திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில் செடல் உற்சவம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மன் கோவிலில் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செடல் உற்சவம் சிறப்பாக நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. வேண்டுதல் உள்ள பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படையல் வைத்தனர். மாலை 4:00 மணிக்கு தென்பெண்ணையில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கலந்து கொண்டனர். ஊர்வலம் கோவிலை அடைந்தவுடன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த செடலில் செம்மரி ஆட்டிற்கு அலகு குத்தி செடலில் சுற்றவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.