சிலரது வீட்டுக்குப் போனால், ”வாங்க...உட்காருங்க... காபி சாப்பிடுங்க! சாப்பிட ஏதாவது தரட்டுமா? ஒரு நிமிஷத்தில் சப்பாத்தி ரெடியாகி விடும்” என்று உபசரிப்பு பலமாக இருக்கும். சில வீடுகளில், சமையலறையில் திரையிட்டுக் கொண்டு பெண்கள் வெளியில் வர மாட்டார்கள். வீட்டுத் தலைவரோ நம்மிடம் உலக விஷயமெல்லாம் பேசுவார். ஆனால் குடிக்க தண்ணீர் கூட தர மாட்டார். இதற்காக, அந்த நபர் நம் வீட்டுக்கு வந்தால் உபசரிக்காமல் இருக்க கூடாது. ”நபிகளாரே! நான் ஒருவரது வீட்டிற்குச் சென்றேன். அவர் என்னை உபசரிக்கவில்லை. அவர் என் வீட்டுக்கு வந்தால், நானும் உபசரிக்காமல் இருக்கலாமா?” எனக் கேட்டார் ஒருவர். அதற்கு அவர், ”அப்படி செய்யக் கூடாது. நீங்கள் எந்த நிலையிலும் அவரை உபசரித்தே தீர வேண்டும்” என்றார். வீட்டுக்கு வரும் விருந்தினரை கவுரவியுங்கள். முகமலர்ச்சியுடன் பேசுங்கள். இதையே இறைவன் விரும்புகிறான்.