பிரான்ஸ் எழுத்தாளர் லெபைலிக்கு, ஒரு வாசகர் கடிதம் எழுதியிருந்தார். அதில் ”என் நண்பர் தன்னை விட சுறுசுறுப்பானவர் யாருமில்லை என பெருமை பேசுகிறார். திருத்த வழி சொல்லுங்கள்” எனக் கேட்டிருந்தார். லெபைலி ஒரு கதையை பதிலாக அனுப்பினார். ஒரு செடியில் பட்டுப்புழுவும், சிலந்தியும் கூடு கட்டின. சிலந்தி வேகமாக பணியை முடித்தது. பட்டுப்புழு ஆற அமர கூடு கட்டியது. புழுவிடம்,“ பார்த்தாயா என் சுறுசுறுப்பை! வேகமாக என் வேலை முடிந்தது. நீண்ட நாளாகியும் உன்னால் கூட்டைக் கட்ட முடியவில்லை” என கேலி செய்தது. “பரவாயில்லை. உன் கூட்டால் யாருக்கு என்ன லாபம்? என் வலை பட்டு நூலாகி பலன் தருமே!” என்றது. இந்தக் கதையை எழுதிய லெபைலி, ”இதை உங்கள் நண்பருக்கு பதிலாக அனுப்புங்கள். அதன் பின் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்” என்று எழுதியிருந்தார்.