பதிவு செய்த நாள்
28
மார்
2012
11:03
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பழமை வாய்ந்த இந்து கோவிலை, நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக இடிப்பதற்கு, அப்பகுதி மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில், பழமை வாய்ந்த பனங்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி பாதையாக மாற்றுவதற்கான விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு நிலம் ஆர்ஜிதம் செய்ய, தேசிய நெடுஞ்சாலைத் திட்ட அதிகாரிகள், பனங்காட்டீஸ்வரர் கோவில் கருவறை வரை உள்ள இடத்தை அகற்றுவதற்காக, சில தினங்களுக்கு முன் ஆய்வு செய்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், கோவிலை இடிக்கும் முயற்சிக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரலாற்று புகழ் பெற்ற இக்கோவிலை, இடிக்காமல், மாற்றுப் பாதையில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர்வாசிகள் கூறுகையில், ""சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோவில் இது. பாதுகாக்கப்பட வேண்டிய இக்கோவிலை, இடிக்க நினைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், மற்ற மதக்கோவில்களை இடிக்க முனைப்பு காட்டுவார்களா? என கேள்வி எழுப்பினர்.