பதிவு செய்த நாள்
21
ஆக
2019
12:08
தஞ்சாவூர், திருவையாறு பகுதிக்கு, காவிரி தண்ணீர் வந்ததையடுத்து பொதுமக்களும், சிவாச்சாரியார்களும் தீபாராதனை காட்டி, மலர் துாவி வரவேற்றனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக, 13ம் தேதி, காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
அந்த தண்ணீர், 120 கி.மீ., கடந்து, கல்லணைக்கு வந்தது.கடந்த, 17ம் தேதி அதிகாலை, கல்லணையிலிருந்து காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில், பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டப்பட்டது. கல்லணையிலிருந்து, 33 கி.மீ., கடந்து, நேற்று காலை, திருவையாறுக்கு காவிரி தண்ணீர் வந்தது. அப்போது, புஷ்பமண்டப படித்துறையில் பொதுமக்களும், சிவாச்சாரியார்களும் மஞ்சள், குங்குமம், மலர் துாவி, காவிரி தண்ணீரை வரவேற்றனர். தொடர்ந்து, கற்பூர ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து வழிபட்டனர். இந்த ஆண்டு வறட்சியில்லாமல் செழிப்புடனும், வளமாகவும் இருக்க வேண்டும் என வேண்டி, காவிரியை வழிபட்டனர்.