வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா திருக்கல்யாணத்தில் பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் பிரம்மோற்ஸவ விழா கடந்த ஆக. 9 முதல் துவங்கி நடந்து வருகிறது.
இதன் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்ததையொட்டி அதிகாலையில் சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் யாக பூஜைகள் நடந்தன. சிறப்பு பூஜைகளுக்குபின் பெருமாள் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த ஆண்டாள் அலங்கார பந்தலில் எழுந்தருளினார். அவரை தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி தாயார் களும் எழுந்தருளினர். மாப்பிள்ளை அழைப்பு மாலை மாற்றும் வைபவம் உள்ளிட்ட பல்வேறு திருமண சடங்குகள் நடந்தன. பக்தர்கள் சுற்றி நின்று அட்சதை தூவி சுவாமியை வணங்கினர்.பின் மணக்கோலத்தில் சுவாமி மைய மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.கோயில் சேவா சமிதி டிரஸ்ட் தலைவர் ராஜகோபாலன் செயலாளர் நாராயணன் பொருளாளர் சங்கரநாராயணன் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.