பதிவு செய்த நாள்
22
ஆக
2019
12:08
அரூர்: இருளப்பட்டியில், நேற்று நடந்த, காணியம்மன் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில், காணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர்த்திருவிழா கடந்த, 13ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 15ல், கொடியேற்றுதல், 19ல், சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. விழாவின், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காணியம்மன் தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிலை சுற்றி வந்து, நிலை நிறுத்தினர். தேரின் மீது, உப்பு, மிளகு, முத்துக்கொட்டை மற்றும் நவதானியங்களை இறைத்து, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், அரூர் கிளை சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று முதல், வரும், 25 வரை, புதுப்பட்டி மற்றும் பாப்பம்பாடியில் தேர்கடை திருவிழாவும், பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, தோளனூரில் எருது விடுதல், முனி பிடிக்கும் நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு விழா நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, அ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, பாப்பம்பாடி ஆகிய, ஆறு பஞ்., சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.