சிங்கம்புணரி: மதுரை மாவட்டம், அழகர்கோவில் பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு சிங்கம்புணரி வழியாக பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர்.
புதுக்கோட்டை, இலுப்பூர் திருமுருகன் வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடியில் காவடி எடுத்து பாதயாத்திரை செல்வது வழக்கம். கடந்த 12 ம் தேதி இலுப்பூரில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் குருசாமி முத்துவிநாயகம் தலைமையில் காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். நேற்று சிங்கம்புணரி வந்த பக்தர்கள் சேவுக பெருமாள் கோயிலில் தங்கி, அங்கிருந்து அழகர் கோவில் நோக்கி பாதயாத்திரை சென்றனர். இக்குழுவில் உள்ள 101 பக்தர்கள் மயில்காவடி எடுத்து உற்சாகமாக நடனமாடி, பழமுதிர்சோலை முருகனை தரிசிக்க சென்றனர். அங்கு பழமுதிர்சோலை முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.