பால்டியூக்ஸ் என்னும் ஆங்கில பத்திரிகையாளரும், லாவஸ்டைன் என்னும் பிரான்ஸ் அறிஞரும் ஒருமுறை தமிழகம் வந்தனர். அப்போது மகாசுவாமிகள் சென்னையில் முகாமிட்டிருந்தார். இருவரும் சுவாமிகளை தரிசிக்க விரும்பினர். வெளிநாட்டினரான அவர்களைக் காண வெளியே வந்த சுவாமிகள், வைக்கோல் மீது மரப்பலகையை ஆசனமாக்கி அமர்ந்தார். அவரது முகத்தில் புன்னகை அரும்பியது. மடாதிபதிக்கு உரிய சிம்மாசனம் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் இருந்தாலும், சுவாமிகள் விரும்புவது எளிமை தானே! இதை நேரில் பார்த்த அவர்களுக்கு வியப்பு மேலிட்டது. நாற்காலியில் உட்கார்ந்தே பழகிய அவர்களால், கால்களை மடித்து சம்மணம் இட முடியவில்லை. கால்களை நீட்டியபடி சுவாமிகளின் முன் அமர்ந்தனர். இது மரியாதைக் குறைவான செயல் அல்லவா? அதனால் கால் நீட்டுவது கூடாது என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
அப்போது சுவாமிகள் குறுக்கிட்டு, ”எது அவர்களுக்கு வசதியோ அப்படியே உட்காரட்டும். மரியாதை மனதில் இருக்கிறதே தவிர, உடலில் அதை காட்ட வேண்டிய அவசியமில்லை. இவர்களைப் பார்த்தால் வளர்ந்த குழந்தைகளாகத் தான் என் மனசிற்குத் தோன்றுகிறது. குழந்தைகள் எப்படி உட்கார்ந்தால் தான் என்ன?” என்றார். அதைக் கேட்டதும் வியப்பின் உச்சிக்கு போய் விட்டனர். அவரிடம் மனதிலுள்ள சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். கடைசியாக ”சுவாமி! உலகெங்கும் உள்ள மக்களுக்கு நீங்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன?’ எனக் கேட்டனர். அன்பால் வேற்றுமை மறையும். இதனால் உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற எண்ணம் வலுப்படும். எளிமையாக வாழ்வது மனநிம்மதி அளிக்கும்” என்றார் மகாசுவாமிகள். அவர்களின் மனதில் அமைதி குடிகொண்டது.