பதிவு செய்த நாள்
20
ஆக
2019
03:08
மனம் விழிப்புடன் இருப்பதை தடுக்கும் தீய சக்திகளில் ’மோகம்’ என்பதும் ஒன்று. ஒரு பொருளின் மீதோ அல்லது ஒரு நபரின் மீதோ உண்டாகும் இனம் புரியாத தற்காலிகமான ஈர்ப்பு. இதனால் யார் நல்லவர், யார் கெட்டவர், எது நல்லது எது கெட்டது என்ற தெளிவு இருக்காது. ஆங்கிலத்தில் ’இன்ஃபாட்சுனேஷன்’ (ஐணஞூச்tதச்tடிணிண) என்பர்.
13 முதல் 19 வயது வரையுள்ள ’டீன் ஏஜ்’ பருவ குழந்தைகள் இதன் பிடியில் சிக்கி தவிப்பதை பெற்றோர், ஆசிரியர்கள் பார்த்திருப்பர். மோகத்தின் பாதிப்பை குறித்து வளரும் குழந்தைகள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். வயதின் அடிப்படையில் வாழ்வை நான்காக பிரிக்கலாம். முதல் இருபது ஆண்டுகளில் விளையாட்டுக் காலமும், படிப்பும் முடிகிறது. அடுத்த இருபதில் பணி தொடங்கி, அறிவு, திறமை, அனுபவத்தால் மனிதன் முன்னேற வேண்டும். 60 வயதிற்குள் உச்சக்கட்டதை அடைந்து ஓய்வுக்கு தயாராக வேண்டும். அதன் பின் குடும்பம், உறவினர்களோடு எஞ்சிய வாழ்வை ரசிக்க வேண்டும். முதல் இருபது வயதில் மனச்சிதறல் இல்லாமல் அக்கறையுடன் படிக்க வேண்டும். இதிலும் பள்ளி இறுதியாண்டு தொடங்கி பட்டப்படிப்பு வரையுள்ள காலம் முக்கியமானது. அப்போது குழந்தைகள் தானாக சிந்திக்கும் நிலையை அடைகின்றனர். மனம், உடல் ரீதியான மாற்றத்திற்கு ஆளாகின்றனர். இந்த வயதில் தான் மோகம் தன் வேலையைக் காட்டுகிறது.
தேவையற்ற செயல்களில் ஈடுபட மனம் துாண்டுகிறது. ’பாய் பிரண்ட்; கேர்ள் பிரண்ட்’ என வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்தது போன்ற மாயவலையில் சிக்குகின்றனர். காதல், இன்ஃபாட்சுனேஷனுக்கு இடையில் உள்ள வித்தியாசம் புரியாமல் நேரத்தை வீணாக்கி படிக்கத் தவறுகின்றனர். இதுவே இப்போது பெற்றோர், ஆசிரியர், கல்வியாளர்களுக்கு முக்கிய பிரச்னையாக இருக்கிறது. எரியும் நெருப்பில் எண்ணெய்யாக குழந்தைகளின் மனதை பாழாக்கும் விதத்தில் சினிமாவில் காதல் கதைகள், பாட்டு, வசனங்கள் நிறைய வருகின்றன. அலைபேசி, ஹியர்போன், பேஸ்புக், வாட்ஸ் – ஆப், டுவிட்டர், டெலிகிராம் ஆகியன சேர்ந்து கொண்டன.
இது தான் மோகத்தின் வெளிப்பாடு. முக்கியமாக பெண் குழந்தைகளின் பெற்றோர் ’வயிற்றில் நெருப்பைக் கட்டியிருக்கும்’ சூழ்நிலையை குடும்பங்களில் பார்க்கலாம். மோகம் என்னும் வலையிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் குழந்தைகளின் மனம் விழித்தெழ வேண்டும். உடலால் தவறு செய்தால் உடனே வெளியில் தெரியும். திருத்தவும் வாய்ப்புண்டு. உடலுக்குத் தண்டனை கொடுக்கலாம். ஆனால் மனதால் தவறும் போது என்ன செய்ய? ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு இளைஞர் மனதைக் கட்டுப்படுத்தும் எண்ணத்தில் காட்டில் போய் அமர்ந்தார். அப்போது அங்கு அழகான பெண் ஒருத்தி செல்வதைக் கண்டார். இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டார்.
மறுநாளும் அந்தப் பெண் போனாள். கண்கள் அவளையே பார்த்தன. சரி...அவள் வரும் போது கண்களை திறக்க கூடாது என முடிவெடுத்தார். மறுநாள் அப்பெண் கடக்கும் போது, கொலுசு சத்தம் மனதை கவர்ந்தது. அடுத்த நாள் காதுகளை பஞ்சால் அடைத்தார். அவள் செல்லும் போது கூந்தலில் சூடிய பூவின் மணம் மூக்கை துளைத்தது. அடுத்த நாள் கண், காது, மூக்கை மூடிக் கொண்டார். ஆனால் அவரது மனதிற்குள் ’இப்போது அவள் வரும் நேரமாச்சே!’ என்ற எண்ணம் எழுந்தது. உறுப்புகளை ஒருவன் கட்டலாம். ஆனால் மனதை எப்படி கட்டுவது?
மனதைப் பண்படுத்தும் சக்தி புத்திக்கு இருக்க வேண்டும். எது நமக்கு அவசியம், எது நல்லதைக் கொடுக்கும், எது தீமையை விளைவிக்கும் என்பதை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். இதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம். ’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பார்கள். எந்தளவுக்கு இது உண்மை என்பது அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது. ஆனால் ’நல்ல பெற்றோர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாது என சிலர் நினைக்கின்றனர். ஆனால் முடியாது என நினைப்பதை மற்றவர்கள் செய்து முன்னேறும் போது ஒருவித பீலிங் வருகிறது அல்லவா?