அள்ள அள்ள குறையாமல் உணவு தரும் அட்சய பாத்திரம் ஒன்று பாண்டவர்களிடம் இருந்தது. ஒருநாள் அதன் மூலம் உணவிட்ட திரவுபதி, தானும் சாப்பிட்டு பாத்திரத்தை கழுவினாள். இனி மறுநாள் தான் பாத்திரம் உணவு அளிக்கும் என்னும் நிலையில், துர்வாசர் உள்ளிட்ட முனிவர்கள், பாண்டவரைக் காண வந்தனர். பசியுடன் வந்தவர்களுக்கு கொடுக்க உணவில்லையே என தர்மர் வருந்தினார். அவரைத் தேற்றிய திரவுபதி கிருஷ்ணரை வழிபட்டாள். காட்சியளித்த கிருஷ்ணர் பாத்திரத்தை எடுக்க, அதில் ஒரு பருக்கை ஒட்டியிருந்தது. அதை எடுத்து சுவைத்தார். முனிவர்கள் அனைவரும் வயிறார சாப்பிட்டது போல மகிழ்ந்தனர். பக்தியுடன் ஒரு பருக்கை படைத்தாலும் கூட கிருஷ்ணர் அனைவருக்கும் படியளப்பார் என்பதற்கு இது உதாரணம்.