பதிவு செய்த நாள்
13
ஆக
2019
04:08
தலைக் கவசம் நம் தலைக்கு கனமாக இருந்தாலும் உயிரைக் காக்கும், ஆனால் தலைக்கனம் கொஞ்சம் இருந்தாலும் வாழ்வை அழிக்கும். தலைக்கனத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும். உடம்புக்கு பிரச்னை என்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். ஆனால் தீய பண்புகள் மனம் சம்பந்தப்பட்டவை. எனவே நாம் தான் அவற்றில் இருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
’எனக்கு தலைக்கனம் இருக்கிறது’ என்ற சுயஉணர்வு முதலில் வர வேண்டும். பெரிய பதவியில் இருப்பவர்களிடம் பணிபுரிபவர்களுக்கு, இது பற்றி நன்றாக தெரியும். ஆனால் பயத்தில் அவர்கள் சொல்வதில்லை. பெரிய பதவி வகிப்பவர்கள் இது போன்ற பிரச்னைகள், தலைதூக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
குறைகளை சொன்னால் பொறுமையுடன் கேட்க வேண்டும். சொல்பவர் மீது கோபப்படுவதோ அல்லது உதாசீனம் செய்வதோ கூடாது. பழைய கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. நாடாளும் மன்னர் ஒருவர் இருந்தார். அவர் அறிவுரை சொல்வோர் மீது கோபப்படுவார். அதனால் யாரும் வாய் திறக்கவில்லை. மற்றவர் நடவடிக்கையில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்தார் மன்னர். ஒருமுறை துறவி ஒருவர், மன்னரைக் காண வந்தார். அவரிடம் தன் நிலையை தெரிவித்த மன்னர், தவறு செய்யும் போது உணர வழியுண்டா எனக் கேட்டார். அதற்கு துறவி, ’நான் தரும் மோதிரத்தை அணிந்தால் தவறை சுட்டிக்காட்டும். திருத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு நிபந்தனை. மோதிரம் சொல்லும் எச்சரிக்கையை உதாசீனம் செய்தால், அதன் விசேஷ சக்தி மறையும்” என்றார். மன்னரும் மோதிரத்தின் எச்சரிக்கையை உணர்ந்து செயல்பட்டார். ஆனால் ஒருமுறை அதன் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தவே, மோதிரத்தின் சக்தி மறைந்தது. பின்னர் மன்னரும் அழிந்தே போனார்.
இரண்டாவது தன் வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணம் நான் தான் என நினைப்பது கூடாது. ஸ்லோகம் ஒன்று உண்டு.
ஆசார்யாத் பாதம் ஆதத்தே
பாதம் சிஷ்ய ஸ்வ மேதயா
பாதம் ஸ ப்ரம்ஹ சாரிப்யஹ
பாதம் கால க்ரமேன ச
நான்கு விதங்களில் நம்மை படிப்பு வந்தடைகிறது. முதல் கால்பாகம், ஆசிரியர்களின் மூலம் கிடைக்கிறது. இரண்டாம் கால் பாகம், முயற்சியுடன் நாமாக படித்து அறிவது. முன்றாம் கால்பாகம், மற்றவர்களிடம் கேட்டுப் பெறுவது நான்காம் கால்பாகம் அனுபவம் மூலமாக கிடைப்பது. ஆக முயற்சி என்பது நான்கில் ஒரு பாகம் மட்டுமே. முக்கால் பாகம் மற்றவர் மூலம் நாம் பெறுகிறோம் என்பதை உணர்ந்தால் அடக்கம் வரும்.
மூன்றாவது, மற்றவர்களிடம் உள்ள நல்ல விஷயத்தை ஏற்கும் பக்குவம் வேண்டும். ’நான் இந்த வேலையை நேர்த்தியாகச் செய்தேன்’ என நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதே நேரம் இந்த வேலையை வேறு யாரும் என்னை விட நன்றாகச் செய்ய முடியாது என நினைக்க கூடாது.
நான்காவது, நாமும் தவறு செய்ய நேரிடும் என்பதை உணர வேண்டும். ’ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்ற பழமொழி இருக்கிறதே! ’ஆமாம்! நான் தவறு செய்தேன்’ என ஒத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான். தவறு ஏன் ஏற்பட்டது என சிந்திக்க முடியும். இந்த மனநிலை இல்லாவிட்டால் பிறர் மீது பழி சொல்வோம் அல்லது புதிய விஷயங்களை கற்க விரும்ப மாட்டோம்.
ஐந்தாவது, நம்மைப் பற்றியும், நமது சாதனைகளைப் பற்றியும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே பேசுபவர்களை நீங்கள் சந்தித்திருக்கலாம். நான் ஒருமுறை எனக்குத் தெரிந்தவரோடு பயணம் செல்ல நேர்ந்தது. இரண்டு மணி நேரம் தன்னைப் பற்றியே பேசினார். நானும் சலிப்புடன் கேட்டேன். பிறகு தான் அவர், ”சாரி சார், என்னைப் பற்றியே இதுவரைப் பேசி விட்டேன்.....இப்போது நீங்கள் என்னைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றாரே பார்க்கலாம்! நாமும் அப்படி இருப்பது கூடாது.
ஆறாவது, மற்றவர்கள் சொல்வதை அக்கறையுடன் கேட்கும் எண்ணம் வேண்டும். ஆங்கிலத்தில் ’ஆக்டிவ் லிசனிங்’ (அஞிtடிதிஞு ஃடிண்tஞுணடிணஞ்) என்பார்கள். இதன் மூலம் மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் தெரிய வரும். அது மட்டுமல்ல. நம்மைப் பற்றிய விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்று திருந்துவோம்.
ஏழாவது, உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் எப்படி பணிவுடன் நடக்கிறார்கள் என கவனியுங்கள். நிறை குடம் தளும்பாது என்பார்களே! உயர்ந்த மனிதர்கள் எழுதிய நூல்களை படியுங்கள்.
’எனக்குத் தான் எல்லாம் தெரியும்; வேறு யாரும் எனக்கு நிகரில்லை’ என நினைப்பது பலவீனத்தின் வெளிப்பாடு. மற்றவர்கள் தன்னை வென்று விடுவார்களோ, மற்றவர்கள் தன்னை விட அதிகம் தெரிந்திருப்பார்களோ என்பது பயத்தின் வெளிப்பாடு. இதன் காரணமாக மற்றவர்கள் கேள்வி கேட்பதையோ, விமர்சனம் செய்வதையோ சிலர் விரும்ப மாட்டார்கள்.
’எனக்கு நல்ல அறிவு இருக்கிறது, நான் சாதிக்கிறேன்’ என நினைப்பதில் தவறில்லை. இன்னும் சொன்னால் வெற்றிகளை பட்டியல் இடுவதால் தன்னம்பிக்கை பிறக்கும். ஆனால் தன்னம்பிக்கை வேறு; கர்வம் வேறு என வேறுபடுத்திப் பார்ப்பதில் தெளிவு வேண்டும். இதோ ஒரு பயிற்சி. உங்கள் நலனில் அக்கறையுள்ள ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் மனம் விட்டு பேசுங்கள். மற்றவர்கள் முன் எப்படி நடக்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தான் புரியும். இதுவரை பார்த்த இந்த பண்புகள் இருக்கிறதா என வெளிப்படையாக கேளுங்கள். பிறகு பிரச்னையில் இருந்து வெளிவர திட்டமிடுங்கள்.
சரி... கர்வத்தை அடக்கினாலும் இன்னொரு முக்கிய சுபாவம் ஒன்று நம்மை அழிக்கும். அது மனிதனுக்கு தேவை என்றாலும், அளவுக்கு அதிகமாகும் போது பிரச்னையாகி விடும். எனவே அதிலிருந்து தப்ப மனம் விழிப்புடன் இருக்க வேண்டும். அதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.