-ஆவஸத்யம் என்றால் வீடு. வீட்டிற்கு மங்கலத்தைத் தருகின்ற அக்கினி.

3. மூன்று முறை நசிகேத யாகம் செய்தவர்கள்; நசிகேத யாகம்பற்றி ஏற்கனவே(1.1.15-19) கண்டோம்.

ஒரு சுயத் தூண்டுதல்

2. ய: ஸேதுரீஜானானாம் அக்ஷரம் ப்ரஹ்ம யத் பரம்
அபயம் திதீர்ஷதாம் பாரம் நாசிகேதம் சகேமஹி

ய-எந்த வித்யை; ஈஜானானாம்-பின்பற்றுபவர்களுக்கு; ஸேது-பாலம் ஆகிறதோ; தம்-அந்த; நாசிகேதம்-நசிகேத வித்யையை; சகேமஹி-செய்ய வல்லவர்கள் ஆவோம்; அபயம்-பயமற்ற; பாரம்-கரையை; திதீர்ஷதாம்-அடைய விரும்புபவர்களுக்கு; யத் அக்ஷரம்-அழிவற்ற எந்த; ப்ரஹ்ம-இறைவன்; பரம்-அடைக்கலமானவரோ; தத்-அந்த இறைவனை.

பொருள் : பின்பற்றுபவர்களுக்கு எந்த வித்யை பாலமாக அமைகிறதோ அந்த நசிகேத யாகத்தைச் செய்ய வல்லவர்கள் ஆவோம். பயமற்ற கரையை அடைய விரும்புபவர்களுக்கு அழிவற்ற எந்த இறைவன் அடைக்கலமானவரோ அந்த இறைவனை அறிய வல்லவர்கள் ஆவோம்.

ஒரு லட்சியத்தை எடுத்துக்கொண்டு முன்னேறும் போது, சிலவேளைகளில் லட்சியத்தை மறந்துவிடுவதுண்டு; அதுபோலவே சிலவேளைகளில் லட்சிய நாட்டம் நீர்த்துப்போவதும் உண்டு. எனவே தினமும் அதனை நினைவூட்டிக் கொள்வது நல்லது. இது சுயத் தூண்டுதல் எனப்படுகிறது. இத்தகைய மந்திரங்கள் நமது வேதங்களிலும் உபநிஷதங்களிலும் ஏராளம் உள்ளன. உபநிஷதங்களைப் படிக்கும்போது மட்டுமல்லாமல் இவற்றைப் பொருளுணர்ந்து அவ்வப்போது ஓதுவது நாம் நமது லட்சியத்தில் உறுதியாக இருக்க உதவும். அத்தகைய தொரு மந்திரம் இது.

வாழ்கையும் தேர்ப் பயணமும் (3-9)

நமது வாழ்க்கையின் ஓர் அற்புதமான சித்திரம் இந்த ஏழு மந்திரங்களில் கூறப்படுகிறது.

3. ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ து
புத்திம் து ஸாரதிம் வித்தி மன: ப்ரக்ரஹமேவ ச

ஆத்மானம்-ஆன்மாவை; ரதினம்-சுவாரி செய்பவனாக; வித்தி-அறிந்துகொள்; சரீரம் து-புத்தி; ஸாரதிம்-தேரோட்டி; மன-மனம்; ப்ரக்ரஹம் ஏவ-கடிவாளம்; வித்தி-அறிந்துகொள்.

பொருள் : ஆன்மா பயணம் செய்பவன், உடம்பு தேர், புத்தி தேரோட்டி, மனம் கடிவாளம்.

4. இந்த்ரியாணி ஹயானாஹு: விஷயாம்ஸ் தேஷு கோசரான்
ஆத்மேந்த்ரிய மனோயுக்தம் போக்தேத்யாஹுர் மனீஷிண

இந்த்ரியாணி-புலன்கள்; ஹயான்-குதிரைகள்; தேஷு-அவற்றிற்கு; விஷயான்-உலகப் பொருட்கள்; கோசரான்-பாதைகள்; ஆஹு-சொல்கின்றனர்; ஆத்ம இந்த்ரிய மனோ யுக்தம்-உடம்பு, புலன்கள், மனம் ஆகியவற்றுடன்கூடிய ஜீவன்; போக்தா-அனுபவிப்பவன்; மனீஷிண-மகான்கள்; ஆஹு-சொல்கின்றனர்.

பொருள் : புலன்கள் குதிரைகள்; உலகப் பொருட்கள் அந்தக் குதிரைகள் செல்வதற்கான பாதைகள்; உடம்பு புலன்கள், மனம் ஆகியவற்றுடன்கூடிய ஜீவன் வாழ்க்கையை அனுபவிப்பவன் என்று மகான்கள் சொல்கின்றனர்.

5. யஸ்த்வவிஜ்ஞானவான் பவதி அயுக்தேன மனஸா ஸதா
தஸ்யேந்த்ரியாணி அவச்யானி துஷ்ட்டாச்வா இவ ஸாரதே

ய: து-யார்; அவிஜ்ஞானவன்-வழிப்புறாத வனோ; ஸதா-எப்போதும்; அயுக்தேன-பிளவுபட்ட; மனஸா-மனத்தினனாக; பவதி-ஆகிறானோ; ஸாரதே-தேரோட்டிக்கு; துஷ்ட்ட அச்வா; இவ-அடங்காத குதிரைகள்போல்; தஸ்ய-அவனுடைய; இந்த்ரியாணி-புலன்கள்; அவச்யானி-வசப்படாமல் போகின்றன.

பொருள் : யார் விழிப்புறாதவனோ, பிளவுபட்ட மனத்தை உடையவனோ, அவனுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்காத குதிரைகள்போல் வசப்படாமல் போகின்றன.

6. யஸ்து விஜ்ஞானவான் பவதி யுக்தேன மனஸா ஸதா
தஸ்யேந்த்ரியாணி வச்யானி ஸதச்வா இவ ஸாரதே

ய:து-யார்; விஜ்ஞானவான்-விழிப்புற்றவனோ; ஸதா-எப்போதும்; யுக்தேன-பொருந்திய; மனஸை-மனத்தினமாக; பவதி-ஆகிறானோ; ஸாரதே-தேரோட்டிக்கு; ஸத் அச்வா: இவ-அடங்கிய குதிரைகள்போல்; தஸ்ய-அவனுடைய; இந்த்ரியாணி-புலன்கள்; வச்யானி-வசப்பட்டவை ஆகின்றன.

பொருள் : யார் விழிப்புற்றவனோ, பொருந்திய மனத்தை உடையவனோ, அவனுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள்போல் வசப்படுகின்றன.

7. யஸ்த்வவிஜ்ஞானவான் பவதி அமனஸ்க: ஸதாசுசி
ந ஸ தத் பதமாப்னோதி ஸம்ஸாரம் சாதிகச்சதி

ய:து-யார்; அவிஜ்ஞானவான்-விழிப்புறாதவனாக; அமனஸ்க-அடங்காத மனத்துடன்; ஸதா-எப்போதும்; அசுசி-தூய்மை அற்றவனாக; பவதி-இருக்கிறானோ; ஸ-அவன்; தத்-அந்த; பதம்-இறைநிலையை; ந ஆப்னோதி-அடைய மாட்டான்; ஸம்ஸாரம் ச-உலகியலிலும் அதிகச்சதி-ஆழ்கிறான்.

பொருள் : யார் விழிப்புறாதவனாக, அடங்காத மனத்தை உடையவனாக தூய்மை இல்லாதவனாக இருக்கிறானோ அவன் இறைநிலையை அடைய மாட்டான்; உலகியலிலும் ஆழ்கிறான்.

8. யஸ்து விஜ்ஞானவான், பவதி ஸமனஸ்க: ஸதா சுசி
ஸ து தத் பதமாப்னோதி யஸ்மாத் பூயோ ந ஜாயதே

ய: து-யார்; விஜ்ஞானவான்-விழிப்புற்றவனாக; ஸமனஸ்க-அடங்கிய மனத்துடன்; ஸதா-எப்போதும்; சுசி-தூயவனாக; பவதி-இருக்கிறானோ; ஸ: து-அவன்; யஸ்மாத்-எங்கிருந்து; பூய: மீண்டும்; ந ஜாயதே-பிறக்கமாட்டானோ; தத்-அந்த; பதம்-இறைநிலையை ஆப்னோதி-அடைகிறான்.

பொருள் : யார் விழிப்புற்றவனாக, அடங்கிய மனத்தை உடைவனாக, எப்போதும் தூயவனாக இருக்கிறானோ அவன், எங்கே சென்றால் மீண்டும் பிறப்பு இல்லையோ அந்த இறைநிலையை; ஆப்னோதி-அடைகிறான்.

9. விஜ்ஞானஸாரதிர் யஸ்து மன: ப்ரக்ரஹவான் நர
ஸோத்வன பாரமாப்னோதி தத் விஷ்ணோ: பரமம் பதம்

ய: நர-எந்த மனிதன்; விஜ்ஞான ஸாரதி-விழிப்புற்ற தேரோட்டியுடனுன்; ப்ரக்ரஹவான் மன-கடிவாளமாகிய மனத்தைக் கைப்பற்றியவனாகவும்; ஸ: து-அவனே; அத்வன: பாரம்-பாதையின் முடிவை; ஆப்னோதி-அடைகிறான்; தத்-அது; விஷ்ணோ-இறைவனின்; பரமம்-மேலான; பதம்-இருப்பிடம்.

பொருள் : யார் விழிப்புற்ற தேரோட்டியுடனும், கடிவாளமாகிய மனத்தைக் கைப்பற்றியவனாகவும் இருக்கிறானோ அவனே பாதையின் முடிவை அடைகிறான். அது இறைவனின் மேலான இருப்பிடம்.

வாழ்க்கைப் பயணம்: ஒரு கண்ணோட்டம்

3 முதல் 9 வரையுள்ள மந்திரங்களில் நமது வாழ்க்கைப் பயணம் ஒரு தேர்ப் பயணத்திற்கு ஒப்பிடப்படுகிறது. முதலில் உவமையைக் காண்போம், பிறகு அது தரும் செய்தியைப் பார்ப்போம்.

தேர்ப் பயணமும் வாழ்க்கையும்

தேரில் ஒருவன் பயணம் செய்கிறான். தேரோட்டி ஒருவன் உள்ளான். அவன் கடிவாளத்தைப் பிடித்திருக்கிறான். ஐந்து குதிரைகள் தேரை இழுக்கின்றன. தேர் செல்லும் பாதை ஒன்று உள்ளது. இது தேர்ப் பயணம்.

நமது வாழ்க்கைக்கு உதாரணமாக இது கூறப்பட்டுள்ளது.

ஆன்மா- பயணம் செய்பவன்
புத்தி- தேரோட்டி
மனம்- கடிவாளம்
புலன்கள்- குதிரைகள்
உலகப் பொருட்கள்- பாதை

தேர்ப் பயணம் தரும் செய்தி

1. பயணம் உலகப் பொருட்களாகிய சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். அதாவது உலகப் பொருட்களிலிருந்து, உலகிலிருந்து விலக முடியாது. நாம் எதைச் செய்ய வேண்டுமானாலும் உலகப் பொருட்களுடன் வாழ்ந்தபடியேதான் சாதிக்க வேண்டும்.

2. பயணத்தின் வேகமும் வெற்றியும் குதிரைகளைப் பொறுத்து அமைகிறது. குதிரையின் வேகம் கடிவாளத்தால் கட்டுப்படுகிறது. கடிவாளத்தின் இயக்கம் தேரோட்டியைப் பொறுத்தது. எனவே பயணத்தின் வெற்றியோ தோல்வியோ தேரோட்டியால் நிர்ணயிக்கப்படுகிறது. குதிரைகளுடன் போராடுவதாலோ கடிவாளத்தில் மாற்றங்களைச் செய்வதாலோ எந்தப் பயனும் இல்லை.

தேரோட்டி திறமைசாலியாக இருந்தால் பயணம் எவ்விதத் தடங்கலுமின்று நடைபெறும். தேரோட்டி தூங்கிக்கொண்டிருந்தால் பயணம் என்னவாகும்? இதுவே சாதாரணமாக நம் வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. புலன்கள் தங்கள் போக்கில் போகின்றன. மனம் கட்டவிழ்ந்து பல திசைகளில் பரந்து கிடக்கிறது. ஏனெனில் புத்தி விழிப்புறவில்லை. இந்த நேரத்தில் தேரோட்டியாகிய புத்தியை எழுப்புவதே நாம் செய்ய வேண்டியது. அதை விட்டுவிட்டு மனத்துடனோ புலன்களுடனோ போராடுவது பெரிதாக பலனளிப்பதில்லை.

3. புத்தியை எழுப்புதல் அல்லது புத்தி விழிப்படைதல் என்றால் என்ன?

சாதாரணமாக அறிவு மூன்று நிலைகளில் செயல்படுகிறது-1. இயல்புணர்ச்சி , 2. அறிவு, 3. உள்ளுணர்வு.

1. இயல்புணர்ச்சி: ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இயல்பாக எழுகின்ற உணர்ச்சி, வாத்துக்குஞ்சு நீந்துவதும் குருவிகள் கூடுகட்டுவதும் யாரும் கற்றுக்கொடுத்ததல்ல. பிறவியிலிருந்தே இவை அவற்றிடம் இயல்பாக உள்ளன. அதுபோல ஒவ்வொரு மனிதனிடமும் இயல்பாகக் காணப்படுகின்ற இயற்கையான மனப்போக்குகளே இயல்புணர்ச்சி. இது ஆழ்மனத்திலிருந்து வருவதால் பொதுவாக தவறுவதில்லை. பொதுவாக, இதற்கேற்பவை ஒருவன் வாழ்க்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்கிறான். எனினும் இது நமது ஆதிக்கத்தின் கீழ் இல்லாததால் நாம் விரும்பிய விதத்தில் இதனைப் பயன்படுத்த முடிவதில்லை.

2. அறிவு: புற உலகிலிருந்தும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் பெறுகின்ற அறிவு, புற உலகைச் சார்ந்திருப்பதால் இந்த அறிவு தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே இதனை முழுமையாக நம்பி நாம் செயல்பட முடியாது.

3. உள்ளுணர்வு: கற்றறிவு, கேட்டறிவு போன்ற எந்தப் புற உபகரணங்களின் துணையும் இன்றி உணர்வின் ஆழங்களிலிருந்து எழுகின்ற அறிவு இது. இது ஒரு போதும் பொய்ப்பதில்லை, இந்த உள்ளுணர்வு விழிக்கப் பெற்றவர்களே படைப்பாளிகளாக இருந்தார்கள்.

இது எல்லோரிலும் செயல்படத் தொடங்கவில்லை. கல்வி, விஞ்ஞானம், கலை, மதம் என்று எந்த துறையை எடுத்தாலும் அவற்றின் உன்னத சிகரங்களுக்கான வாசலாகத் திகழ்கிறது உள்ளுணர்வு. இது விழிப்பதே புத்தி விழிப்பது. இதை புத்தியோகம் என்று கீதை(2.49-58) கூறுகிறது.

இதயத் தூய்மையாலும், பிரார்த்தனையாலும், காயத்ரி போன்ற மந்திர ஜபங்களாலும் புத்தி விழிப்படைகிறது.

பயண லட்சியம் 10-11

இந்தப் பயணத்தின் லட்சியம் இறைவன். அனைத்திலும் வலிமை வாய்ந்தவர் அவர், எனவே பயணத்தின் வெற்றிக்கு அவரை நாடுவதே வழி என்பதைப் படிப்படியாக இரண்டு மந்திரங்கள் விளக்குகின்றன.

10. இந்த்ரியேப்ய: பராஹ்யர்த்தா: அர்த்தேப்யச்ச பரம் மன
மனஸஸ்து பரா புத்தி: புத்தேராத்மா மஹான் பர

இந்த்ரியேப்ய-புலன்களைவிட; அர்த்தா-உலகப் பொருட்கள்; பரா: ஹி-வலிமை வாய்ந்தவை; அர்த்தேப்ய ச-பொருட்களைவிட; மன-மனம்; பரம்-வலிமை வாய்ந்தது; மனஸ: து-மனத்தைவிட; புத்தி:-புத்தி; பரா-வலிமை வாய்ந்தது; மஹான் ஆத்மா-மகிமை வாய்ந்ததான ஆன்மா; புத்தே-புத்தியைவிட; பர-வலிமை வாய்ந்தது.

பொருள் : புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தைவிட புத்தி வலிமை வாய்ந்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது.

11. மஹத: பரமவ்யக்தம் அவயக்தாத் புருஷ: பர
புருஷான்ன பரம் கிஞ்சித் ஸா காஷ்ட்டா ஸா பராகதி

மஹத-மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட; அவ்யக்தம்-அவ்யக்தம்; பரம்-வலிமை வாய்ந்தது; அவ்யக்தாத்-அவ்யக்தத்தைவிட; புருஷ-இறைவன்; பர-வலிமை வாய்ந்தவர்; புருஷாத்-இறைவனைவிட; பரம்-வலிமை வாய்ந்தது; ந கிஞ்சித்-எதுவும் இல்லை; ஸா-அவரே; காஷ்ட்டா-அறுதிப் பொருள்; ஸா-அவரே; பரா கதி-கடைசிப் புகலிடம்.

பொருள் : மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது. அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவரே அறுதிப் பொருள். அவரே கடைசிப் புகலிடம்.

எந்த ஒன்றையும் வசப்படுத்த வேண்டுமானால் அதை விட உயர்ந்த ஒன்றை நாட வேண்டும். மேற்கிலிருந்து விலக வேண்டுமானால் விலக வேண்டும், விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வதாலோ, அங்கே நின்ற போராடுவதாலோ பயனில்லை. செய்ய வேண்டியதெல்லாம் கிழக்கு நோக்கி நடப்பதே. கிழக்கு நோக்கி நடந்தால் தானாகவே மேற்கிலிருந்து விலகிவிடுவோம். அது போலவே மனத்தை வசப்படுத்த, புலன்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவர அவற்றுடன் போராடுவதோ, அவற்றை அந்த நிலையிலேயே அடக்க முயற்சிப்பதோ பயனற்றது. இதையே கீதை, அடக்குவதால் என்ன பயன்?(நிக்ரஹ: கிம் கரிஷ்யதி?) என்று கேட்கிறது எனவே கீழானதை வசப்படுத்த மேலானதைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

புலன்களாகிய கண், காது, மூக்கு, வாய், உடம்பு இவற்றின்மூலமே நாம் செயல்படுகிறோம். இவை தன்னிச்சையாகச் செயல்படுவதில்லை. பார்க்குமாறு தூண்டப்படும்போது கண்கள் பார்க்கின்றன, கேட்குமாறு தூண்டப்படும்போது காதுகள் கேட்கின்றன. இவ்வாறே ஒவ்வொரு புலனும் செயல்படுகிறது. புலன்களைத் தூண்டுபவை உலகப் பொருட்கள். அவற்றின் மீதுள்ள கவர்ச்சியாலேயே நாம் உலகை அனுபவக்கிறோம். அதனால்தான் புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை என்று கூறப்பட்டது.

புலன்களின் கவனத்தைக் கவரக்கூடிய பொருட்கள் வெளியில் இருந்தாலும் மனம் புலன்களுடன் ஒத்துழைக்கவில்லை என்றால் அந்தப் பொருட்கள் புலன்களைத் தூண்ட முடியாது. உதாரணமாக அழகிய தாமரை மலர் ஒன்றை நாம் இருக்கின்ற வழியாக ஒருவன் கொண்டு செல்கிறான். அந்த வேளையில் நாம் எதையாவது தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்த மலரை நாம் கண்டிருக்கமாட்டோம். பிறகு கேட்டால், நான் பார்க்கவில்லையே என்போம். சாதாரண வேளையில் நம் கண்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய மலர் இப்போதும் இருந்தது. ஆனால் மனம் ஈடுபடாததால் நம் கண்களைக் கவர அந்த மலரால் முடியவில்லை. எனவே புறப் பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது.

நமது வாழ்க்கைப் பயணத்தின் இந்த மூன்று பகுதிகளையும் நாம் அறிவோம்: புற உலகம் நமக்குத் தெரியும், புலன்களை நாம் அறிவோம் மனத்தை நாம் உணர்கிறோம். இதற்குமேல் உள்ளவை சாதாரணமாக நம்மால் உணரப்படாதவை. இவற்றுள் முதலில் வருவது புத்தி. இது விழிப்புறாத நிலையில் உள்ளது. புத்தியைவிட வலிமை வாய்ந்தது ஆன்மா.

ஆன்மாவைவிட வலிமையானது அவ்யக்தம். அவ்யக்தம் என்றால் இறைவனின் ஆற்றல். எந்த ஆற்றலால் இந்தப் பயணம் மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சமே வெளிப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறதோ அந்த ஆற்றல் ஆனால் அந்த ஆற்றலும் இறைவனாகிய தனம் இல்லாமல் இயங்க முடியாது. எனவே அவ்யக்தத்தைவிட வலிமை வாய்ந்தவர் இறைவன். அவரே கடைசிப் புகலிடம்.

புத்தி விழிப்புற வேண்டும்

12. ஏஷ ஸர்வேஷு புதேஷு
கூடோத்மா ந ப்ரகாசதே
த்ருச்யதே த்வக்ர்யயா புத்த்யா
ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம தர்சிபி

ஏஷ-இந்த; ஆத்மா-ஆன்மா; ஸர்வேஷுபூதேஷு-எல்லா உயிர்களிலும்; கூட-மறைவாக உள்ளது; ந ப்ரகாசதே-வெளிப்பட்டுத்  தெரிவதில்லை; து-ஆனால்; அக்ர்யயா-ஒருமைப்படுத்தப்பட்ட; ஸூக்ஷ்மயா-நுண்ணிய; புத்த்யா-புத்தியால்; ஸூக்ஷ்ம தர்சிபி-மகான்களால்; த்ருச்யதே-காணப்படுகிறது.

பொருள் : இந்த ஆன்மா எல்லா உயிர்களிலும் மறைவாக உள்ளது. வெளிப்பட்டுத் தெரிவதில்லை. ஆனால் ஒருமைப்படுத்தப்பட்ட நுண்ணிய புத்தியால் மகான்கள் இந்த ஆன்மாவைக் காண்கின்றனர்.

எப்போதும் சஞ்சலப்படுவது மனம், ஒன்றை நிச்சயமாக முடிவு செய்வது புத்தி. (மனோ நாம ஸங்கல்ப விகல்பாத்மிக அந்த: கரண வ்ருத்தி புத்திர் நாம நிச்சயாத்மிக அந்த: கரண வ்ருத்தி வேதாந்த சாரம், 66, 65) ஆனால் இந்த புத்தியால் புற விஷயங்களை மட்டுமே முடிவு செய்ய இயலும்; அக உண்மைகளைக் காணும் ஆற்றல் இதற்கு இல்லை. ஏனெனில் இது விழிப்புறாத நிலையில் உள்ள புத்தி. அது விழிப்புறும்போது மட்டுமே நுண்மை பெறுகிறது. அந்த நுண்ணிய புத்தியால்தான் ஆன்மாவை உணர முடியும்.

புத்தி விழிப்புற என்ன செய்ய வேண்டும்?

13. யச்சேத்வாங்மனஸீ ப்ராஜ்ஞ
தத் யச்சேத் ஜ்ஞான ஆத்மனி
ஜ்ஞானமாத்மனி மஹதி நியச்சேத்
தத் யச்சேத் சாந்த ஆத்மனி

ப்ராஜ்ஞ-அக நாட்டம் உடையவன்; வாக்-பேச்சை; மனஸீ-மனத்தில்; யச்சேத்-ஒடுக்க வேண்டும்; தத்-அந்த மனத்தை; ஜ்ஞானே-விழிப்புற்ற; ஆத்மனி-புத்தியில்; யச்சேத்-ஒடுக்க வேண்டும்; ஜ்ஞானம்-புத்தியை; மஹதி-மகிமை வாய்ந்த; ஆத்மனி-ஆன்மாவில்; நியச்சேத்-ஒடுக்க வேண்டும்; தத்-அந்த ஆன்மாவை; சாந்தே-அமைதியின் இருப்பிடமான; ஆத்மனி-இறைவனில்; யச்சேத்-ஒடுக்க வேண்டும்.

பொருள் : அக நாட்டம் உடையவன் பேச்சை மனத்தில் ஒடுக்க வேண்டும். மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்க வேண்டும். புத்தியை மகிமை வாய்ந்த ஆன்மாவில் ஒடுக்க வேண்டும். ஆன்மாவை அமைதியின் இருப்பிடமான இறைவனில் ஒடுக்க வேண்டும்.

சாதனைமுறை இங்கே கூறப்படுகிறது. சாதாரண படியிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த சாதனை. பேச்சை மனத்தில் ஒடுக்க வேண்டும்-இது முதற்படி. உயர் வாழ்க்கைக்கு முதற்படி பேச்சுக் கட்டுப்பாடு. (யோகஸ்ய ப்ரதம த்வாரம் நிரோத) என்கிறார் ஸ்ரீசங்கரர். தேவையற்ற பேச்சு உயர் வாழ்க்கைக்கு என்றல்ல, சாதாரண வாழ்க்கைக்கும் பெரிய தடையாகும். நமது ஆற்றலில் முக்கியப் பகுதி பேச்சில் செலவழிகிறது. அதனைச் செலவிடாமல் சேமித்தால் அக வாழ்க்கை போன்ற உயர் தேவைகளுக்காக அதனைப் பயன்படுத்த முடியும்.

பேச்சு இரண்டு வகை-புறப் பேச்சு, அகப் பேச்சு; அதாவது வாய் பேசுவது மற்றும் எண்ணங்களின் கிளர்ச்சி. வாய் பேசாமல் இருந்தாலும் எண்ணங்கள் ஆர்ப்பரித்து எழும். இரண்டும் அடங்க வேண்டும். தேவையற்ற பேச்சைப் பயிற்சியின்மூலம் குறைக்கவோ தவிர்க்கவோ முடியும். ஆனால் எண்ணங்கள் எழுவதை எப்படித் தவிர்ப்பது? ஒரு சாட்சியாக நின்று எண்ணங்கள் எழுந்து அடங்குவதைக் கவனிக்க வேண்டும். எழுகின்ற எண்ணங்களுடன் சேர்ந்து மிதக்காமல் தனித்து நின்று அவற்றைக் காண்பதற்குப் பழக வேண்டும். பேச்சு என்பது ஓர் உதாரணமாகக் கூறப்பட்டது. இவ்வாறே அனைத்துப் புலன்களையும் வசப்படுத்த வேண்டும். அதாவது புலன்களின் போக்கில் போகாமல் சாட்சியாக நின்று பழக வேண்டும்.

இதுவே பேச்சை மனத்தில் ஒடுக்குவது என்ற முதற்படி. இந்தப் பயிற்சி மனத்திற்குப் பெரிய ஆற்றலையும் அமைதியையும் தருவதை நாம் உணர முடியும்.
தொடரும் படிகள் நாம் முன்னேற முன்னேற தாமாகவே நிகழ்வதை நாம் காணலாம். மனம் என்ற ஒன்றை நாம் அறிந்திருப்பதால் முதற்படி எளிதாக விளங்குகிறது. ஆனால் விழிப்புற்ற புத்தியோ, ஆன்மாவோ, இறைவனோ நாம் அறியாதவை. எனவே சாதனை முறையின் இரண்டாவது படியான விழிப்புற்ற புத்தி அல்லது புத்தி விழிப்புறுவதை உணரும் போதுதான் மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்குவது என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தொடரும் படிகள் அனைத்தும் இவ்வாறே. எனவே பேச்சைக் கட்டுப்படுத்தி பயிற்சியைத் தொடங்க வேண்டியதே முக்கியம். பேச்சைக் குறைத்து அமைதியைக் கடைப்பிடிப்பதன்மூலம் அமைதியின் உறை விடமான இறைவனை அடைகிறோம்.

குரு தேவை

14. உத்திஷ்ட்டத ஜாக்ரத ப்ராப்ய வாரன் நிபோதத
க்ஷúரஸ்ய தாரா நிசிதா துரத்யயா ஆர்கம் பதஸ்தத்கவயோ வதந்தி

உத்திஷ்ட்டத-எழுங்கள்; ஜாக்ரத-விழியுங்கள்; வரான்-தகுந்த குருவை; ப்ராப்ய-அடைந்து; நிபோதத-அனுபூதி பெறுங்கள்; நிசிதா-கூரான;க்ஷúரஸ்ய-கத்தியின்; தாரா-முனை; துரத்யயா-நடக்க இயலாதது; தத்-அது; துர்கம்-கடினமானது; கவய;-சான்றோர்கள் வதந்தி-கூறுகின்றனர்.

பொருள் : எழுங்கள், விழியுங்கள், தகுந்த குருவை அடைந்து அனுபூதி பெறுங்கள். கூரான கத்தியின் முனைமீது நடப்பதுபோன்று இறைநெறி கடினமானது என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.

தகுந்த குரு ஒருவரை அடைய வேண்டும். ஆனால் அதற்கு முன் நாம் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்களை இந்த மந்திரம் தெரிவிக்கிறது. முதலில் எழுந்திருக்க வேண்டும், பிறகு விழிக்க வேண்டும். எழுந்து, விழித்து, தகுந்த குருவை அடையும்போது அவர் அனுபூதி நிலைக்கான வழியைக் காட்டுவார். இந்த மூன்று படிகளையும் அப்யாரோஹ மந்திரம் (ஓம் அஸதோ மா ஸத்கமய தமஸோ மா ஜ்யோதிர் கமய ம்ருத்யோர்மா அம்ருதம் கமய) விளக்குகிறது.

உண்மையற்ற நிலையிலிருந்து என்னை
உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
அறியாமை இருளிலிருந்து என்னை
அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக!
மரணத்திலிருந்து என்னை
மரணமிலாப் பெருநிலைக்கு அழைத்துச் செல்வாயாக!

என்று பிரார்த்திக்கிறது அந்த வேத மந்திரம். எழுந்திருத்தல் என்றால் உண்மையற்றதிலிருந்து உண்மையைப் பிரித்தறிதல். விழித்தல் என்றால் அறியாமையிலிருந்து விடுபடல். மூன்றாவதாக மரணமிலாப் பெருநிலையாகிய அனுபூதியை அடைதல். உண்மையற்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; இதில் உண்மையான இன்பத்தையோ அமைதியையோ அடைய முடியாது என்பதை உணர்வது முதற்படி. இது வெறும் புத்தக அறிவாக இல்லாமல் மனத்தின் அடியாழங்களில் பதிய வேண்டும். அப்போது தான் நமது செயல்கள் அதற்கேற்ப அமையும்.

உண்மையற்றதிலிருந்து உண்மையைப் பிரித்தறியும் போது நமக்குத் தெரிவது என்ன? நாம் அறியாமையில் மூழ்கியிருக்கிறோம் என்ற உண்மை. எது அறியாமை? புற வளர்ச்சியை உண்மையான வளர்ச்சி என்று நம்பி அகவளர்ச்சியில் நாட்டம் செலுத்தாமல் இருப்பதுதான் அது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்துவதுதான் விழித்தல் என்கின்ற இரண்டாம்படி. அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்தும்போதுதான் குருவின் தேவையை உண்மையாக நாம் உணர்வோம். உண்மையான தேவையுடன் தகுந்த குருவை அடைந்து அவரால் வழிகாட்டப்படும்போது இறையனுபூதி வாய்க்கிறது.

இறையனுபூதியின் மகிமை

15. அசப்தமஸ்பர்சமரூபமவ்யயம்
ததாரஸம் நித்யமகந்தவச்ச யத்
அனாத்யனந்தம் மஹத: பரம் த்ருவம்
நிசாய்ய தன்ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே

யத்-எது; அசப்தம்-ஒலியைக் கடந்தது; அஸ்பர்சம்-தொடு உணர்ச்சியைக் கடந்தது; அரூபம்-காட்சியைக் கடந்தது; அரஸம்-சுவையைக் கடந்தது; அந்தவத் ச-மணத்தைக் கடந்தது; ததா-அதுபோல்; அவ்யயம்-அழிவற்றது; நித்யம்-என்றென்றும் இருப்பது; அனாதி-ஆரம்பம் இல்லாதது-அனந்தம்-முடிவற்றது; மஹத-புத்தியைவிட; பரம்-மேலானது; த்ருவம்-நிலையானது; தத்-அதை; நிசாய்ய-அனுபூதியில் உணர்ந்து; ம்ருத்யுமுகாத்-மரணத்தின் பிடியிலிருந்து; ப்ரமுச்யதே-விடுபடுகிறான்.

பொருள் : ஒலி, தொடு உணர்ச்சி, காட்சி, சுவை, மணம் என்று புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த, அழிவற்ற, என்றென்றும் உள்ள, ஆரம்பம் இல்லாத, முடிவற்ற, புத்தியைவிட மேலான, நிலையான இறைவனை அனுபூதியில் உணர்பவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறான்.

உபநிஷத மகிமை 16-17

பொதுவாக ஒரு நூலின் முடிவில்தான் உபநிஷத மகிமை சொல்லப்படும். தொடரும் இரண்டு மந்திரங்களுடன் கட உபநிஷதத்தின் முதல் பகுதி நிறைவுறுவதால் இங்கும் கூறப்படுகிறது.

16. நாசிகேதமுபாக்யானம் ம்ருத்யு ப்ரோக்தம் ஸனாதனம்
உக்த்வா ச்ருத்வா மேதாவீ ப்ரஹ்ம லோகே மஹீயதே

நாசிகேதம்-நசிகேதன் கேட்ட; ம்ருத்யு ப்ரோக்தம்-எமதர்மன் கூறிய; ஸனாதனம்-பழமையான; உபாக்யானம்-விஷயத்தை; உக்த்வா-சொல்லி; ச்ருத்வா ச- கேட்கின்ற; மேதாவீ-புத்தி வழிக்கப் பெற்றவன்; ப்ரஹ்மலோகே-உயர் உலகங்களில்; மஹீயதே-போற்றப்படுகிறான்.

பொருள் : நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய இந்தப் பழமையான விஷயத்தை விழிப்புணர்வு பெற்ற ஒருவன் சொல்லவும் கேட்கவும் செய்தால் உயர் உலகங்களில் போற்றப்படுகிறான்.

17. ய இமம் பரமம் குஹ்யம்
ச்ராவயேத் ப்ரஹ்ம ஸம்ஸதி
ப்ரயத: ச்ராத்தகாலே வா ததானந்த்யாய கல்பதே
ததானந்த்யாய கல்பத இதி

ய-யார்; ப்ரயத-தூயவனாக இருந்து; பரமம்-மேலான; குஹ்யம்-பொருளாழம் மிக்க; இமம்-இதனை; ப்ரஹ்ம ஸம்ஸதி-சான்றோர்களின் சபையிலோ; ச்ராத்தகாலே வா-சிராத்த காலத்திலோ; ச்ராவயேத்-கேட்கச் செய்கிறானோ; தத்-அது; அனந்த்யாய-எல்லையற்ற பலனை; கல்பதே-தருகிறது.

பொருள் : மேலான, பொருளாழம் மிக்க இந்த உபநிஷதத்தைச் சான்றோர்களின் சபையிலோ சிராத்த காலத்திலோ தூயவனான ஒருவன் படித்தால் அது எல்லையற்ற பலனைத் தருகிறது.

பொதுவாக உபநிஷதங்கள் போன்றவற்றைப் படிப்பது ஒரு புண்ணிய செயலாகக் கருதப்படுகிறது. ஆனால் அதன் முழுப் பலனையும் பெற வேண்டுமானால் புத்தி விழிக்கப் பெற்ற தூயவனாக இருத்தல் அவசியம் என்பதை இந்த 16 மற்றும் 17 ஆம் மந்திரங்கள் கூறுகின்றன. அவர்களால்தான் உபநிஷங்களின் உட்பொருளை உணர்ந்துகொள்ள முடியும்; அதற்கேற்ப செயல்பட முடியும் என்பதே இதன் கருத்து. பாடுபடுபவர்களுக்கே பலன், வெறுமனே கிளிப்பிள்ளைபோல் படிப்பவர்கள் உயர்ந்த பலனை எதிர்ப்பார்க்கக் கூடாது.

இதி காடக உபநிஷதி ப்ரதம அத்யாயே த்ருதீயா வல்லீ

 
மேலும் கட உபநிஷதம் (மரணத்திற்கு பின்னால்) »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news
1.1  எல்லாம் உன்னுள் நசிகேதன்(1-5) கட உபநிஷதத்திற்கு ஒரு முன்னுரைபோல் அமைகிறது இந்த முதல் அத்தியாயம். ... மேலும்
 
temple news
1.2 பிரித்திறந்து வாழ்! மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை என்ன என்று கேட்டான் நசிகேதன். பலவிதங்களில் ... மேலும்
 
temple news
2.1 அதுவே நீ கட உபநிஷதத்தின் இரண்டாம் பகுதி ஆரம்பிக்கிறது. உயர் வாழ்விற்கான அடிப்படைகள் சிலவற்றை முதற் ... மேலும்
 
temple news
மரணத்திற்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை இந்த அத்தியாயம் கூறுகிறது. நம்மில் இருவர் இருப்பதாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar