பதிவு செய்த நாள்
21
ஆக
2019
01:08
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூரில் வில்லார் உடையார் அய்யனார் கோயிலில் கி.பி.,10 ம் நுாற்றாண்டை சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, திருவாடானை துணைத் தாசில்தார் ஆண்டி ஆகியோர் கலையூரில் கள மேற்பரப்பாய்வு செய்தனர்.அவ்வூர் வில்லார் உடையார் அய்யனார் கோயிலில் உடைந்த நிலையில் இருந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கண்டுபிடித்தனர். தொல்லியல் ஆய்வு நிறுவனத்தில் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: ராமநாதபுரம்மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி, பொக்கனாரேந்தல், மேலஅரும்பூர், அருங்குளம், திருப்புல்லாணி, புல்லக்கடம்பன்,புல்லுகுடி, புல்லுார், புல்லங்குடி, ஆகிய இடங்களில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கலையூரில் கண்டுபிடிக்கப்பட்ட சிலை 2 அடி உயரம் ஒன்றரை அடி அகலம் உள்ளது. முழுவதும் கருங்கல்லால் ஆனது.
இச்சிலையில் அசோகமரத்தில் வளைந்த கிளைகளின் கீழ் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது. பிரபாவளியின் உள்ளே அமர்ந்த நிலையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் இருந்திருக்க வேண்டும். தீர்த்தங்கரர் இருந்த பகுதி முழுவதும் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரரின் இரு பக்கமும் சாமரம் வீசும் இரு இயக்கர்களின் சிற்பங்கள் இருக்கும். இயக்கன் சிற்பமும், தீர்த்தங்கரரின் கீழ்ப்பகுதியும் உடைத்து தனியாக்கப்பட்டுள்ளது. பிரபாவளியின் மேல் பகுதியில் சந்திராதித்தம், நித்தியவிநோதம், சகலபாசனம் ஆகியவற்றை குறிக்கும் முக்குடை என்ற அமைப்பு உள்ளது. முக்குடை என்பது சமண மதத்தின் சின்னமாகும். இச்சிற்பத்தின் அமைப்பினை கொண்டு சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பமாக இருக்கும், என யூகிக்கலாம்.
இதன் காலம் கி.பி.,10 ம் நுாற்றாண்டாக கருதலாம். இக்கோயில் வளாகத்தில் மணற்பாறையில் செதுக்கப்பட்ட பூரணி, பொற்கலையுடன் காட்சி தரும் சிறிய அளவிலான அய்யனார் சிற்பம் ஒன்று மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். சைவ, வைணவ சமயங்களின் மறுமலர்ச்சி காலத்தில் சமண மதம் வலுவிழந்து, அதனைப்பின்பற்றுவோர் இல்லாத நிலையில், பிற மதத்தினரால் தீர்த்தங்கரரின் சிற்பம் உடைக்கப்பட்டிருக்கலாம். திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம், பொக்கனாரேந்தல், ஆகிய பகுதிகளிலும் இது போன்ற சமண தீர்த்தங்கரர்களின் உடைந்த சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் தலை இல்லாதவை. பொக்கனாரேந்தலில் உள்ள சிற்பம் மலைமேல் சாத்துடையார் என்ற அய்யனார் கோயில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.