கிருஷ்ண பக்தரான அக்ரூரர், ஆயர்பாடியில் இருந்த கண்ணனையும், அவரது அண்ணன் பலராமரையும், மதுரா நகருக்கு அழைத்து வந்தார். இவர்களைக் கண்ட மக்கள் அவர்களின் அழகு கண்டு மெய் மறந்தனர். அப்போது அந்த வழியாக முதுகு வளைந்த வயதான பெண் ஒருத்தி சந்தன கிண்ணத்துடன் சென்றாள். அவளிடம் கிருஷ்ணர், “குணத்தால் உயர்ந்த பெண்ணே! சந்தனத்தை எங்கு எடுத்துச் செல்கிறாய்?” எனக் கேட்டார்.
மதுராபுரி மன்னரான கம்சனின் பணிப்பெண் நான். அசுர மன்னனுக்கு பணி செய்தே வாழ்நாளை வீணாக்கி விட்டேன். இன்றாவது சந்தனத்தை நல்லவர்களுக்கு அளித்து வாழ்வை பயனுள்ளதாக்குகிறேன்” என்றாள். பின் கிருஷ்ணர், பலராமருக்கு சந்தனம் பூசினாள். கிருஷ்ணர் விரல்களால் அவளின் முகவாய், கால்களை வேகமாக அழுத்த, உடனே கூன் நிமிர்ந்த பெண்ணாக மாறினாள். கிருஷ்ணருக்கு சந்தனம் அளித்த புண்ணியம் உடனடியாக பலன் அளித்ததை எண்ணி மகிழ்ந்தாள். இப்பெண் யார் தெரியுமா? கூனியாகப் பிறந்து ராமரைக் காட்டுக்கு அனுப்பக் காரணமான மந்தரை. இந்த பிறவியில், கிருஷ்ணருக்கு சந்தனம் அளித்து பாவம் நீங்கப் பெற்றாள். கூன் நிமிர்ந்தது போல, கண்ணனை நம்பினால் சொன்னது பலிக்கும்.