பதிவு செய்த நாள்
21
ஆக
2019
01:08
காரமடை: காரமடையிலுள்ள ஸ்ரீ ஜெய மாருதி ராகவேந்திரர் திருக்கோவிலில், ஆராதனை விழா நடந்தது.ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி, 1671 ஆம் ஆண்டு விரோதி வருடம் கிருஷ்ண பட்ச துவிதியை திதியில், ஆந்திராவிலுள்ள கர்ணுால் மாவட்டத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் ஜீவ சமாதி அடைந்தார்.
தற்போது மந்திராலயம் என்றழைக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மந்திராலயத்திலிருந்து மிருத்திகா எனும் மண் எடுத்து நாட்டின் பல பகுதிகளில், பிருந்தாவனங்கள் ஏற்படுத்தப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 348 வது ஜீவ சமாதியான தினம், அனைத்து பிருந்தாவனங்களிலும் ஆராதனை விழாவாக நடைபெற்றது.காரமடை ஸ்ரீ ஜெயமாருதி ஸ்ரீராகவேந்திரர் திருக்கோவிலில் ஆறாம் ஆண்டு துவக்க விழா, மற்றும் ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. மங்கள இசை, சுப்ரபாதம், கணபதி ஹோமம், சுதர்ஷன ஹோமம், லட்சுமி நரசிம்ம ஹோமம், ராகவேந்திரர் மூல மந்திர ஹோமம், திரு விளக்கு பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் அன்னதானத்துடன் வைபவம் நிறைவடைந்தது. விழா ஏற்பாட்டை ஸ்ரீ ஜெய மாருதி ஸ்ரீ ராகவேந்திரர் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
சூலுார்: சூலுார் கலங்கல் சாலையிலுள்ள ராகவேந்திர சுவாமி மூலமிருத்திகா பிருந்தாவனம்பிரசித்தி பெற்றது. இங்கு, சுவாமியின், 348 வது ஆராதனை விழா பூஜைகள் மூன்று நாட்கள் நடந்தன. கோமாதா பூஜையுடன் துவங்கிய விழாவில் சிறப்பு அலங்கார அர்ச்சனை, கனகாபிஷேகம் அலங்கார பந்தி, பிரகலாதர் பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. மூன்று நாட்களும் பக்தி சொற்பொழிவுகள்,பரதநாட்டியம், பக்தி மெல்லிசை, பஜனை மற்றும் கலைநிகழ்ச்சிகள்நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.