ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்து புனித நீராடும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து புனித நீராடுகின்றனர். விடுமுறை நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேல் வருகின்றனர். பக்தர்களை கூட்ட நெரிசல் மற்றும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க கோயில் தெற்கு ரதவீதியில் தகர சீட்டில் நீண்ட பந்தல், தடுப்பு வேலி அமைத்தனர். சமீபத்தில் ரதவீதியில் வாறுகால் அமைக்கும் பணிக்காக பந்தல், தடுப்பு வேலியை கோயில் நிர்வாகம் அகற்றியது. தற்போது பணிகள் முடிந்த நிலையில் பந்தல், தடுப்பு வேலி அமைக்க கோயில் நிர்வாகம் முன்வரவில்லை.இதனால் பக்தர்கள் ரதவீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடுகின்றனர். இதில் முதியோர், பெண்கள், குழந்தைகள் பலரும் தாகத்திற்கு குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். சிலர் வெயிலில் மயங்கி விழுகின்றனர். ஆண்டுக்கு பலகோடி ரூபாய் உண்டியல் வருவாய் கிடைக்கும் இக்கோயிலில், பக்தர்களுக்கு பந்தல், குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தாது கண்டனத்திற்குரியது, என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.