Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
3. பிராண சக்தியின் செயல்கள் 5. ஓங்கார தியானம்
முதல் பக்கம் » பிரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி)
4. மனிதனின் மூன்று நிலைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2012
04:03

உலகின் படைப்பு, மனித வாழ்க்கையில் இரண்டு வழிகள், இல்லறம், வாழ்க்கையைச் செயல்படுத்துகின்ற பிராண சக்தி ஆகியவற்றைப் படிப்படியாக இதுவரை மூன்று அத்தியாயங்களில் கண்டோம். இவை அனைத்திற்கும் களமான மனிதனைப்பற்றி ஆராய்கிறது இந்த அத்தியாயம்.

மனிதன் மூன்று நிலைகளில் மாறிமாறி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான், விழித்திருக்கிறான், கனவு காண்கிறான், அல்லது ஆழ்ந்து தூங்குகிறான். இவை நனவு நிலை, கனவு நிலை, தூக்க நிலை எனப்படுகின்றன (மாண்டூக்ய உபநிஷதத்தின் மையக்கருவாக இந்த மூன்றுநிலை-ஆராய்ச்சி உள்ளது. அதன் 3-6, 9-11 மந்திரங்கள் இதுபற்றி கூறுகின்றன). இந்த நிலைகளில் என்ன நடக்கிறது, இந்த நிலைகள் எப்படி பிராணனால் கட்டுப்படுத்தப் படுகிறது போன்றவை இங்கே கூறப்படுகின்றன.

மூன்று நிலைகள் எவை?

1. அத ஹைனம் ஸெளர்யாயணீ கார்க்ய பப்ரச்ச
பகவன் ஏதஸ்மின் புருஷே கானி ஸ்வபந்தி? கான்யஸ்மின் ஜாக்ரதி?
கதர ஏஷ தேவ ஸ்வப்னான் பச்யதி? கஸ்யைதத் ஸுகம் பவதி?
கஸ்மின் நு ஸர்வே ஸம்ப்ரதிஷ்ட்டிதா பவந்தீதி

அத ஹ-பிறகு; ஸெளர்யாயணீ-சூரியனின் பேரனான; கார்க்ய-கார்க்கியன்; ஏனம்-அவரிடம்; பப்ரச்ச-கேட்டார்; பகவன்-தெய்வ முனிவரே; ஏதஸ்மின்-இந்த; புருஷே-மனிதனில்; கானி-எவை; ஸ்வபந்தி-தூங்குகின்றன; அஸ்மின்-அவனில்; கானி-எவை; ஜாக்ரதி-விழித்திருக்கிறது; ஸவப்னான்-கனவுகளை; பச்யதி-பார்க்கிறான்; ஏஷ-இந்த; தேவ-தேவன்; கதர-யார்; ஏதத்-இந்த; ஸுகம்-இன்பம்; கஸ்ய-யாருக்கு; பவதி-ஆகிறது; கஸ்மின் நு-எதில்; ஸர்வே-எல்லாம்; ஸம்ப்ரதிஷ்ட்டிதா பவந்தி-நிலைபெற்றுள்ளன; இதி-என்று.

பொருள் : பிறகு சூரியனின் பேரனான கார்க்கியன் பிப்பலாத முனிவரிடம் கேட்டார்.
தெய்வ முனிவரே! மனிதனில் எவை தூங்குகின்றன? எவை விழித்திருக்கின்றன? கனவுகளைக் காண்கின்ற தேவன் யார்? இன்பத்தை அனுபவிப்பது யார்? எல்லாம் எதில் நிலைபெற்றுள்ளன?

இங்கே 5 கேள்விகள் கேட்கப்படுகின்றன: ஒருவன் தூங்கும்போது எந்தப் புலன்கள் உண்மையில் தூங்குகின்றன? அவன் விழித்திருக்கும்போது, உண்மையில் எந்தப் புலன்கள் விழித்திருக்கின்றன? எந்தப் புலன்கள் கனவுகளைக் காண்கின்றன? ஆழ்ந்த தூக்கத்தில் இன்பத்தை அனுபவிப்பது யார்? ஆழ்ந்த தூக்கத்தின்போது எதில் அனைத்து புலன்களும் ஒடுங்குகின்றன? 1,4,5 ஆம் கேள்விகள் தூக்க நிலை பற்றியவை. 2 ஆம் கேள்வி விழிப்பு அல்லது நனவு நிலைபற்றியது. 3-ஆம் கேள்வி கனவு நிலை பற்றியது.

தூக்க நிலை: 2-4

2. தஸ்மை ஸ ஹோவாச
யதா கார்க்ய மரீசயோர்க்கஸ்ய அஸ்தம் கச்சத ஸர்வா ஏதஸ்மின் தேஜோமண்டல ஏகீபவந்தி
தா புன புனருதயத ப்ரசரந்த்யேவம் ஹ வை தத் ஸர்வம் பரே தேவே மனஸ்யேகீபவதி
தேன தர்ஹ்யேஷ புரு÷ஷா ந ச்ருணோதி ந பச்யதி ந ஜிக்ரதி ந ரஸயதே
ந ஸ்ப்ருசதே நாபிவததே நாதத்தே நானந்தயதே ந விஸ்ருஜதே நேயாயதே ஸ்வபிதீத்யாசக்ஷதே

தஸ்மை-அவரிடம்; ஸ-அவர்; உவாச ஹ-கூறினார்; கார்க்ய-கார்க்கியா; யதா-எப்படி; அர்க்கஸ்ய-சூரியனின்; அஸ்தம் கச்சத-மறையும்போது; ஸர்வா-எல்லா; மரீசய-கிரணங்களும்; ஏதஸ்மின்-அந்த; தேஜோமண்டலே-ஒளித்திரளில்; ஏகீபவந்தி-ஒடுங்குகின்றன; புன-மீண்டும்; உதயத-உதிக்கும்போது; தா-அவை; புன-மீண்டும்; ப்ரசரந்தி-பரவுகிறது; ஏவம் ஹ வை-அப்படியே; தத்-அந்த; ஸர்வம்-அனைத்தும்; பரே தேவே-தலைமைப் புலனான; மனஸி-மனத்தில்; ஏகீபவதி-ஒடுங்குகின்றன; தேன-எனவே; தர்ஹி-பிறகு; ஏஷ-இந்த: புருஷ-மனிதன்; ந ச்ருணோதி-கேட்பதில்லை; ந பச்யதி-பார்ப்பதில்லை; ந ஜிக்ரதி-முகர்வதில்லை; ந ரஸயதே-சுவைப்பதில்லை; ந ஸ்ப்ருசதே-உணர்வதில்லை; ந அபிவததே-பேசுவதில்லை; ந ஆதத்தே-ஏற்பதில்லை; ந ஆனந்தயதே-மகிழ்வதில்லை; ந விஸ்ருஜதே-வெளிவிடுவதில்லை; ந இயாயதே-நகர்வதில்லை; ஸ்வபிதி-தூங்குகிறான்; இதி-என்று; ஆசக்ஷதே-கூறுகிறார்கள்.

பொருள் : கார்க்கியரிடம் பிப்பலாதர் கூறினார்; கார்க்கியா! சூரியன் மறையும்போது எல்லா கிரணங்களும் அதன் ஒளித்திரளில் ஒடுங்குகின்றன; உதிக்கும்போது எல்லா கிரணங்களும் மீண்டும் வெளியே பரவுகின்றன, அதுபோல் ஒருவன் தூங்கும்போது அவனது புலன்கள் அனைத்தும் தலைமைப் புலனான மனத்தில் ஒடுங்குகின்றன. அப்போது அவன் கேட்பதில்லை, பார்ப்பதில்லை, முகர்வதில்லை, சுவைப்பதில்லை, உணர்வதில்லை,பேசுவதில்லை, ஏற்பதில்லை, மகிழ்வதில்லை, வெளிவிடுவதில்லை, நகர்வதில்லை, அப்போது இவன் தூங்குகின்றான் என்று கூறுகிறார்கள்.

விழித்திருக்கும்போது புலன்கள் செயல்படுகின்றன. சூரியனின் கிரணங்கள் பரவுவதுபோல் இந்தப் புலன்கள் புறவுலகுடன் தொடர்புகொண்டு அனுபவங்களைக் கொண்டுவருகின்றன. சூரியன் மறையும்போது அதன் கிரணங்கள் ஒடுங்குகின்றன. அதுபோல் மனிதன் தூங்கும்போது அவனது புலன்கள் அனைத்தும் மனத்தில் ஒடுங்குகின்றன. புலன்கள் செயல்படாததால் அவனக்கு எந்தப் புற அனுபவமும் இல்லை.

3. ப்ராணாக்னய ஏவைதஸ்மின் புரே ஜாக்ரதி
கார்ஹபத்யோ ஹ வா ஏ÷ஷாபானோ வ்யானோ ன்வாஹார்யபசனோ
யத்கார்ஹ பத்யாத் ப்ரணீயதே ப்ரணயனாத் ஆஹவனீய ப்ராண

ப்ராணாக்னய-பிராண அக்கினிகள்; ஏவ-மட்டுமே; ஏதஸ்மின்-இந்த; புரே-நகரத்தில்; ஜாக்ரதி-விழித்திருக்கின்றன; கார்ஹபத்ய-கார்ஹபத்யம்; ஏஷ ஹ வை-இந்த; அபான-அபானன்; அன்வாஹார்யபசன-அன்வாஹார்யபசனம்; வ்யான-வியானன்; யத்-எது; கார்ஹபத்யாத்-கார்ஹபத்யத்திலிருந்து; ப்ரணீயதே-உருவாக்கப்பட்டது; ப்ராணயனாத்-உருவாக்கப்பட்டதால்; ஆஹவனீய-ஆஹவனீயம்; ப்ராண-பிராணன்.

பொருள் : தூங்கும்போது, இந்த உடம்பாகிய நகரத்தில் பிராண சக்திகளாகிய அக்கினிகள் மட்டுமே விழித்திருக்கின்றன. அபானனே கார்ஹபத்யம். வியானன் அன்வாஹார்யபசனம். கார்ஹபத்யத்திலிருந்து உருவாக்கப்பட்டது ஆஹவனீயம். எனவே பிராணனே ஆஹவனீயம்.

தூங்கும்போது எல்லாம் ஓய்ந்துவிடுகின்றனவா?

இல்லை.  நகரம் ஆழ்ந்து தூங்கும்போது தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. அதுபோல் உடம்பு ஆழ்ந்து தூங்கும் போது பிராண சக்திகள் விழித்திருக்கின்றன; செயல்படுகின்றன. பிராண சக்திகளுக்குப் பல்வேறு அக்கினிகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. அக்கினிகள் என்பவை யாகங்கள். ஓர் இல்லறத்தான் பல யாகங்களைச் செய்ய வேண்டும். அவற்றுள் முக்கியமான ஒன்று அக்னிஹோத்ரம். இதைச் செய்வதற்கு மூன்று அக்கினிகள் வேண்டும். அவை கார்ஹபத்யம், ஆஹவனீயம், தட்சிணாக்னி (இது அன்வாஹார்ய பசனம் என்றும் அழைக்கப்படுகிறது). யாகங்களைச் செய்கின்ற புரோகிதர் ஹோத்ரு எனப்படுகிறார். யாகங்களைச் செய்விப்பவன். அதாவது அந்த யாகம் யாருக்காகச் செய்யப்படுகிறதோ அவன், எஜமானன் எனப்படுகிறான். யாகத்தின்போது இவன் அமர்வதற்குத் தனி இடம் உள்ளது.

1. கார்ஹபத்ய அக்னி: இது எஜமானனுக்குப் பின்னால் வட்ட வடிவமான குண்டத்தில் தொடர்ந்து எரிகின்ற ஒன்று. மற்ற யாகங்களுக்கான அக்கினி இதிலிருந்தே எடுக்கப்படுகிறது. இது அபானனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அபானன் உடம்பின் பின்பகுதியில் செயல்படுகிறது.

2. அன்வாஹார்யபசனம்: தட்சிணாக்னி என்றும் இது அழைக்கப்படுகிறது. தட்சிணம் என்றால் வலது பக்கம். எஜமானனுக்கு வலது பக்கத்தில் (தென்புறம்) அரை வட்ட வடிவமான குண்டத்தில் இந்த அக்கினி எரிகிறது. இறந்த முன்னோர்களும் சாதாரண தேவதைகளும் இதில் வழிபடப்படுகிறார்கள். வியானன் இதயத்திற்கு வலது பக்க நாடியில் சஞ்சரிப்பதால் இது தட்சிணாக்னிக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

3. ஆஹவனீயம்: இது எஜமானனுக்கு முன்னால் சதுர வடிவமான குண்டத்தில் எரிகிறது. இதில் தேவர்கள் வழிபடப்படுகிறார்கள். இது கார்ஹபத்ய அக்னியிலிருந்து எடுக்கப்படுகிறது. தூக்கத்தின்போது பிராணன் அபானனிலிருந்தே பிரிந்தெழுந்து செயல்படுகிறது. அபானன் கார்ஹபத்ய அக்னிக்கு உவமையாகக் கூறப்பட்டது. பிராணன் ஆஹவனீய அக்னிக்கு உவமையாகக் கூறப்படுகிறது.

எப்படி இந்த யாகங்கள் ஓர் இல்லறத்தானின் வீட்டில் தொடர்ந்து செய்யப்படுகின்றனவோ, அப்படி பிராண சக்திகளும் தொடர்ந்து செயல்படுகின்றன. தூக்கத்தின்போது புலன்கள் ஓய்ந்துவிடுகின்றன. அதனால் புற அனுபவங்கள் நம்முள் வருவதில்லை. ஆனால் பிராண சக்திகள் ஓய்வதில்லை. இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்வற்றின் இயக்கம், உண்ட உணவு செரிப்பது, ரத்தம் தூய்மைப்படுத்தப்படுவது போன்ற வேலைகள் நாம் தூங்கும்போதும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

4. யதுச்சவாஸ நி ச்வாஸெள ஏதாவாஹுதீ ஸமம் நயதீதி ஸஸமான
மனோ ஹ வாவ யஜமான இஷ்ட்ட ஃபலமேவ உதான ஸ
ஏனம் யஜமானம் அஹரஹர் ப்ரஹ்ம கமயதி

யத்-எப்படி; உச்ச்வாஸ நி ச்வாஸெள-உள்மூச்சும் வெளிமூச்சும்; ஏதௌ-இரண்டும்; ஆஹுதீ-இரண்டு ஆஹுதிகள்; ஸமம்-சமமாக; நயதி-நடத்துகிறது; இதி-என்று; ஸ-அது; ஸமான-சமானன்; மன-மனம்; யஜமான ஹ வாவ-எஜமானனே; இஷ்ட்ட ஃபலம் ஏவ-நாடிய பலனே; உதான-உதானன்; ஸ-அது ஏனம்-இந்த; யஜமானம்-எஜமானனை; அஹ; அஹ-நாள்தோறும்; ப்ரஹ்ம-இறைவனிடம்; கயமதி-சேர்ப்பிக்கிறது.

பொருள் : உள்மூச்சு, வெளிமூச்சு ஆகிய இரண்டு ஆஹுதிகளையும் சமமாக நடத்துவதால் அந்தப் பிராண சக்தி சமானன் எனப்படுகிறது. மனமே எஜமானன். யாகத்தின் மூலம் நாடிய பலனே உதானன். ஏனெனில் உதானனே இந்த எஜமானனை நாள்தோறும் இறைவனிடம் சேர்ப்பிக்கிறது.

தூக்க நிலைக்கும் யாகத்திற்குமான ஒப்புமை இங்கே தொடர்கிறது.

1. ஹோத்ரு: யாகத்தைச் செய்கின்ற புரோகிதர் ஹோத்ரு எனப்படுகிறார். யாகத்தின் முழுப் பொறுப்பும் அவருடையதே. யாக அக்னியில் சமர்ப்பிக்கப்படுகின்ற தானியம், நெய் முதலான ஆஹுதிகளை வகைப்படுத்திக் கண்காணிப்பது அவரது முக்கிய வேலை. இவர் சமானனுக்கு உவமையாகக் கூறப்படுகிறார்.

யாகத்தின் முழுப்பொறுப்பும் ஹோத்ருவைச் சேர்ந்தது. அதுபோல், தூக்க வேளையில் நமது உடல்-மன இயக்கங்களைக் கண்காணிப்பது சமானன். உள்மூச்சும் வெளிமூச்சும் இரண்டு ஆஹுதிகள். இவற்றை சமச்சீராக இயங்கச் செய்வது சமானன். 

2. எஜமானன்: மனம் எஜமானனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எஜமானன் சொர்க்க போகம், பிள்ளை வரம் போன்றவற்றிற்காக ஹோத்ருவின் மூலம் யாகம் செய்கிறான். அதுபோல் மனமும் இறைவனுக்காக, இறைவனை நாடி சமானனின்மூலம் உடல்-மன இயக்கங்களைச் சீராக வைத்து வாழ்க்கை என்னும் யாகத்தை நடத்துகிறது.

3. யாக பலன்: சொர்க்க போகம், பிள்ளை வரம் போன்ற பலவகை இன்பங்கள் யாகங்களின் பலன்களாகக் கிடைக்கின்றன. யாக பலன்கள் உதானனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளன. ஏனெனில் உதானனே இந்த எஜமானனை நாள்தோறும் இறைவனிடம் சேர்ப்பிக்கிறது என்கிறது மந்தரம்?

எப்படி?

மனிதன் மூன்று நிலைகளில் சஞ்சரிப்பவன். இறைவன் இந்த மூன்றுநிலைகளுக்கும் அப்பாற்பட்டவர். இது நான்காம் நிலை. இது பிரபஞ்ச உணர்வு கடந்த, அமைதிமயமான, மங்கலமான, இரண்டற்ற(ப்ரபஞ்சோபசமம் சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே-மாண்டூக்ய உபநிஷதம்,7) நிலையாகும். இதுவே இறைநிலை. ஆழ்ந்த தூக்கம் இறைநிலைக்கு முந்திய நிலையாக இருப்பதால் கலப்பற்ற ஆனந்தத்தின் சாயலை அதில் நாம் தூக்கத்தின்போது உணர முடிகிறது. எத்தனை இன்பங்கள் இருந்தாலும், அவை அனைத்தையும் விட்டு விட்டு தூக்கத்தை நாடுவதே மனித இயல்பாக உள்ளது. ஏனெனில் அங்கு மட்டுமே புற உலகக் கலப்பற்ற இறை யானந்தத்தின் சாயலை அனுபவிக்க முடிகிறது, தினமும் தூங்கும்போது மனத்தை இந்த இடத்திற்கு எடுத்துச் செல்வது உதானன். இறையானந்தத்தின் சாயல் என்ற பலனை நமக்குத் தருவதால் உதானன் யாக பலனுக்கு உவமையாகக் கூறப்படுகிறது.

கனவு நிலை

அடுத்து கனவுநிலை விளக்கப்படுகிறது. கனவுகளைக் காண்கின்ற தேவன் யார்(4:1) என்ற கேள்விக்கு விடையாக இந்த மந்திரம் அமைகிறது.

5. அத்ரைஷ தேவ: ஸ்வப்னே மஹிமானமனுபவதி
யத் த்ருஷ்ட்டம் த்ருஷ்ட்டமனுபச்யதி ச்ருதம் ச்ருதமேவார்த்தம்
அனுச்ருணோதி தேசதிகந்தரைச்ச ப்ரத்யனுபூதம் புன: புன ப்ரத்யனுபவதி;
த்ருஷ்ட்டம் சாத்ருஷ்ட்டம் ச ச்ருதம் சாச்ருதம் சானுபூதம்
சானனுபூதம் ச ஸச்சாஸச்ச ஸர்வம் பச்யதி ஸர்வ பச்யதி

ஏஷ-இந்த; தேவ-தேவன்; அத்ர-இங்கே; ஸ்வப்னே-கனவு; மஹிமானம்-மகிமையை; அனுபவதி-அனுபவிக்கிறான்; யத்-எது; த்ருஷ்ட்டம் த்ருஷ்ட்டம்-கண்டவற்றை; அனுபச்யதி-மீண்டும் காண்கிறான்; ச்ருத்ம் ச்ருதம் ஏவ அர்த்தம்-கேட்டவற்றை; அனுச்ருணோதி-மீண்டும் கேட்கிறான்; தேச திக் அந்தரை:ச-பல்வேறு இடங்களிலும் திசைகளிலும்; ப்ரத்யனுபூதம்-அனுபவித்தவற்றை; புன: புன=மீண்டும்மீண்டும்; ப்ரத்யனுபவதி-அனுபவிக்கிறான்; த்ருஷ்ட்டம்-கண்டவை; அத்ருஷ்ட்டம் ச-காணாதவை; ச்ருதம்-கேட்டவை; அச்ருதம் ச-கேட்காதவை; அனுபூதம்-அனுபவித்தவை; ந அனுபூதம் ச-அனுபவிக்காதவை; ஸத்-உண்மையானவை; அஸத் ச-உண்மையற்றவை; ஸர்வம்-அனைத்தையும்; பச்யதி-காண்கிறான்; ஸர்வ-அனைத்தும்; பச்யதி-காண்கிறான்.

பொருள் : இந்த தேவன் கனவுநிலையில் தன் மகிமையைத் தானே அனுபவிக்கிறான். விழிப்பு நிலையில் கண்டவற்றை மீண்டும் காண்கிறான்; கேட்டவற்றை மீண்டும் கேட்கிறான்; பல்வேறு இடங்களிலும் திசைகளிலும் அனுபவித்தவற்றை மீண்டும்மீண்டும் அனுபவிக்கிறான். விழிப்பு நிலையில் கண்டவை, காணாதவை, கேட்டவை, கேட்காதவை, அனுபவித்தவை, அனுபவிக்காதவை, உண்மையானவை, உண்மையற்றவை என்று அனைத்துமாக தானே ஆகி கனவுநிலையில் அனைத்தையும் அனுபவிக்கிறான்.

மனம் இங்கு ஒரு தேவனாகக் கூறப்பட்டுள்ளது. மனத்தின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. விழிப்பு நிலையில் கண்டு, கேட்டு, அனுபவித்த அனைத்தும் பதிவுகளாக ஆழ்மனத்தில் சேகரிக்கப்படுகின்றன. கனவில், மனமே இவை அனைத்துமாக ஆகி மீண்டும் அவற்றை அனுபவிக்கிறது. விழிப்பு நிலை அனுபவங்கள் அப்படியே கனவில் மீண்டும் நிகழும் என்ற நியதி கிடையாது. விழிப்பு நிலையில் பசுவைக் கண்டிருக்கிறோம், பாடல்களைக் கேட்டிருக்கிறோம். கனவில், இவை இரண்டும் இணையலாம். அதாவது,பசு பாடுவதாகக் கனவு வரலாம். ஒரு பசு பாடுவது விழிப்பு நிலையில் காணாதது, கேட்காதது, அனுபவிக்காதது, உண்மையற்றது. இதையே இந்த மந்திரம் தெரிவிக்கிறது.

கனவில் காண்கின்ற மனிதர்களோ மிருகங்களோ எதுவும் உண்மையில் அங்கே இல்லை. அவை எங்கிருந்து வந்தன? மனத்திலிருந்தே. அதாவது, விழிப்பு நிலையில் அனுபவித்த அனைத்துமாக மனமே ஆகி மீண்டும் அவற்றை அனுபவிக்கிறது. இதையே பிருஹதாரண்யக உபநிஷதம், அங்கே தேரில்லை, இழுக்க மிருகங்கள் இல்லை, சாலைகள் இல்லை, அங்கே இன்பம் இல்லை, களிப்பு இல்லை, ஆனந்தம் இல்லை. அங்கே குளம் இல்லை, ஏரி இல்லை, நதிகளும் இல்லை. அவன் அனைத்தையும் உருவாக்குகிறான். ஏனெனில் அவனே அனைத்தையும் உருவாக்கு பவன் (ந தத்ர ரதா ந ரதயோகா ந பந்தானோ பவந்தி, அத ரதான் ரதயோகான் பத: ஸ்ருஜதே; ந தத்ர ஆனந்தா முத; ப்ரமுதோ பவந்தி, அத ஆனந்தான் முத; ப்ரமுத; ஸ்ருஜதே; ந தத்ர வேசாந்தா புஷ்கரிண்ய; ஸ்ரவந்த்யோ பவந்தி, அத வேசாந்தான் புஷ்கரிணீ ஸ்ரவந்தீ: ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா பிருஹதாரண்யக உபநிஷதம், 4:3.10) என்று விளக்குகிறது.

தூக்க நிலை: 6

ஆழ்ந்த தூக்கத்தில் இன்பத்தை அனுபவிப்பது யார் (4:1) என்ற கேள்விக்கு விடையாக இந்த மந்திரம் அமைகிறது.

6. ஸ யதா தேஜஸாபிபூதோ பவதி அத்ரைஷ தேவ
ஸ்வப்னான் ந பச்யத்யத ததைதஸ்மின் சரீரே ஏதத்ஸுகம் பவதி

ஸ-அவன்; தேஜஸா-ஒளியால்; அபிபூத-பவதி-ஆக்கிரமிக்கப் படும்போது; அத்ர-இங்கே; ஏஷ-இந்த; தேவ-தேவன்; ஸ்வப்னான்-கனவுகளை; ந பச்யதி-காண்பதில்லை; அத-பிறகு; ததா-அப்போது; ஏதஸ்மின்-இந்த; சரீரே-உடம்பில்; ஏதத்-இந்த; ஸுகம்-இன்பம்; பவதி-உண்டாகிறது.

பொருள் : ஒளியால் ஆக்கிரமிக்கப்படும்போது அந்த தேவன் கனவுகளைக் காண்பதில்லை. அப்போது உடம்பு இந்த இன்பத்தை அனுபவிக்கிறது.

ஆழ்ந்த தூக்க நிலை விளக்கப்படுகிறது. இங்கே விழிப்பும் இல்லை, கனவும் இல்லை. விழித்திருக்காவிட்டாலும், கனவு காணாவிட்டாலும் அந்த ஆழ்ந்த தூக்க நிலையை நாம் அனுபவிக்கிறோம். ஏனெனில் தூங்கி எழுந்த பிறகு நேற்று நன்றாகத் தூங்கினேன் மிகவும் ஆன்நதமாக இருந்தது என்று கூறுகிறோம். இந்த இன்பத்தை அனுபவிப்பது யார் என்பது கேள்வி. ஒளியால் ஆக்கிரமிக்கப்படுகின்ற தேவன் என்கிறது மந்திரம். தேவன் என்பது மனம். அதாவது ஒளியால் ஆக்கிரமிக்கப்படுகின்ற மனம் இந்த இன்பத்தை அனுபவிக்கிறது.

ஒளியால் ஆக்கிரமிக்கப்படுகின்ற மனம் என்பது என்ன?

மாண்டூக்ய உபநிஷதம் தூக்க நிலையப்பற்றி கூறுவதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். தூக்க நிலைக்கு 4 முக்கிய அடையாளங்களை அது கூறுகிறது; அனுபவங்கள் எதுவும் இல்லை, உணர்வு திரண்டு ஒரு திரளாக உள்ளது; அதனால் இது விழிப்பு மற்றும் கனவு நிலை உணர்வுகளின் வாசலாக உள்ளது. ஆனந்தமயமாக, ஆனந்தத்தை அனுபவிப்பதாக உள்ளது. விளக்கமாகக் காண்போம்( ஸுஷுப்தஸ்தான ஏகீபூத ப்ரஜ்ஞானகன ஏவானந்தமயோ ஹ்யானந்தபுக் கசகதாமுக மாண்டூக்ய உபநிஷதம், 5)

1. இந்த நிலையில் அனுபவங்கள் எதுவும் இல்லை. கண், காது போன்ற நமது புலன்கள், உணர்வுமனம், ஆழ்மனம் அனைத்தும் ஓய்வில் ஆழ்ந்துவிடுவதால் இங்கே புறவுலக அனுபவங்களும் இல்லை; மனவுலக அனுபவங்களும் அதாவது கனவும் இல்லை.

2. புறவுலகம், மனவுலகம் என்று எந்த உலகத்தின் அனுபவங்களும் இல்லாமல் மனம், ஆழ்மனம், புத்தி, சித்தம் ஆகியவை ஒடுங்கி இருக்கின்றன. எங்கே? நான்-உணர்வில். அனைத்தும் நான்-உணர்வில் ஒடுங்கிவிட்டதால் தனியான அனுபவங்கள் எதுவும் இல்லை. அதனால் இது அனைத்தும் திரண்ட நிலையாகக் கூறப்படுகிறது.

3. தூங்கும்போது, மனம், ஆழ்மனம் ஆகியவை ஒடுங்கிவிட்டாலும் நான்-உணர்வு விழித்திருக்கிறது. பத்து பேர் தூங்குகின்ற இடத்தில் ராமா என்று கூப்பிடும்போது, ராமன் சட்டென்று விழிப்பது இந்த நான்-உணர்வு விழித்திருப்பதன் காரணமாகத்தான்.

இவ்வாறு நான்-உணர்வில் ஒடுங்கியிருக்கின்ற மனம் வெளிப்படும் போது முதல் நிலையில் கனவும், மேலும் புறநிலையில் வரும்போது விழிப்பு நிலையும் அனுபவிக்கப்படுகின்றன. அதனால்தான் இது மற்ற இரண்டு நிலைகளின் வாசல் என்று கூறப்பட்டது.

4. ஆழ்ந்த தூக்க நிலையிலுள்ள ஒரே அனுபவம் ஆன்ந்தம். அதனால்தான் தூங்கி எழுந்ததும் நான் ஆனந்த மாகத் தூங்கினேன் என்று நம்மால் கூற முடிகிறது.

இங்கே, பிரச்ன உபநிஷத மந்திரத்தில் 2-ஆவது விளக்கம் மட்டுமே தரப்பட்டுள்ளது. அதாவது, மனம் ஒளியால் ஆக்கிரமிக்கப்படுகிறது என்பது மனம் உணர்வுத் திரளில் ஒடுங்குவதைக் குறிக்கிறது.

ஆன்மா: 7-9

அனைத்திற்கும் ஆதாரமாக ஆன்மா உள்ளது என்பதை இந்த மந்திரங்கள் கூறுகின்றன.

7. ஸ யதா ஸோம்ய வயாம்ஸி வாஸோவ்ருக்ஷம்
ஸம்ப்ரதிஷ்ட்டந்தே ஏவம் ஹ வை தத் ஸர்வம் பர ஆத்மனி ஸம்ப்ரதிஷ்ட்டதே

ஸ-அது; யதா-எப்படி; ஸோம்ய-இனியவனே; வயாம்ஸி-பறவைகள்; வாஸோவ்ருக்ஷம்-வாழும் மரத்தை; ஸம்ப்ரதிஷ்ட்டந்தே-நாடுகின்றன; ஏவம் ஹ வை-அது போல்; தத் ஸர்வம்-அவை அனைத்தும்; பரே-மேலான; ஆத்மனி-ஆன்மாவில்; ஸம்ப்ரதிஷ்ட்டதே-ஒடுங்குகின்றன.

பொருள் : இனியவனே! பறவைகள் தாங்கள் வாழும் மரத்தை நாடுவதுபோல் அவை அனைத்தும் மேலான ஆன்மாவில் ஒடுங்குகின்றன.

பகலில் இரை தேடச் சென்ற பறவைகள் மாலை வேளையாகும்போது, தங்கள் கூடுகள் அமைந்துள்ள மரத்தை நாடுகின்றன; அதில் தங்குகின்றன. அதுபோல் புறவுலகுடன் தொடர்புகொண்டு அனுபவங்களைக் கொண்டுவருகின்ற புலன்கள் போன்ற அனைத்தும் தூக்கத்தின்போது நான்-உணர்வில் ஒடுங்குகின்றன. நான்-உணர்வில் ஒடுங்குவதுபற்றி முந்தின மந்திரம் கூறிய 2-ஆம் அடையாளத்தில் கண்டோம்.

அந்த நான்-உணர்வு உட்பட அனைத்தும் ஆன்மாவில் ஒடுங்குகின்றன என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது.

8. ப்ருதிவீ ச ப்ருதிவீமாத்ரா சாபச்சாபோமாத்ரா ச
தேஜச்ச தேஜோமாத்ரா ச வாயுச்ச வாயுமாத்ரா ச
ஆகாசச்சாகாசமாத்ரா ச  சக்ஷúச்ச த்ரஷ்ட்டவ்யம் ச ச்ரோத்ரம் ச ச்ரோதவ்யம் ச க்ராணம் ச க்ராதவ்யம் ச ரஸச்ச ரஸயிதவ்யம் ச
த்வக்ச ஸ்பர்சயிதவ்யம் ச வாக்ச வக்தவ்யம் ச ஹஸ்தௌ சாதாதவ்யம் சோபஸ்தச்ச ஆனந்தயிதவ்யம் ச பாயுச்ச விஸர்ஜயிதவ்யம் ச பாதௌ ச கந்தவ்யம் ச
மனச்ச மந்தவ்யம் ச புத்திச்ச போத்தவ்யம் சாஹங்காரச்ச அஹம்கர்த்தவ்யம் ச சித்தம்
ச சேதயிதவ்யம் ச தேஜச்ச வித்யோதயிதவ்யம் ச ப்ராணச்ச விதாரயிதவ்யம் ச

ப்ருதிவீ-பூமி; ப்ருதிவீ மாத்ரா-பூமியின் நுண்பகுதி; ஆப-தண்ணீர்; ஆபோமாத்ரா-தண்ணீரின் நுண்பகுதி; தேஜ-ஒளி; தேஜோ மாத்ரா-ஒளியின் நுண்பகுதி; வாயு-காற்று; வாயு மாத்ரா-காற்றின் நுண்பகுதி; ஆகாச-வெளி; ஆகாச மாத்ரா-வெளியின் நுண்பகுதி; சக்ஷú-கண்; த்ரஷ்ட்டவ்யம்-பார்க்கப்படுவது; ச்ரோத்ரம்-காது; ச்ரோதவ்யம்-கேட்கப்படுவது; க்ராணம்-மூக்கு; க்ராதவ்யம்-முகரப்படுவது; ரஸ-சுவை; ரஸியிதவ்யம்-சுவைக்கப்படுவது; த்வக்-தோல்; ஸ்பர்சயிதவ்யம்-தொடப்படுவது; வாக்-பேச்சு;வக்தவ்யம்-பேசப்படுவது; ஹஸ்தௌ-இரண்டு கைகள்; ஆதாதவ்யம்-எடுக்கப்படுவது; உபஸ்த-குறி; ஆனந்தயிதவ்யம்-இன்பத்தை அனுபவிப்பது; பாயு-குதம்; விஸர்ஜயிதவ்யம்-விடப்படுவது; பாதௌ-இரண்டு கால்கள்; கந்தவ்யம்-நடப்பது; மன-மனம்; மந்தவ்யம்-நினைக்கப்படுவது; புத்தி-அறிவு; போத்தவ்யம்-அறியப்படுவது; அஹங்காரம்-நான் உணர்வு; அஹம் கர்த்தவ்யம்-நான் என்று உணர்வது; சித்தம்-நினைவு; சேதயிதவ்யம்-நினைவுகூர்ந்து; தேஜ-ஒளி; வித்யோதயிதவ்யம்-விளக்கப்படுவது; ப்ராண-பிராணன்; விதாரயிதவ்யம்-ஒருங்கிணைக்கப்படுவது.

பொருள் : பூமி, பூமியின் நுண்பகுதி; தண்ணீர், தண்ணீரின் நுண்பகுதி; ஒளி, ஒளியின் நுண்பகுதி; காற்று, காற்றின் நுண்பகுதி; வெளி, வெளியின் நுண்பகுதி; கண், பார்க்கப்படுவது; காது, கேட்கப்படுவது; மூக்கு, முகரப்படுவது; சுவை, சுவைக்கப்படுவது; தோல், தொடப்படுவது; பேச்சு, பேசப்படுவது; கைகள், எடுக்கப்படுவது; குறி, இன்பத்தை அனுபவிப்பது; குதம், விடப்படுவது; கால்கள், நடப்பது; மனம், நினைக்கப்படுவது; அறிவு, அறியப்படுவது. நான்-உணர்வு, நான் என்று உணர்வது; நினைவு, நினைவுகூர்ந்து; ஒளி, அந்த ஒளியினால் விளக்கப்படுவது; பிராணன், ஒருங்கிணைக்கப்படுவது என்று அனைத்தும் ஆன்மாவிலேயே ஒடுங்குகின்றன.

நிலம், நீர், காற்று, நெருப்பு, வெளி ஆகிய 5 அடிப்படை மூலங்களால் (பஞ்ச பூதங்களால்) ஆனது உடம்பு. அதில் அந்த அடிப்படை மூலங்களில் தூலப் பதிகளும் உள்ளன, நுண்பகுதிகளும் உள்ளன. இவற்றுடன் பொறிகள், புலன்கள், அனுபவங்கள், அனுபவங்களுக்கு ஆதாரமான மனம், அதன் பல்வேறு பரிமாணங்கள், நான்-உணர்வு, உடம்பு-மனச் சேர்க்கையை ஒருங்கிணைத்து வைத்திருக்கிருக்கின்ற பிராணன் என்று அனைத்தும் ஆன்மாவில் ஒடுங்குகின்றன.

9. ஏஷ ஹி த்ரஷ்ட்டா ஸ்ப்ரஷ்ட்டா ச்ரோதா க்ராதா ரஸயிதா மந்தா போத்தா கர்த்தா
விஜ்ஞானாத்மா புருஷ ஸ பரேக்ஷரே ஆத்மனி ஸம்ப்ரதிஷ்ட்டதே

ஏஷ ஹி-அதுவே; த்ரஷ்ட்டா-காண்பது; ஸ்ப்ரஷ்ட்டா-தொடு உணர்ச்சியை அறிவது; ச்ரோதா-கேட்பது; க்ராதா-முகர்வது; ரஸியிதா-சுவைப்பது; மந்தா-நினைப்பது; போத்தா-அறிவது; கர்த்தா-செய்வது; விஜ்ஞானாத்மா புருஷ-உணர்வது; ஸ-அது; பரே-மேலான; அக்ஷரே-அழிவற்ற; ஆத்மனி-ஆன்மாவில்; ஸம்ப்ரதிஷ்ட்டதே-நிலைபெற்றுள்ளது.

பொருள் : காண்பது, தொடு உணர்ச்சியை அறிவது, கேட்பது, முகர்வது, சுவைப்பது, நினைப்பது, உணர்வது, செய்வது அனைத்திற்கும் நான்-உணர்வே ஆதாரம். தூக்க நிலையை அனுபவிக்கின்ற அந்த நான்-உணர்வு மேலான, அழிவற்ற ஆன்மாவில் நிலைபெற்றுள்ளது.

ஆன்ம அனுபூதி : 10-11

அனைத்திற்கும் ஆதாரமான ஆன்மாவை அனுபூதியில் அறிவதுபற்றி இந்த இரண்டு மந்திரங்களும் கூறுகின்றன.

10. பரமேவாக்ஷரம் ப்ரதிபத்யதே ஸ யோ ஹ வை ததச்சாயம்
அசரீரம் அலோகஹிதம் சுப்ரமக்ஷரம் வேதயதே யஸ்து ஸோம்ய ஸ
ஸர்வஜ்ஞ ஸர்வோ பவதி ததேஷ ச்லோக

பரம்-மேலானது; அக்ஷரம்-அழிவற்றது; அச்சாயம்-நிழலற்றது; அசரீரம்-உடம்பற்றது; அலோஹிதம்-நிறமற்றது; சுப்ரம்-தூய்மையானது; அக்ஷரம்-அழிவற்றது; ய: ஹ வை-யார்; வேதயதே-அனுபூதியில் உணர்கிறானோ; ஸ ஏவ-அவன் மட்டுமே; ப்ரதிபத்யதே-அடைகிறான்; ஸோம்ய-இனியவனே; ஸ து-அவன்; ஸர்வஜ்ஞ-அனைத்தையும் அறிபவன்; ஸர்வ-அனைத்தும்; பவதி-ஆகிறான்; தத்-அதுபற்றி; ஏஷ-இந்த; ச்லோக-சுலோகம்.

பொருள் : இனியவனே! மேலான, அழிவற்ற, நிழலற்ற, உடம்பற்ற, நிறமற்ற, தூய்மையான அந்த ஆன்மாவை யார் அனுபூதியில் உணர்கிறானோ அவன் மட்டுமே ஆன்மாவை அடைகிறான். அவன் அனைத்தையும் அறிபவனாக, அனைத்துமாக ஆகிறான். இதுபற்றி கீழ்வரும் மந்திரமும் உள்ளது.

11. விஜ்ஞானாத்மா ஸஹ தேவைச்ச ஸர்வை
ப்ராணா பூதானி ஸம்ப்ரதிஷ்ட்டந்தி யத்ர
ததக்ஷரம் வேதயதே யஸ்து ஸோம்ய
ஸ ஸர்வஜ்ஞ ஸர்வமேவ ஆவிவேசேதி

விஜ்ஞானாத்மா ஸஹ-நான் உணர்வுடன்; தேவை-புலன்கள்; ஸர்வை-அனைத்தும்; ப்ராணா-பிராணன்கள்; பூதானி-அடிப்படை மூலங்கள்; யத்ர-எங்கே; ஸம்ப்ரதிஷ்ட்டந்தி-நிலைபெற்றுள்ளனவோ; தத்-அந்த; அக்ஷரம்-அழிவற்ற பொருளை; ய-யார்; வேதயதே-அனுபூதியில் உணர்கிறானோ; ஸ து-அவனே; ஸர்வஜ்ஞ=-அனைத்தையும் அறிபவன்; ஸர்வம் ஏவ-அனைத்தும் ஆவிவேச-வியாபிக்கிறான்; இதி-என்று.

பொருள் : நான்-உணர்வு, புலன்கள், பிராணன்கள், அடிப்படை மூலங்கள் ஆகிய அனைத்தும் எங்கே நிலைபெற்றுள்ளனவோ அந்த அழிவற்ற ஆன்மாவை அனுபூதியில் உணர்பவன் அனைத்தையும் அறிபவன் ஆகிறான்; அனைத்திலும் வியாபிக்கிறான்.

இதி ப்ரச்னோபநிஷதி சதுர்த்த: ப்ரச்ன:

 
மேலும் பிரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி) »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news

1.அறிவைத் தேடி மார்ச் 27,2012

அறிவு எனும் தீபம் சுடர்விட்டுப் பிரகாசிக்காவிட்டால் உலகம் முழுவதுமே காரிருளில் மூழ்கியிருக்கும் ... மேலும்
 
ஆகாசம், பிராணன் ஆகிய இரண்டும் முதலில் படைக்கப்பட்டன 1:4. அனைத்துப் பொருட்களாவும் ஆகியிருப்பது ஆகாசம். ... மேலும்
 
சென்ற அத்தியாயத்தில் பிராண சக்தியின் மகிமைபற்றி கண்டோம். இங்கே அதன் செயல் பாடுகளைப்பற்றி காண்கிறோம். ... மேலும்
 
பிரச்ன உபநிஷதம் கூறுகின்ற சாதனைப் பகுதிக்கு வருகிறோம். உலகைப்பற்றி, உலகை இயக்குகின்ற பிராணனைப்பற்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar