உளுந்தூர்பேட்டை: பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீ ஐயனார் கருமியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீ ஐயனார் கருமியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. அதனையொட்டி கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 13. 14, 15ம் தேதிகளில் கருமியம்மன் கேடயம் வாகனத்தில் உற்சவம் நடந்தது. 16, 17, 18ம் தேதிகளில் சிங்க வாகனத்தில் அம்மன் உற்சவம் நடந்தது.
நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் 65 அடி உயர மகாமேருவில் ஸ்ரீவிநாயகர் ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ கருமியம்மன் சுவாமிகள் வீதியுலா நடந்தது. அப்போது கருமியம்மன் கோவிலில் இருந்து ஏராளமானோர் தீப்பந்தங்களை ஏந்தியவாறு மகாமேர் வரை வந்தனர். அதன் பின்னரே மகாமேர் புறப்பட்டு வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் உச்சிமெலியில் எல்லையில் அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம் 3 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தேரோட்டம் மாரியம்மன் கோவில் அருகே இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.